Thursday, December 31, 2009

சினிமா பார்த்தால் 1200 ரூபாய் ???


என்னடா இது ? நம்மதானே காசு குடுத்து சினிமா பாக்கணும். திருட்டு டிவிடியிலே பாக்கறதுன்னா கூட, நம்மதானே காசு செலவு பண்ணணும்.

சினிமா பாக்க 1200 ரூபாய் எவன் தருவான் ? ஒரு வேளை “சவுக்கு“ தளத்தில் இருக்கும் ஆட்கள் லூசாயிட்டாங்களா ? என்று ஆச்சர்யமாக இருக்குமே ?

பொய் அல்ல நண்பர்களே. உண்மை. தமிழ் சினிமா பார்த்தால் 1200 ரூபாய் கண்டிப்பாக வழங்கப் படும். “சவுக்கு“ தளத்தால் அல்ல.


தமிழ்நாடு அரசால். “மக்கள் வரிப்பணத்திலிருந்து வழங்கப் படும்.

அதற்கு என்ன செய்ய வேண்டும் ?


பெரிய கஷ்டம் இல்லை. தமிழக அரசு அமைக்கும் திரைப்பட விருதுகளுக்கான தேர்வுக்குழுவில் உறுப்பினராக வேண்டும். அவ்வளவுதான். அதிக கஷ்டம் இல்லை. உறுப்பினர் ஆகி விட்டால், ஒரு திரைப்படம் பார்க்க ரூ.1000/- மற்றும் போக்குவரத்துப் படியாக ரூ.200/-ம் வழங்கப் படும்.

2007 மற்றும் 2008 ஆண்டுகளுக்கான விருதுகள் தேர்ந்தெடுக்கப் பட்டு வழங்கப் பட்டும் விட்டன. அதனால் 2009 ஆண்டுக்கான திரைப்படங்களை தேர்ந்தெடுக்க விருதுக் குழு அமைக்கப் படும் முன் முந்துங்கள் வாசகர்களே. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இடம் கிடைக்கும்.

இல்லையென்றால் பழைய தேர்வுக் குழுவையே 2009 ஆண்டுக்கான திரைப்படங்களையும் தேர்வு செய்ய அரசு பணிக்கலாம். ஏனெனில், 2007 மற்றும் 2008 ஆண்டுகளுக்கான தமிழக அரசு விருதுகளை தேர்ந்தெடுத்தது ஒரே குழுதான்.


சரி. இந்த இரண்டு ஆண்டு திரைப்படங்களை பார்த்து ஒரு படத்துக்கு 1200 ரூபாய் சம்பாதித்தவர்கள் யார் என்று பார்க்கலாமா ?


முதலில் வருபவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி.அழகுமலை கருப்பன் செட்டியார் ராஜன் என்ற ஏ.கே.ராஜன். 1976 முதல் 1987 வரை கட்டக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். ஏ.கே.ராஜன் செப்டம்பர் 2000த்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப் பட்டார். அதற்கு முன், தமிழக அரசின் சட்டத்துறை செயலாளராகவும், மாவட்ட நீதிபதியாகவும் செயல்பட்டுள்ளார். ஜனவரி 2005ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.


ஓய்வு பெற்ற உடனேயே மத்திய அரசின் கடல்சார் உயிரின வளர்ப்பு ஆணையத்தின் (Coastal Acquaculture Authority) தலைவராக பொறுப்பேற்றார். சட்டப் பேராசிரிராகவும், நீதிபதியாகவும் இருந்தவருக்கு, விலங்கியல் தொடர்பான ஆணையத்தின் தலைவராக இருக்க என்ன தகுதி இருக்கிறது என்றெல்லாம் அதிகப்பிரசங்கித்தனமான கேள்விகளை கேட்கக் கூடாது.

ஏ.கே.ராஜனுக்கு அடுத்த பதவி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்திற்கு ஏற்ற பாடத்திட்டங்களை உருவாக்கும் குழுவின் தலைவர், சட்டம் பயின்றவர் கோவில் பூசாரிக்கான பாடத்திட்டங்களை உருவாக்கும் குழுவின் தலைவர். எப்படி இருக்கிறது ?


ஏ.கே.ராஜன் அலங்கரித்த அடுத்த பதவி, தமிழக அரசு அமைத்த நிர்வாகச் சீர்திருத்தக் குழுவின் தலைவர். இதற்கு அடுத்தபடியாகத்தான் ஏ.கே.ராஜன் திரைப்பட விருதுக் குழுவின் தலைவராக நியமிக்கப் பட்டார்.


அடுத்த உறுப்பினர் எழுத்தாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் தங்கர் பச்சான்.

திரைப்பட நடிகர் மற்றும் திமுக பிரமுகர் வாகை சந்திரசேகர்.

திரைப்பட நடிகர் மற்றும் நடிகர் கமலகாசனின் அண்ணன் சாருஹாசன்.

திரைப்பட இயக்குநர் மற்றும் கருணாநிதியின் நெருங்கிய உறவினர் இயக்குநர் அமிர்தம்.


திரைப்பட பாடலாசிரியர், கவிஞர் மற்றும் கருணாநிதியின் விசிறி அறிவுமதி.


சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் மற்றும் கருணாநிதியின் தீவிர ரசிகர் நடராஜன்

திரைப்பட முன்னாள் இசையமைப்பாளர் “தேனிசைத் தென்றல்“ தேவா.

மற்ற சாதியினருக்கு பிரதிநிதித்துவம் வழங்கி விட்டு, என்னதான் பெரியாரியம் பேசினாலும், பார்ப்பரோடு சமரசம் செய்து கொள்ள வேண்டுமல்லவா ? மேலும் ரஜினியோடு உறவு ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக இருக்கும் என்பதால் ஒய்.ஜி.மகேந்திரன்.


“மானாட மயிலாட“ நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து நிகழ்ச்சியின் .ட்டி.ஆர்.பியை கூட்ட உதவி செய்ததற்காக குஷ்பூ.


உலக சினிமா அனைத்தையும் கற்று அறிந்து, தமிழ்த் திரைப்படங்களில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கிய “குமரிமுத்து“.


அடுத்து, சம்பிரதாயமாக செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மற்றும் எம்.ஜி.ஆர் அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன முதல்வர்கள்.


இந்த 13 உறுப்பினர்களுக்கு தலைவர்தான் நீதியரசர் (?????) ஏ.கே.ராஜன். இந்த உறுப்பினர்கள்தான் 2007 மற்றும் 2008 ஆண்டுகளில் வெளியான தமிழ்ப் படங்களை தேர்ந்தெடுத்தார்கள்.

2007ல் வெளியான மொத்த தமிழ்ப்படங்களின் எண்ணிக்கை 111, 2008ல் வெளியான மொத்த தமிழ்ப்படங்களின் எண்ணிக்கை 118. சராசரியாக ஓரு ஆண்டுக்கு 110 படங்கள் என்று வைத்துக் கொண்டாலும் இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து 220 படங்கள். 220

படங்களை பார்க்க 13 உறுப்பினர்களுக்கும் வழங்கப் பட்டிருக்கக் கூடிய தொகை 34,32,000 ரூபாய்கள்.

இவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள இந்தத் தொகை போக இந்தத் தேர்வுக் குழுவின் நிர்வாகச் செலவுகள் என்று சில லட்சங்களை எட்டும்.


விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ள படங்களுக்கும் இயக்குநர்களுக்கும் முதல் பரிசு ரூபாய் 2 லட்சம், இரண்டாம் பரிசு ரூபாய் 1 லட்சம், மூன்றாம் பரிசு 75,000 மற்றும் சிறப்பு பரிசு 75,000.

இந்த விருது பெறக் கூடிய படங்கள் இவ்விருதுகளுக்குத் தகுதியானவைதானா என்பதை விருது பெற்ற பட்டியிலில் இருந்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்-2007

சிறந்த படம் - முதல் பரிசு சிவாஜி
சிறந்த படம் - இரண்டாம் பரிசு மொழி
சிறந்த படம் - மூன்றாம் பரிசு பள்ளிக்கூடம்
சிறந்த படம் - சிறப்பு பரிசு பெரியார்
பெண்களைப் பற்றி உயர்வாக
சித்தரிக்கும் படம் - சிறப்புப் பரிசு
மிருகம்
அளவான திட்டமிட்ட குடும்ப நெறிகளைப்
பிரதிபலிக்கின்ற படம்- முதல் பரிசு
தூவானம்
சிறந்த நடிகர் ரஜினிகாந்த் (சிவாஜி)
சிறந்த நடிகை ஜோதிகா (மொழி)
சிறந்த நடிகர் - (சிறப்புப் பரிசு) சத்யராஜ் (பெரியார்)
சிறந்த நடிகை - (சிறப்புப் பரிசு) பத்மப்பிரியா (மிருகம்)
சிறந்த வில்லன் நடிகர் சுமன் (சிவாஜி)
சிறந்த நகைச்சுவை நடிகர் விவேக் (சிவாஜி)
சிறந்த குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் (மொழி)
சிறந்த குணச்சித்திர நடிகை அர்ச்சனா (ஒன்பது ரூபாடீநு நோட்டு)
சிறந்த இயக்குநர் தங்கர் பச்சான் (பள்ளிக்கூடம்)
சிறந்த கதையாசிரியர் எஸ்.எம்.வசந்த் (சத்தம் போடாதே)
சிறந்த உரையாடல் ஆசிரியர் பாலாஜி சக்திவேல் (கல்லூரி)
சிறந்த இசையமைப்பாளர் வித்யாசாகர் (மொழி)

சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து (பெரியார் மற்றும் பல
படங்கள்)
சிறந்த பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் (ஒன்பது ரூபாய் நோட்டு)
சிறந்த பின்னணிப் பாடகி சின்மயி (சிவாஜி)
சிறந்த ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா (பில்லா)
சிறந்த ஒலிப்பதிவாளர் யு.கே.அய்யப்பன் (பில்லா)
சிறந்த திரைப்பட தொகுப்பாளர் சதீஷ் குரோசோவா
(சத்தம் போடாதே)
சிறந்த கலை இயக்குநர் தோட்டா தரணி (சிவாஜி)
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு
(கருப்பசாமி குத்தகைதாரர்)
சிறந்த நடன ஆசிரியர் பிருந்தா (தீபாவளி)
சிறந்த ஒப்பனைக் கலைஞர் ராஜேந்திரன் (பெரியார்)
சிறந்த தையற் கலைஞர் அனுவர்தன் (பில்லா)

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)
கே.பி.சேகர் (மலரினும் மெல்லிய)

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்
(பெண்)
மகாலட்சுமி கண்ணன் (மிருகம்)


தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்-2008


சிறந்த படம் - முதல் பரிசு தசாவதாரம்
சிறந்த படம் - இரண்டாம் பரிசு அபியும் நானும்
சிறந்த படம் - மூன்றாம் பரிசு சந்தோஷ் சுப்பிரமணியம்
சிறந்த படம் - சிறப்பு பரிசு மெய்ப்பொருள்
பெண்களைப் பற்றி உயர்வாக
சித்தரிக்கும் படம் - சிறப்புப் பரிசு பூ
அளவான திட்டமிட்ட குடும்ப நெறிகளைப்
பிரதிபலிக்கின்ற படம்- முதல் பரிசு
வல்லமை தாராயோ
அளவான திட்டமிட்ட குடும்ப நெறிகளைப்
பிரதிபலிக்கின்ற படம்- இரண்டாம் பரிசு
வண்ணத்துப் பூச்சி
சிறந்த நடிகர் கமல்ஹாசன் (தசாவதாரம்)
சிறந்த நடிகை சிநேகா (பிரிவோம் சந்திப்போம்)
சிறந்த நடிகர் - (சிறப்புப் பரிசு) சூர்யா (வாரணம் ஆயிரம்)
சிறந்த நடிகை - (சிறப்புப் பரிசு) த்ரிஷா (அபியும் நானும்)
சிறந்த வில்லன் நடிகர் ராஜேந்திரன் (நான் கடவுள்)
சிறந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு (காத்தவராயன்)
சிறந்த நகைச்சுவை நடிகை கோவை சரளா (உளியின் ஓசை)
சிறந்த குணச்சித்திர நடிகர் பிரகாஷ் ராஜ் (பல படங்கள்)
சிறந்த குணச்சித்திர நடிகை பூஜா (நான் கடவுள்)
சிறந்த இயக்குநர் ராதா மோகன் (நான் கடவுள்)
சிறந்த கதையாசிரியர் தமிழ்ச்செல்வன் (பூ)

சிறந்த உரையாடல் ஆசிரியர்
கலைஞர் மு.கருணாநிதி (உளியின் ஓசை)

சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா (அஜந்தா)
சிறந்த பாடலாசிரியர் வாலி (தசாவதாரம்)
சிறந்த பின்னணிப் பாடகர் பெள்ளிராஜ் (சுப்பிரமணியபுரம்)
சிறந்த பின்னணிப் பாடகி மஹதி (நெஞ்சத்தை கிள்ளாதே)
சிறந்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ.வில்சன் (நான் கடவுள்)
சிறந்த ஒலிப்பதிவாளர் ரவி (வாரணம் ஆயிரம்)
சிறந்த திரைப்பட தொகுப்பாளர் ப்ரவீன்-ஸ்ரீகாந்த் (சரோஜா)
சிறந்த கலை இயக்குநர் ராஜீவன் (வாரணம் ஆயிரம்)
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் (சிலம்பாட்டம்)
சிறந்த நடன ஆசிரியர் சிவசங்கர் (உளியின் ஓசை)
சிறந்த ஒப்பனைக் கலைஞர் மைக்கேல் வெஸ்ட்மோர்-
கோதண்டபாணி (தசாவதாரம்)
சிறந்த தையற் கலைஞர் ரவீந்திரன் (பிரிவோம் சந்திப்போம்)
சிறந்த குழந்தை நட்சத்திரம் ஸ்ரீலட்சுமி (வண்ணத்துப் பூச்சி )
சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)
எம்.ஏ.பிரகாஷ் (கி.மு)
சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்)
சவிதா (பல படங்கள்)

மேற்கூறிய விருதுப் பட்டியலை உற்று நோக்கினால் விருது பெற்ற பெரும்பான்மை யானவர்கள், கருணாநிதியின் அடிவருடிகளாகவும், கைத்தடிகளாகவும் இருப்பவர்கள் என்பது தெரியும்.

தமிழ்த் திரைப்பட உலகை விட்டு ஏறக்குறைய ஓரம் கட்டப் பட்டு, விட்ட வைரமுத்துவும் வாலியும் சிறந்த பாடலாசிரியர்களாம். இவர்கள் ஏன் சிறந்த பாடலாசிரியர்கள் என்றால் கருணாநிதியைப் துதிபாடி எப்போது கவியரங்கம் நடத்தினாலும் முதலில் பாடுவது நான்தான் என்று போட்டி போடும் வாலிக்கும் வைரமுத்துவுக்கும் அதற்காகத் தான் விருது.


அடுத்த கூத்தை பார்த்தீர்களென்றால் குழு உறுப்பினராக இருக்கும் தங்கர் பச்சான் சிறந்த இயக்குநராம்.


அடுத்த தமாஷ் கருணாநிதி “சிறந்த உரையாடல் ஆசிரியராம்“. அந்த ஆண்டு வெளியான நான் கடவுள் படத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் வசனங்கள் படத்தின் மிகப் பெரிய பலம் என்பதை திரைப்படம் பார்த்த அனைவரும் அறிவார்கள்.





ஆனால் யாருமே பார்க்காத, “உளியின் ஓசை“ படத்துக்கு சிறந்த உரையாடல் விருது.
இப்படி தகுதியே இல்லாமல் மனம் போன போக்கில் இந்த விருதுகள் அள்ளி வீசப்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆனால் தகுதி இல்லாத ஒரு நபருக்கு விருது வழங்கப் பட்டுள்ளது என்று கருணாநிதி நேற்று புத்தகக் கண்காட்சியில் புலம்பிய புலம்பல் என்னவென்று பாருங்கள்.

குன்றக்குடி அடிகளார் என்னை பார்க்கும்போதெல்லாம் ஒரு புத்தகம் தருவார். ஒரு தடவை, ‘சென்னை வரலாறு’ என்ற ஒரு புத்தகத்தை கொடுத்தார். அதற்கு கடந்த ஆண்டோ அதற்கு முந்தைய ஆண்டோ இங்கு விருது வழங்கப்பட்டுள்ளது. புத்தகத்துக்கு உரியவர் பெற்றுள்ளார். 600 பக்கம் கொண்ட அந்த புத்தகத்தை முழுவதும் படித்தேன்.

அதில், சென்னை கால வரிசை என்ற ஒரு தொகுப்பு உள்ளது. அதில், போர்த்துக்கீசியர், ஆங்கிலேயர் ஆண்ட கால வரிசை கொடுக்கப்பட்டுள்ளது. 1967 ல் திமுக ஆட்சியில் அமர்ந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது முதல்வரான அண்ணா பெயர் குறிப்பிடவில்லை. 1969ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நான் முதல்வரானேன். அது பற்றியும் குறிப்பு இல்லை. 1977ல் என் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதல்வரானார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

1991ல் ஒரு மாதமே முதல்வராக இருந்த ஜானகி அம்மையார் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 1996ல் நான்காவது முறையாக நான் முதல்வர் ஆனேன். அது பற்றி குறிப்பு இல்லை. மாறாக கோயம்பேடு காய்கறி அங்காடி திறக்கப்பட்ட செய்தி குறிப்பிடப்பட்டு இருந்தது.
1998ல் இந்தியாவிலேயே முதன் முதலாக டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. தொடங்கியது யார் என்ற விவரமும் அதில் இல்லை.


எனது பெயர் விடுபடுவதற்கு அப்படி என்ன தவறை கருணாநிதி செய்து விட்டான். தமிழனாக, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து விட்டான் என்பதை விட, வேறு என்ன தாழ்வு இருக்கிறது. எனவே, விருது வழங்கும்போது 2 அல்லது 3 பேர் உட்கார்ந்து விருதுக்குரிய புத்தகம் பற்றி ஆய்வு செய்ய வேண்டும். எழுதியவர் யார்? அவர் விருது பெற தகுதியானவர்தானா? என்று எண்ணி பார்க்க வேண்டாமா? அடுத்து வரும் ஆண்டுகளில் இன்னும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை சொல்கிறேன். தமிழகத்தின் நன்மைக்காக இதை கூறுகிறேன். “


என்று புலம்பித் தள்ளியுள்ளார் கருணாநிதி.

தமிழகத்தின் நன்மைக்காக கூறுகிறாராம். தமிழகத்தின் நன்மையா ? கருணாநிதியின் ஈகோவின் நன்மையா ?

கருணாநிதியின் புலம்பலுக்கு காரணம் முத்தையாவின் Madras Rediscovered புத்தகத்தின் பின்னிணைப்பாக ஒரு கால வரிசை இடம்பெற்றிருக்கிறது. அதில் தி.மு.க ஆட்சிக்கு வந்த வருடம் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால் கலைஞர் பதவியேற்ற விவரம் இருக்காது. அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்த விவரம் வரும்போது எம்.ஜி.ஆர். முதல்வரான தகவல் இருக்கும். எம்.ஜி.ஆருக்குப் பின்னால் ஜானகி முதல்வரான விவரம் இருக்கும். திரும்பவும் கலைஞர் முதல்வரான தகவல் இருக்காது.

அம்பேத்கர் பெயரால் சட்டக்கல்லூரி தொடங்கப்பட்ட விவரம் இருக்கும். தொடங்கி வைத்தவர் கலைஞர் என்று இருக்காது. முத்தையாவின் புத்தகத்தில் கலைஞர் குறிப்பிட்ட விடுபடல்கள் இருப்பது உண்மையே.


பபாசி விருது வழங்கியது Madras Rediscovered என்ற ஆங்கில நூலுக்குத் தான் என்றாலும், கருணாநிதி, அந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை படித்து விட்டு இப்படி அங்கலாய்த்துள்ளார்.
ஆனால் அந்நூல், தமிழகத்தின் அரசியல் வரலாற்று நூல் அல்ல. சென்னை நகரின் வரலாறைச் சொல்லும் புத்தகம் அது.

கலைஞர் பெயர் மட்டுமல்ல. காமராஜ், ராஜாஜி, பக்தவத்சலம் போன்றவர்களின் பெயர்களும் அந்த நூலில் உள்ள கால வரிசையில் இருக்காது.



தவறான ஒரு நபருக்கு விருது வழங்கப் பட்டு விட்டது என்று இப்படி குதிக்கிறாரே கருணாநிதி. உளியின் ஓசை படத்துக்கு சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதுக்கு அவர் தகுதியானவர்தானா ? மேலும், கருணாநிதியின் புலம்பலில் இருக்கும் விஷமத்தனத்தை கவனிக்க வேண்டும். பலரின் பெயர் விடுபட்டுள்ளது ஒரு இயல்பான விஷயமாக இருந்தாலும் கருணாநிதி என்ன கூறுகிறார் ?




“எனது பெயர் விடுபடுவதற்கு அப்படி என்ன தவறை கருணாநிதி செய்து விட்டான். தமிழனாக, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து விட்டான் என்பதை விட, வேறு என்ன தாழ்வு இருக்கிறது. “

இதில் சாதி எங்கே இருக்கிறது ? கருணாநிதி பிற்பட்ட சமுதாயத்தில் பிறந்ததனாலா பெயர் விடுபட்டது ? கருணாநிதி தமிழன் என்பதாலா பெயர் விடுபட்டுப் போனது ? சென்னை நகரின் வரலாறை எழுதுகையில் கருணாநிதி கோயம்பேடு மார்க்கெட்டை திறந்து வைத்தார் என்ற செய்தியை எழுதவில்லை என்பதற்கு அவர் பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால்தான் என்று புலம்பும் நபரின் விஷமத்தனம் தான், இன்று தமிழ்நாட்டை சீரழித்துக் கொண்டு இருக்கிறது.



நூலை எழுதிய முத்தையா என்ன மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரா ? கருணாநிதியைப் போலவே நூலின் ஆசிரியர் முத்தையாவும் ஒரு தமிழர்தானே ? அப்புறம் இதில் தமிழன் என்பதற்காக என் பெயர் விடுபட்டு விட்டது என்பதற்கு என்ன அடிப்படை இருக்கிறது ? இந்தப் புலம்பல் எல்லாம் கருணாநிதியின் விஷமத்தனம் மட்டுமே.

ஒன்றும் இல்லாத ஒரு விஷயத்தில் சாதியையையும் இனத்தையும் புகுத்தும் கருணாநிதியின் அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்வது ?


இப்படி ஒரு ஈகோவோடு இருக்கும் ஒரு நபரின் கையில் மாட்டிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் சாபக்கேட்டை என்னவென்று சொல்வது ?


தனக்கு விருது வழங்க வேண்டும் என்பதற்காகவே ஒரு விருதுக் குழுவை ஏற்படுத்தி அதற்கு மக்கள் வரிப்பணம் ஏறக்குறைய ஒன்றரை கோடியை அள்ளி வீசியுள்ளார் கருணாநிதி.

இவர்களின் ஆடம்பரத்திற்கும், புகழ் வெறிக்கும் நமது வரிப்பணம்தான் செலவாகிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.

நெஞ்சு பொறுக்குதில்லையே…
இந்த நிலைக்கெட்ட மனிதரை நினைத்து விட்டால்.


சவுக்கு

Tuesday, December 29, 2009

திவாரி லேகியம்.. … … … …. ?




நாராயண் தத் திவாரி என்ற ஆந்திர மாநில முன்னாள் கவர்னரைப் பற்றி சமீபத்தில் படித்திருப்பீர்கள். இவரின் ஆபாச வீடியோ தொலைக் காட்சியில் ஒளிபரப்பப் பட்டவுடன், அந்த வீடியோ பொய் என்று கூறியவர், காங்கிரஸ் மேலிடத்தின் நெருக்கடி காரணமாக ராஜினாமா செய்தார்.


தனது 17வது வயது முதல் தொடர்ந்து பொது வாழ்வில் ஈடுபட்டு வந்துள்ள திவாரி, தற்பொழுது கட்டாய ஓய்வு அளிக்கப் பட்டுள்ளதால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகக் கூடும். அதைத் தவிர்க்க “சவுக்கு“ சார்பில் அவருக்கு ஆலோசனைகள் வழங்கப் படுகிறது.


தமிழ்த் தொலைக்காட்சிகளில் இரவு நேரங்களில் “இனிய இல்லறம்“, “அந்தரங்க சந்தேகம்“ போன்ற பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கு மனவியல் மருத்துவர் விளக்கம் அளிக்கும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளில் பல இளைஞர்கள் “ஆண்மைக் குறைவு உள்ளது, எனக்கு திருமணம் ஆகப் போகிறது, என்ன செய்வது டாக்டர் ? “ என்று அச்சத்தோடு கேட்கின்றனர்.

இந்நிலையில், திவாரி மூன்று பெண்களோடு சல்லாபத்தில் ஈடுபட்டார் என்ற தகவலைக் கேட்டு இளைஞர்களை ஆட்டிப் படைக்கும் கேள்வி “எப்படி ? “ என்பதுதான். அதனால், இது போன்ற நிகழ்ச்சிகளில் என்.டி.திவாரி பங்கேற்று நேரடி விளக்கம் அளித்தால் பல இளைஞர்களுக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கும் வகையில் இருக்கும்.

திவாரி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் துவங்கினால், “சேலம் சித்த மருத்துவர் சிவராஜ்“ போன்ற பல மருத்துவர்கள், துண்டைக் காணோம், துணியைக் காணோம்“ என்று ஓடத் துவங்குவார்கள். உண்மையான மனவியல் மருத்துவர்களான டாக்டர்.நாராயண ரெட்டி, டாக்டர் ஷாலினி போன்றோருக்கு தொழில் படுத்து விடும்.


அடுத்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், வயாகரா போன்ற ஊக்க மருந்துகளுக்கு இருக்கும் மிகப் பெரிய சந்தை பல மருந்துக் கம்பேனிகளை, இது போன்ற ஊக்க மருந்து தயாரிப்பில் இறங்கத் தூண்டியுள்ளது.

“திவாரி லேகியம்“ என்ற பெயரில், என்.டி.திவாரியே, லேகியம் தயாரித்து விற்கத் துவங்கினால், இந்தியாவின் மிகப் பெரிய தொழில் அதிபர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் திவாரி இடம் பிடிக்க வாய்ப்பு உண்டு.

இந்த லேகியத்தை, சன் குழுமம், வினியோகஸ்த உரிமையை வாங்கி, அதற்கு, தனது சேனல்கள் அனைத்திலும், ப்ரைம் டைமில் விளம்பரங்கள் செய்யவும் வாய்ப்பு உண்டு.

அடுத்து, “என் வாழ்க்கையில்“ என்ற தலைப்பில் திவாரியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதப் போகிறேன் என்று அறிவிப்பு வெளியிடலாம். இந்த அறிவிப்பு வெளியிட்டதும் இப்புத்தகம் மிகப் பெரிய வெற்றி வெளியீடாக இருக்கும் என்று, இந்தியாவின் அனைத்து பதிப்பகங்களும் போட்டி போட்டுக் கொண்டு இப்புத்தகத்தை வெளியிட முன் வரும்.

வெளிவந்த ஒரு வாரத்திலேயே இப்புத்தகம் டாப் 10 லிஸ்டில் முதலிடத்தை பெறும். பிறகு, இப்புத்தகத்தை திரைப்படமாக எடுக்க இந்தியாவின் பிரபல இயக்குநர்களான ராம் கோபால் வர்மா, சேகர் கபூர், தீபா மேத்தா, மணி ரத்னம் போன்ற இயக்குநர்கள் முன் வரக் கூடும். அத்திரைப்படம், மிகுந்த பொருட்செலவே இல்லாமல் 5 அல்லது 6 அறைக்குள்ளேயே எடுத்து முடித்து விடலாம். திவாரியின் அரசியல் செல்வாக்கை வைத்து, சென்சாரிலும், அதிக வெட்டு இல்லாமல், படத்தை வெளியிட வாய்ப்பு உண்டு.



திவாரி வேறு யாரோ என்று நினைத்து கட்டிப் பிடித்து விட்டாரோ ?


நீண்ட நாட்கள் அரசியலில் இருப்பதனால், திவாரிக்கு மற்ற அரசியல் தலைவர்களைப் பற்றி நன்கு தெரியும். அதனால், இப்போது இவர் மீது குற்றச் சாட்டு சுமத்தப் பட்டுள்ளதைத் தொடர்ந்து, நான் மட்டும் இப்படி இல்லை, இந்த தலைவர் இப்படி, அந்த தலைவர் அப்படி, என்று, மற்ற அரசியல் கட்சித் தலைவர்களைப் பற்றி பல கிளுகிளுப்பான கதைகளை எடுத்து வெளிவிடலாம்.

பத்திரிக்கையாளர்கள் திவாரியை மொய்த்துக் கொள்வார்கள். இந்தியாவில் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விட்டது போல, பத்திரிக்கைகள் இப்பிரச்சினைகளை முதல் பக்கத்திலும், ப்ரைம் டைமிலும் வெளியிட்டு முக்கியத்துவம் தரும்.


செக்ஸ் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு என திவாரி பத்திரிக்கைகளில் தொடர் எழுதலாம் இவரின் “விளையாட்டுக்களை“ அறிந்த வாசகர்கள், இத்தொடருக்கு பெருமளவில் ஆதரவு தருவர். இளைஞர்கள், முதியவர்கள், என அனைத்து தரப்பிலிருந்தும் திவாரிக்கு ஆதரவு பெருகும்.

திவாரியின் லீலைகளைப் பற்றி செய்தி ஒளிபரப்பிய சிஎன்என்.ஐபிஎன் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய், வாழ்க்கை 86 வயதில் தொடங்குகிறது என்று திவாரி நிரூபித்துவிட்டார் என்று கூறியதில் இருந்து திவாரிக்கு ஆதரவு எப்படி பெருகும் என்பதை விளக்கத் தேவையில்லை.


தமிழ்த் தொலைக்காட்சிகளில் சமீபத்தில் பிரபலமடைந்த நிகழ்ச்சிகளான “இப்படிக்கு ரோஸ்“, “கருத்து யுத்தம்“ “நீயா நானா ? “ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கலாம். அந்நிகழ்ச்சிகளில், அனைத்து தலைப்புகளும், பாலியல் தொடர்பானவைகளாகப் பார்த்துக் கொண்டால் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் வானத்தைப் பிய்த்துக் கொண்டு பறக்கும்.


இந்த ஆலோசனைகளை மேற்கொண்டால் திவாரிக்கு அளிக்கப் பட்டிருக்கும் கட்டாய ஓய்வு, அவருக்கு எந்த விதத்திலும் மன உளைச்சலை தராது.


சரி. தமாஷ் போதும். இப்போது சற்று சீரியசாக இந்த விஷயத்தைப் பார்ப்போம்.


இந்த விஷயத்தை ஒரு தனி நபரின் பாலியல் விவகாரங்களாக நாம் பார்க்க முடியாது. ஆந்திர மாநில ஆளுநராக இருந்த திவாரியை, விரும்பி பெண்கள் அவரைத் தேடி வந்திருக்கிறார்கள் என்றால் அதை ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயமாக பார்க்கலாம்.

ஆனால், திவாரி, தான் ஆளுனர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி பெண்களை பலவந்தமாக ஆளுனர் மாளிகைக்கு அழைத்து வந்துள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.


சரி. இவ்வாறு பெண்கள் உத்தராகாண்ட் மாநிலத்திலிருந்து ஆந்திராவுக்கு வந்து செல்லும் போது அவர்களுக்கு பணம் வழங்க வேண்டாமா ? கொடுத்திருப்பாரல்லவா திவாரி ? அவர்கள் 2ம் வகுப்பு ரயிலிலா வந்திருப்பார்கள் ? விமானத்திலல்லவா வந்திருப்பார்கள் ?

இந்த அத்தனை செலவுகளையும் திவாரிதானே ஏற்றிருக்க வேண்டும் ? இந்தச் செலவுகளை, திவாரி தனது சொந்தப் பணத்திலா செய்திருப்பார் ? கண்டிப்பாக, அரசாங்கத்தில் எப்போதும் இருக்கும் “இதரச் செலவுகள்“ (Miscellaneous Expenses) என்ற தலைப்பில் எப்படியாவது அரசுக் கணக்கில் எழுதியிருக்க மாட்டார்களா ?

அரசுக் கணக்கில் எழுதினால் அது மக்களின் வரிப்பணம் தானே ?

நமது பணம் தானே ?

இதை எப்படி எளிதாக எடுத்துக் கொள்ள முடியும் ?


இந்த திவாரி எப்படிப்பட்ட மனிதர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். 1975ல் நெருக்கடி நிலை அமலில் இருந்த போது, சஞ்சய் காந்தி உத்திரப் பிரதேசத்துக்கு வருகை தந்தார். அப்போது உத்திரப்பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர் என்.டி.திவாரி.

விமானத்திலிருந்து சஞ்சய் காந்தி இறங்கிய போது திடீரென்று ஓடிச் சென்ற திவாரி, சஞ்சய் காந்தியின் ஷு லேஸ் அவிழ்ந்திருந்ததால் உடனடியாக விமானப் படிக்கட்டிலேயே அந்த லேஸை கட்டி விட்டார். அதிமுக வினதின் காலில் விழும் கலாச்சாரத்திற்கெல்லாம் திவாரி முன்னோடி.


இந்த சர்ச்சைக்குரிய வீடியோவில் திவாரியோடு காட்சியளித்ததாகக் கூறப்படும் மூன்று இளம் பெண்களும், உத்தராகாண்ட் மாநிலத்திலிருந்து திவாரிக்காகவே வரவழைக்கப் பட்டுள்ளனர். உத்தராகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராதிகா என்ற பெண் ஆந்திர ஆளுனர் ஆவதற்கு முன்பே, திவாரிக்கு நெருக்கம் என்று கூறப்படுகிறது.


ஆளுநர் மாளிகையில் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றும் அரவிந்த் சர்மா என்ற அதிகாரி ராதிகா என்ற பெண்ணுடன் மிகுந்த நெருக்கம் என்று கூறப்படுகிறது. இந்த அரவிந்த் சர்மாதான் ராதிகா மூலமாக திவாரிக்கு பெண்களை அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆனந்த் சர்மாவும் ராதிகா அனுப்பி வைத்த பெண்களோடு தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த ராதிகா திவாரியின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றியதற்கான காரணம்.

ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் இரும்புச் சுரங்கத்துக்கான லைசென்ஸை கேட்டிருக்கிறார் ராதிகா. திவாரி இக்கோரிக்கையை அப்போதைய முதல்வர் ராஜசேகர ரெட்டியிடம் தெரிவித்திருக்கிறார்.

திவாரி மீது எப்போதுமே மரியாதை இல்லாத ராஜசேகர ரெட்டி, திவாரியை சட்டையே செய்ய வில்லை. ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பிறகு ராதிகா மீண்டும் சுரங்க லைசென்ஸ் வேண்டி நெருக்கடி கொடுத்துள்ளார்.

சரி, ஒழுங்காக கேட்டால் இந்த ஆள் லைசென்ஸ் தரமாட்டான், இவனை கருப்பு அஞ்சல் செய்யலாம் (அதான் சார் ப்ளாக்மெயில்) என்று முடிவெடுத்த ராதிகா, திவாரியின் காதல் லீலைகளை வீடியோ படமெடுத்திருக்கிறோம், உடனடியாக கடப்பா மாவட்டத்தில் சுரங்கம் வெட்ட லைசென்ஸ் கொடுங்கள் என்று திவாரியின் சிறப்பு அதிகாரி அரவிந்த் சர்மாவுக்கு நெருக்கடி கொடுத்ததகாவும், இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சர்மா, ராதிகாவுக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.


அரவிந்த் சர்மாவின் இந்தக் கொலை மிரட்டலை கண்டு, ஏதும் விபரீதமாக நடக்கப் போகிறது என்று உஷாராகிய ராதிகா, உடனடியாக ஆந்திர மாநிலத்தின் ஆந்திர ஜோதி தொலைக்காட்சி நிலையத்திற்கு சென்று, இந்த வீடியோவை கொடுத்தவுடன் தான், பூகம்பம் கிளம்பியது.


இந்திய ஊடகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும், வெளியில் சொல்லாத ஒரு ரகசிய ஒப்பந்தம் ஒன்று உண்டு. ‘என்னுடைய பொது வாழ்வை பற்றி நீ எழுதலாம், நான் என் படுக்கை அறையில் என்ன செய்கிறேன் என்று நீ எழுதக் கூடாது ‘ என்பது தான் அது.


86 வயதில் இந்த கொட்டும் அறுவைசிகிச்சை (ஸ்டிங் ஆபரேஷன் சார்)ல் சிக்கியிருக்கும் திவாரி, இந்த 86 வயதில் தான் இந்த லீலைகளை ஆரம்பித்திருப்பார் என்றா நினைக்கிறீர்கள் ?


உத்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக மூன்று முறை
நிதி அமைச்சர்
பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்
திட்டக் குழு துணைத் தலைவர்
ராஜ்ய சபை உறுப்பினர்
மத்திய தொழில் துறை அமைச்சர்
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்
வெளியுறவுத் துறை அமைச்சர்

இந்தப் பதவிகளெல்லாம் வகித்த போது திவாரி என்ன செய்திருப்பார் என்று நினைக்கிறீர்கள் ? இந்த லீலைகளை அப்போதெல்லாம் அரங்கேற்றாமலா இருந்திருப்பார் ?

அப்பொழுது இந்தப் பத்திரிக்கைகள் என்ன செய்து கொண்டிருந்தன ? இது போன்ற விஷயங்கள் பத்திரிக்கை உலகத்துக்கு தெரியாமல் இருக்கவே இருக்காது.

ஆனால், எந்தப் பத்திரிக்கையும் இதைப் பற்றி எழுத எவ்வித முயற்சியையும் எடுக்கவே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. அவ்வாறு எந்தப் பத்திரிக்கையாவது “திவாரியின் தீராத விளையாட்டுத்தனத்தைப் “ பற்றி எழுதியிருந்தால் 60 ஆண்டுகளாக திவாரி, அப்பழுக்கில்லாமல் பொது வாழ்வில் இருந்திருக்க முடியுமா ?


உலகில் நீலப்படங்கள் எடுப்பதில் முதன்மையான தேசம் அமெரிக்கா. அமெரிக்காவில் நீலப்பட சந்தையின் மொத்த மதிப்பு எவ்வளவு தெரியுமா ? 4.3 பில்லியன் டாலர்கள். இந்திய ரூபாயில் 2007 கோடி ரூபாய்கள்.

இப்படி நீலப்படமாக எடுத்துத் தள்ளும், அமெரிக்காவின் தலைவர்கள் யாராவது இப்படிப்பட்ட பாலியல் புகாரில் சிக்கினால் உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்கள். பில் கிளின்டன் மோனிகா லெவின்ஸ்கி கதை நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

ஏறக்குறைய பதவி நீக்கம் செய்யும் அளவுக்கு பில் கிளின்டன் நெருக்கடிக்கு தள்ளப் பட்டார். வெளிப்படையாக தொலைக்காட்சியில் தோன்றி, அமெரிக்க மக்களிடம் மன்னிப்பு கோரிய பிறகுதான் அமெரிக்க மக்களின் கோபம் சற்றே தணிந்தது.


அமெரிக்கர்களைப் பொறுத்தவரை, ஒரு சாமான்ய மனிதன் எப்படிப்பட்ட ஒழுக்கக் கேட்டிலும் ஈடுபடலாம். பல முறை விவாகரத்து செய்யலாம். பல பெண்களுடன் / ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளலாம். ஆனால், அவர்களை ஆளும் தலைவன் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஒரு செனட்டர் (நம்ம ஊர் எம்.பிக்கு நிகர்) பாலியல் புகாரில் சிக்கினாலும், உடனடியாக அவரை ஒரு வழி பண்ணி விடுகிறார்கள்.


ஆனால், இந்தியாவில், தலைவர்கள் செய்யும் தவறுகளை, ஒழுக்கக் கேடுகளை, அயோக்கியத்தனத்தை, அக்கிரமங்களை நாம் பொறுத்துக் கொள்கிறோம். ஆனால், ஒரு சாமான்ய மனிதன், நமது அலுவலகத்திலோ, அல்லது வீட்டின் அருகிலோ திருமணத்தை தாண்டியோ, திருமணத்துக்கு முன்போ, அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, பாலியல் உறவில் ஈடுபட்டனர் என்று தெரிய வந்தால், அதைப் பற்றி உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசி, சம்பந்தப்பட்டவர்களை சந்தி சிரிக்க வைத்த பிறகுதான் ஓய்கிறோம்.

சாமான்ய மக்கள் இது போல் தவறுகளைச் செய்கையில் கோபப் படும் நமக்கு, நமது தலைவர்களின் ஒழுக்ககீனங்கள், அலட்சியமாக தோன்றுகின்றன.


திவாரியின் விஷயம் ராதிகா என்ற பெண்ணால் மீடியாவுக்கு கொடுக்கப் பட்டதால் வெளியே வந்தது. ஒரு வேளை ராதிகாவுக்கு கடப்பா மாவட்டத்தில் சுரங்க லைசென்ஸ் வழங்கப் பட்டிருந்தால், இந்த விஷயம் வெளியே வந்திருக்குமா ? நிச்சயம் வந்திருக்காது.


திவாரி மட்டும் தான் இவ்வாறு ஆளுனர் மாளிகையை தவறாக பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்தாரா ? வேறு யாருமே இவ்வாறு செய்யவில்லையா ? இந்தியாவில் ஆளுனர்கள் மட்டும் தான் இவ்வாறான பாலியல் ரீதியான அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகிறார்களா ?

பொது வாழ்வில் இருக்கும் யாரும் இத்தவறுகளை செய்வதில்லையா என்றால் செய்கிறார்கள். தொடர்ந்து, நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இது பற்றிய செய்திகனை வெளியிட வேண்டிய ஊடகங்களின் கனத்த மவுனம்தான் வருத்தம் அளிக்கிறது.


தனிநபரின் ஒழுக்கத்தை விட, நம்மை ஆளும், நமது சட்டங்களை இயற்றும், நம் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் தலைவர்களும், அதிகாரிகளும் ஒழுக்கமாக இருப்பது அவசியமல்லவா ?

இன்று இச்செய்தி வெளியான பிறகும் கூட, சில ஊடகங்கள் இச்செய்தியை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியது தவறு என்று எழுதுகின்றனவே ? நேற்றைய “தினமணி“ நாளேட்டின் தலையங்கம்.

“ஆளுநர் தாய்லாந்து சென்று, ஒரு ஸ்பா-வில் ஓய்வெடுத்து, எப்படி இருந்திருந்தாலும் யாரும் குறைசொல்ல முடியாது. அந்த நாட்டுச் சட்டத்திற்கு அது ஏற்புடையது. ஆளுநர் மாளிகையில் அவர் அவ்வாறு நடந்து கொண்டது முறையற்ற சட்டவிரோதச் செய்கைதான் இன்று பிரச்னையாகியிருக்கிறது. ஆனால், யாரோ ஒரு பெண்மணி கொண்டு வரும் ஒளிக்காட்சிகளை அப்படியே ஒளிபரப்பவும் அதை நியாயப்படுத்தவும் முடியுமென்றால், அத்தகைய ஊடகச் சுதந்திரம் சற்று மிகையாகத்தான் இருக்கிறது. “


இதுபோல, பாலியல் ரீதியாக அதிகார துஷ்பிரயோகம் செய்யும் ஒரு நபரைப் பற்றி ஒரு தொலைக்காட்சி ஒளிக்காட்சிகளை ஒளிபரப்பினால், அது மிகையான ஊடகச் சுதந்திரம் என்று தினமணி கூறுவது எப்படி சரியாகும் ?

இச்செய்தி பொய்யாக இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பெண்மணி மீதும், அந்த தொலைக்காட்சியின் உரிமையாளர் மீதும், கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்பது, அத்தொலைக்காட்சிக்கு தெரியாதா ? தாங்கள் செய்தி வெளியிடுவது ஆளுனருக்கு எதிராக, இதன் விளைவுகள் என்ன என்பதை அத்தொலைக்காட்சி அறியாமலா வெளியிட்டது ?


தினமணியின் நிலைப்பாடு, மிகுந்த குழப்பத்தோடும், அரசியல்வாதிகளின் அநாகரீகங்களுக்கு ஒத்திசை பாடும் தொனியில் உள்ளது.


ஆயுத பேர ஊழலை அம்பலப்படுத்த முயன்ற டெகல்கா இதழும், ராணுவ அதிகாரிகளுக்கு, பாலியல் தொழில் செய்யும் பெண்களை அனுப்பித்தான் இறுதியாக பங்காரு லட்சுமணனை சென்றடைந்தனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

டெகல்கா, ராணுவ அதிகாரிகளுக்கு பெண்களை அனுப்பியது பத்திரிக்கை தர்மம் அல்ல, இது தவறு என்று அப்போதும் சில ஊடகங்கள் எழுதின, பேசின. டெகல்கா பெண்களை அனுப்பியது தவறென்றால், ஆயுதம் வாங்க ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதற்காக எனக்கு பெண்களை அனுப்பு என்று சொன்ன ராணுவ அதிகாரியை என்ன சொல்வது ?

டெகல்கா அப்படி பெண்களை அனுப்பி இவர்களின் முகத்திரையை கிழிக்க வில்லை என்றால், இன்று வரை அந்த ராணுவ அதிகாரிகள் யோக்கிய வேஷம் தானே போட்டுக் கொண்டிருப்பார்கள் ?


ஊடகங்கள் இது போன்ற இரட்டை நிலைபாடு எடுத்தால் என்.டி.திவாரி போல, இந்தியா முழுவதும் பல திவாரிகள் உருவாகுவார்கள். இந்தியா முழுக்க பல திவாரிகள் உருவானால், அவர்களை குடியமர்த்த இன்னும் நிறைய ராஜ்பவன்கள் கட்ட வேண்டியது வரும். அதற்கும் மக்கள் வரிப்பணம் தான் செலவு செய்யப் படும்.

சவுக்கு



வாக்களியுங்கள் நண்பர்களே

Saturday, December 26, 2009

ஜனநாயகத்தைக் காக்க வாருங்கள் பதிவர்களே !



ஜனநாயகத்தைக் காப்பதற்கும் பதிவுலகத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா ? இருக்கிறது.



தமிழ்நாட்டில் இன்று நான்காவது தூண் என்று அழைக்கப் படும் பத்திரிக்கை உலகம் எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியுமா ?




சவுக்குக்கு கிடைத்துள்ள பிரத்யேக தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. 2006ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழக பத்திரிக்கை உலகில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.



பத்திரிக்கைகளின் கருத்துக்களை மிகுந்த கவனத்தோடு பரிசீலித்தும், தன்னையே ஒரு பத்திரிக்கையாளர் என்று அழைத்துக் கொள்ளும் கருணாநிதி, ஏறக்குறைய அனைத்து பத்திரிக்கைகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




தமிழ் நாட்டில் வெளிரும் ஆங்கில பத்திரிக்கைகள் நான்கு. தி ஹிந்து, டெக்கான் க்ரானிக்கிள், டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.


இந்த பத்திரிக்கைகளில் தி ஹிந்து, முரசொலியின் ஆங்கிலப் பதிப்பாக மாறி, பல ஆண்டுகள் ஆகின்றன.



இதற்கு குறிப்பான காரணம், 2003ம் ஆண்டில் ஹிந்து நாளிதழ் எழுதிய தலையங்கம், தமிழக சட்டசபையின் உரிமை மீறியதாக ஆணையிட்டு, அப்போதைய சபாநாயகர் காளிமுத்து, ஹிந்து நாளேட்டின் ஆசிரியர் மற்றும் உரிமையாளர் மற்றும், அந்த தலையங்கத்தை மொழி பெயர்த்து வெளியிட்ட முரசொலியின் நிர்வாகிகளையும் கைது செய்ய உத்தரவிட்டார்.


இதையொட்டி, அப்போது ஜெயலலிதாவுக்கு மிகுந்த விசுவாசமாக இருந்த காவல்துறை, உடனடியாக ராம், முரளி உள்ளிட்ட ஹிந்து நிர்வாகிகளை கைது செய்ய முனைந்தது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, முன் பிணை பெற்றவுடன், அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இந்த சம்பவத்தின் பின்னணியில், ஜெயலலிதா மீது கடும் கோபம் கொண்ட ஹிந்து குழுமம், அந்நாள் முதல், ஹிந்து பத்திரிக்கை, பத்திரிக்கை தர்மத்தை மறந்து, கருணாநிதியின் ஊதுகுழல்களில் ஒன்றாக ஆனது.

இந்நாளேடு, ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி எவ்வாறு செய்தி வெளியிட்டது என்பதும், இதற்காக, ஹிந்து ராமுக்கு இலங்கை அரசு லங்கா ரத்னா விருது வழங்கி கவுரவித்ததும் வரலாறு.



அடுத்து டெக்கான் க்ரானிக்கிள் நாளேடு. இந்நாளேடு, ஓரளவுக்கு நியாயமாக, பொதுமக்களின் பிரச்சினைகளையும், அரசின் தவறுகளையும் சுட்டிக்காட்டும் பத்திரிக்கையாகத்தான் இருந்து வந்தது. 2008 ஏப்ரல் 14 அன்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் சென்னை பதிப்பு வெளிவந்தது. இந்நாளில், டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டை விட வியாபார ரீதியில் பிரபலமாக வேண்டும் என்ற உந்துதலில், முன்னாள் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி,ஐஏஎஸ் மற்றும் முன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் எஸ்.கே.உபாத்யாய் ஆகிய இருவருக்கிடையே நடைபெற்ற உரையாடலை வெளியிட்டது.



இந்த உரையாடல் வெளியாகி, சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பரபரப்பை ஒட்டி, டெக்கான் க்ரானிக்கிள் நாளேட்டின் சர்குலேஷன் பன்மடங்கு கூடியது. ஆனால், அந்த புகழுக்கு இந்த நாளேடு அளித்த விலை மிக அதிகம்.

முதலில், இந்நாளேட்டின் அலுவலகத்தை காவல்துறையை விட்டு சோதனை செய்து, எடிட்டரை கைது செய்யத் உத்தேசித்திருந்த கருணாநிதி, பத்திரிக்கைகளின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்று சமயோசிதமாக யோசித்து, டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழுக்கு அரசு விளம்பரங்களை நிறுத்தினார். அரசு விளம்பரத்தை நிறுத்தினால், ஒரு செய்தித் தாள், தள்ளாடி தடுமாறும் என்பதை அறிந்த கருணாநிதி இவ்வாறு செய்தார். அதைப் போலவே, அந்நாளேடு தள்ளாடத் தொடங்கியது. விளம்பரத்தை நிறுத்தினால், ஒரு நாளுக்கு ஒரு செய்தித் தாளுக்கு ஏற்படும் நஷ்டம் என்ன தெரியுமா ?


டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழின் விளம்பரப் பலகை


குறைந்தது ரூபாய் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை. ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுவதை உலகத்தில் எந்த முதலாளி பொறுத்துக் கொள்வான் ? உலகில் உள்ள அத்தனை முதலாளிகளின் நோக்கமும் மூன்று விஷயங்கள் மட்டும் தான்.

1) லாபம்
2) லாபம்
3) லாபம்

இந்த லாபத்துக்காகத்தான் முதலாளிகள் தொழிலில் இறங்குகிறார்கள். அந்த லாபம் அடிபடத் தொடங்கினால் ? அரசின் காலில் முதலாளி மண்டியிடுவான். அதுதான் டெக்கான் க்ரானிக்கிள் நாளேட்டின் கதையிலும் நடந்தது. உபாத்யாய் திரிபாதி தொலைபேசி உரையாடலை வெளியிட்ட டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழின் மூத்த நிருபர் வி.பி.ரகு, அநேகமாக வேலையை விட்டு டிஸ்மிஸ் ஆகும் நிலைக்கு தள்ளப் பட்டார்.



டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழின் விளம்பரப் பலகை


பிறகு, அரசோடு சமாதானம் ஆனபின் அரசுக்கு எதிராக செய்திகள் வருவது, ஏறக்குறைய நிறுத்தப் படும் என்ற உடன்பாட்டுக்குப் பிறகு, டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழுக்கு மீண்டும் அரசு விளம்பரங்கள் வழங்கப் பட்டன.

உடன்பாட்டுக்கு ஏற்ப, டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழும், அரசை வெகுவாகச் சாடாமல் இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல் தனது லாபத்துக்கு குறைவு ஏற்படாமல் இன்று செயல்பட்டுக் கொண்டு வருகிறது.


அடுத்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ். இந்த நாளிதழ், எப்பொழுதுமே முதலாளிகள் மற்றும் முதலாளி வர்க்க சார்போடுதான் இருந்து வந்திருக்கிறது.




ஒரு பத்து பேர், உணவில்லாமல் பட்டினியால் சாக நேரிடும் ஒரு செய்தியையும், இந்திய அரசின் பொருளாதார கொள்கையால், பெரும் நிறுவனங்களுக்கு லாபத்தில் குறைவு ஏற்படும் ஒரு செய்தியையும் ஒப்பிட்டால், லாபத்தில் ஏற்படும், குறைபாட்டைத் தான் இந்நாளேடு பெரிதாக வெளியிடும்.

இது போல, தன்னுடைய முதலாளித்துவச் சார்பை சமன் செய்வதற்காக அவ்வப்பொழுது இங்கும் அங்கும் ஒரு ஏழையின் கஷ்டத்தை பற்றிச் செய்தி வெளியிட்டு நடுநிலையான நாளேடு போல காட்டிக் கொள்ளும். இந்நாளேட்டின் உரிமையாளர், இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிறுவனத்தின் இந்தியா டைம்ஸ் இணையத் தளம், டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அனைத்திலும், இந்த முதலாளித்துவச் சார்பை காணலாம். இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில் அதிகம் பேர் விரும்பிப் பார்க்கும், கவர்ச்சிப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.


எஞ்சியுள்ளது, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு மட்டுமே. இந்நாளேடாவது நடுநிலையாக இருக்குமென்றால் இல்லை.



எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதாவை விமர்சித்து வரும் செய்திகளை பூதக்கண்ணாடி வைத்தாலும் காண முடியாது. சரி, ஆளுங்கட்சியை எதிர்ப்பதுதான், உண்மையான பத்திரிக்கை தர்மம் என்று வைத்துக் கொண்டாலும் கூட, சமீப காலமாக, இப்பத்திரிக்கையில், அரசுக்கு எதிராக வரும் செய்திகள் குறைந்த வண்ணம் உள்ளன.

பத்திரிக்கை உலகில் விபரம் அறிந்தவர்கள், எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதலாளி, கருணாநிதியை வெகு சமீபத்தில் சந்தித்ததாகவும், அச்சந்திப்பின் போது, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் கருணாநிதி குடும்பத்தையும், கருணாநிதியையும், விமரிசித்து, தலையங்கப் பகுதிக்கு அருகில் வரும் கட்டுரைகள் மிகக் கடுமையாக இருப்பதாகவும், கருணாநிதி அங்கலாய்த்ததாக கூறப் படுகிறது.


இந்த அங்கலாய்ப்பின் விளைவாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அரசுக்கு எதிரான செய்திகளை குறைத்துக் கொள்ள எக்ஸ்பிரஸ் குழுமம் முடிவெடுத்திருப்பதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழ்நாட்டில் உள்ள நான்கு ஆங்கிலப் பத்திரிக்கைகளும் கருணாநிதியின் பிடியில் வந்து விட்டதல்லவா ? அடுத்து தமிழ் தினசரிகளைப் பார்ப்போம்.



தினமணி நாளேட்டின் தலையங்கங்கள் கடுமையான விமர்சனத்தை தாங்கி வந்தன. கருணாநிதி அரசின் அயோக்கியத்தனங்களை தினமணி தொடர்ந்து சாடியே வந்துள்ளது.

இவ்வாறு கடும் விமர்சனங்களை அடக்கிய தலையங்கம் வந்தபோதெல்லாம் அந்நாளேட்டின் ஆசிரியரை, பார்ப்பனர் என்றும், காதில் கேட்கக் கூசும் வார்த்தைகளால், காலை 6 மணி முதல் 8 மணி வரை கருணாநிதி அர்ச்சனை செய்வதுண்டு என்று, இந்த அர்ச்சனைகளை காதில் கேட்டவர்கள் கூறுகிறார்கள்.

இப்படியெல்லாம் அர்ச்சனை செய்தாலும், கருணாநிதியை பாராட்டி வரும் செய்திகளை “தினமணி நாளேடே கூறியுள்ளது“ என்று அதை எடுத்து முரசொலியில் பெரிய செய்தியாக வெளியிட கருணாநிதி தயங்கும் அளவுக்கு அவருக்கு சுயமரியாதை இல்லை.




பச்சை நிறத்தில் இல்லையே ஒழிய, கருணாநிதிக்கு பச்சோந்திக்கு உண்டான அத்தனை குணநலன்களும் உண்டு. கடந்த ஆண்டு கருணாநிதி பிறந்தநாளின் போது அவரை வாழ்த்தி தினமணி எழுதிய தலையங்கத்தை, கருணாநிதி விழா மேடையில் ஒரு வரி விடாமல் படித்தது குறிப்பிடத் தகுந்தது.

தலையங்கங்களைத் தவிர, தினமணியில் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டிய விஷயம், நடுப்பக்கத்தில் வரும் கட்டுரைகள்.


பழ.கருப்பையா


கட்டுரையாசிரியர் பழ.கருப்பையாவைத் தவிர அக்கட்டுரைகளில் கருணாநிதியை கடுமையாக விமரிசனம் செய்வது அரிதிலும் அரிதான விஷயம். எக்ஸ்பிரஸ் குழுமத்திற்கும் அரசிற்கும் ஏற்பட்ட உடன் பாட்டின் விளைவுகள், அக்குழுமத்திலேயே இருக்கும் தினமணியை மட்டும் பாதிக்காதா என்ன ?

அதன் விளைவு, சமீப காலமாக பழ.கருப்பையா காணாமல் போய் விட்டார். நேற்று எழுதிய கட்டுரையில் கூட, ஏசு பிரானைப் பற்றித் தான் பழ.கருப்பையா எழுதியிருக்கிறார். தினமணியின் தலையங்கங்கள் கூட, தமிழக அரசை தொடாமல், இந்தியாவின் மற்ற மாநிலங்களைச் சுற்றி வருகின்றன.

கருணாநிதிக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்த தினமணியை ஒரு வழியாக சரிக்கட்டியாகி விட்டது.

அடுத்து கருணாநிதியை தொடர்ந்து விமர்சித்து, தொல்லை கொடுத்து வந்த ஒரு நாளிதழ் தினமலர்.

முதலில், தினமலர் குழுமத்தில் ஏற்பட்ட குடும்பச் சண்டையை தனது உளவுத் துறை மூலம் பெரிதாக்கி அந்நெருப்பில் குளிர் காய்ந்தார் கருணாநிதி.



அதற்குப் பிறகும் சென்னை தினமலரின் விமர்சனங்கள் குறையாததால், சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் பனங்காட்டு நரியான கருணாநிதி. அருமையான சந்தர்ப்பத்தை தினமலர் நாளேடே ஏற்படுத்திக் கொடுத்தது.

ஊரில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் பற்றி எழுதிக் கிழித்து விட்டது போல, தமிழ் திரைப்படங்களின் முன்னாள் கதாநாயகிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்று, சில முன்னாள் முன்னணி நடிகைகளின் புகைப்படத்தோடு செய்தி வெளியிட்டது தினமலர்.



சர்ச்சைக்குரிய தினமலர் செய்தி



உண்மையிலேயே அந்நடிகைகள் பாலியல் தொழில் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, அதனால் யாருடைய சோற்றில் மண் விழுந்தது ? ஆனால், இதை ஒரு மிகப் பெரிய சமுதாய பிரச்சினையாக்கி பெரிய அளவில் செய்தி வெளியிட்டிருந்தது தினமலர்.



நடிகர் சங்கத்தின் போராட்ட அறிவிப்பு



“மயிர் நீக்கின் உயிர் வாழா கவரிமான்“ குடும்பத்தைச் சேர்ந்தவர்களான திரைத் துறையினர் மிகப்பெரிய கூத்தை போராட்டம் என்ற பெயரில் நடத்தினார்கள்.

அவ்வளவுதான் கருணாநிதிக்கு வந்ததே கோபம் !

தமிழகத்தின் அத்தனை பிரச்சினைகளும் தீர்ந்து விட்டது போலவும், இனி தீர்க்க வேறு பிரச்சினைகளே இல்லை என்பது போலவும், உடனடியாக “பெண்களுக்கெதிரான வன்கொடுமை சட்டத்தின்“ கீழ் காவல்துறையை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இங்கேதான் இருக்கிறது கருணாநிதியின் தந்திரம்.

சட்டத்தின் படி, அவதூறான செய்தி வெளியிடும் பத்திரிக்கையின் ஆசிரியரும், பதிப்பாளரும் (முதலாளி) தான் வழக்கமாக கைது செய்யப் படுவார்கள்.

ஆனால், தினமலர் முதலாளிகளோடு, ஒரு “கள்ள ஒப்பந்தத்தை“ கருணாநிதி செய்து கொண்டு அந்நாளேட்டின் செய்தி ஆசிரியர் லெனினை காவல்துறையை வைத்து கைது செய்தார் கருணாநிதி.



தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப் படுகையில்



தினமலர் நிர்வாகமும், சந்தோஷமாக லெனினை காவல்துறையோடு அனுப்பி வைத்தது.

பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் கைதேர்ந்த கபட வேடதாரி கருணாநிதி, லெனின் கைதால் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பை சமாளிக்க, லெனின் பிணை மனுவுக்கு நீதிமன்றத்தில் அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க உத்தரவிட்டார்.

மறுநாளே லெனின் சிறையிலிருந்து வெளியே வந்தார். முதலாளியை கைது செய்யாமல் செய்தி ஆசிரியரை கைது செய்ததற்கு நன்றியாக தினமலர், இன்று தனது அரசு எதிர்ப்பு செய்திகளை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு மற்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

வழக்கமாக, காரசாரமாக, அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தினரைப் பற்றிய செய்திகளை தாங்கி வரும் தினமலரின் “டீக்கடை பென்ச்“ பகுதி கூட, உப்புச் சப்பில்லாமல் வருகிறது.


தமிழகத்தின் மிகப் பெரிய நாளிதழான தினத்தந்தியைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.



20 பேர் இறந்த விபத்துச் செய்தியை சின்னதாக போட்டு விட்டு, நடிகையின் உள்பாவாடை காணாமல் போன செய்தியை தலைப்புச் செய்தியாக போடும் நாளிதழ்.

இதற்கு, மக்கள் நடிகையின் உள்பாவாடை பற்றித் தான் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்ற வியாக்கியானம் வேறு.

எப்போதும் தினத்தந்தி ஒரு கட்சி சார்பாகவே இருந்து வந்திருக்கிறது. அதிசயிக்காதீர்கள். அந்த ஒரு கட்சி வேறு எந்தக் கட்சியும் அல்ல. “ஆளும் கட்சி“தான் அது.


அடுத்து எஞ்சியிருப்பது, தினகரன் தான். குடும்பம் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, தினகரன் நிருபர்கள் அரசுக்கு எதிரான செய்திகளுக்காக ஆலாய்ப் பறப்பார்கள்.



குடும்பம் ஒன்று சேர்ந்ததும், அரசுக்கெதிரான செய்திகள் அடியில் போடப்பட்டு, கருணாநிதியின் அறிக்கைகளும், பாராட்டுகளும் முதல் பக்கத்தில் வருகின்றன.

இதில் ஜெயலலிதாவின் அறிக்கைகளை சின்னதாக வெளியிட்டு நடுநிலையாக இருப்பதாக வேறு காட்டிக் கொள்கிறார்கள். குடும்பம் சண்டையில் இருந்த காலத்தில், தினகரன் நாளேடு, அரசு விளம்பரம் வருவதில்லை என்று, நீதிமன்றம் சென்றதை நினைவில் கொள்ள வேண்டும்.

எவ்வளவுதான் பணம் கொட்டிக் கிடந்தாலும், சன் டிவி குழுமத்தின் வருமானம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டினாலும், விளம்பர வருமானம் குறைந்தவுடன் நீதிமன்றம் செல்லும் பத்திரிக்கை முதலாளிகளின் கவலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.


பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் தமிழ் ஓசை நாளேட்டை, டாக்டர் ராமதாஸ், ஜி.கே.மணி தவிர ஒருவரும் படிப்பதில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. அன்புமணி ராமதாஸ் கூட ஹிந்து தான் படிக்கிறாராம்.


இதைத் தவிர சொல்லிக் கொள்ளும் படி ஒரு நாளிதழும் இல்லை.


வாரம் இருமுறை இதழ்களை எடுத்துக் கொண்டால், நக்கீரனை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.



ஜெயலலிதா அரசாங்கத்தில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டதால், நக்கீரன் பத்திரிக்கையில் ஆசிரியர் நக்கீரன் கோபால் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு ஜெயலலிதா மீது ஏற்பட்ட வெறுப்பு ஜெயலலிதாவை ஹிட்லர், முசோலினி போன்ற ஒரு கொடுங்கோலர் போலவும், கருணாநிதியை ஏசு பிரான் போலவும் எண்ண வைத்தது.

இதன் விளைவு, நக்கீரன் அறிவாலயத்தில் அச்சடிக்கப் படுவது போலவே செய்திகளைத் தாங்கி வருகிறது. மேலும், இப்பத்திரிக்கை, உளவுத் துறையின் ஒரு மூத்த அதிகாரியின் பிடியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இப்பத்திரிக்கையின் இணை ஆசிரியராக இருக்கும் காமராஜ், கருணாநிதிக்கு மிக மிக நெருக்கமாக உள்ளதால், கருணாநிதியின் எண்ணங்களே நக்கீரனில் செய்தியாக வருவதாக கூறப்படுகிறது.

ஈழப் போரின் போது ஈழச் செய்திகளை வெளியிட்டு கொள்ளை லாபம் பார்த்த நக்கீரன், தற்போழுது, ஈழப் போரை வழிநடத்தியவர் போலவும், பிரபாகரனுக்கே போர் முறைகளை கற்றுக் கொடுத்தவர் போலவும் பேசி வரும், போலிச் சாமியார் ஜெகத் கஸ்பர் எழுதும் தொடரை வெளியிட்டு வருகையிலேயே நக்கீரனின் அருமை புரியும்.


அடுத்து ஜுனியர் விகடன். மக்கள் மத்தியில் ஒரு நற்பெயரை பெற்றிருந்த இந்த இதழ், காவல்துறை அதிகாரிகளின் பிடியில் சிக்கி, நடுநிலையான பத்திரிக்கை என்ற பெயரை ஏறக்குறைய இழந்து நிற்கிறது.



குறிப்பாக, காவல்துறை அதிகாரிகளின் ஊழல்களை தைரியமாக அம்பலப்படுத்தி வந்த இந்த இதழ், தற்போது, காவல்துறை அதிகாரிகளின் புகழ் பாடும் பத்திரிக்கையாக உருமாற்றம் பெற்றுள்ளது.

மேலும், விகடன் குழுமம் திரைப்படத் தயாரிப்பில் இறங்கத் தொடங்கியதும், பத்திரிக்கையை விட, திரைப்படத்தில் இக்குழுமத்தின் முதலாளிகள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சினிமா என்ற மாய உலகம் காட்டிய கவர்ச்சியில் இக்குழுமத்தின் மேல்மட்ட நிர்வாகிகள் மயங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில ஆண்டுகளாக செக்ஸ் கதைகளை வெளியிடாமல் இருந்த ஜுனியர் விகடன், சமீப காலமாக செக்ஸ் கதைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஜுனியர் விகடன் புண்ணியத்தில், காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதனின் நீலப்படம் இல்லாத செல்போனே தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.


இலங்கை சென்று, ராஜபக்ஷேவுடன் கைகுலுக்கி, சிரித்துப் பேசி, விருந்துண்டு, பரிசுகள் அளித்து, பெற்று, இந்தியா திரும்பியுள்ள திருமாவளவனை வைத்து “முள்வலி“ என்ற தலைப்பில் கம்பி வேலிக்குள் அடைபட்டுக் கிடக்கும் ஈழத் தமிழர்களை பற்றி எழுத வைத்து, ஈழத் தமிழருக்காக இன்னும் மிச்சம் உள்ள இரக்கத்தை வியாபாரம் செய்து லாபம் பார்த்து வருகிறது இந்த இதழ்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது “வேட்பாளர் தம்பட்டம்“ என்ற தலைப்பில் விளம்பரங்கள் வெளியிட்டு, ஜுனியர் விகடன் கொள்ளை லாபம் பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு பக்க விளம்பரத்துக்காக, இரண்டு லட்சம் என்று விலை பேசி, மார்க்கெடிங் செய்ய அனைத்து அரசியல் கட்சிகளிடமும், வேட்பாளர்களிடமும், ஜுனியர் விகடன் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அடுத்த வாரம் இருமுறை இதழ், “குமுதம் ரிப்போர்ட்டர்“. இந்த பத்திரிக்கை அரசு, அரசியல் செய்திகள் என்றெல்லாம் ரொம்பவும் மெனக்கிடுவதில்லை.



எல்லா பத்திரிக்கைகளின் குறிக்கோளும் லாபம் என்றாலும், குமுதம் ரிப்போர்ட்டரின் குறிக்கோள், எப்படியாவது லாபம் என்பதுதான். இப்பத்திரிக்கை எப்போதும் கையாளும் ஒரு முக்கிய தந்திரம் “செக்ஸ்“.

செக்ஸ் தொடர்பாக எந்த செய்தி இருந்தாலும் அதை அட்டையில் போட்டு, அந்த இதழுக்கு கூடுதலாக 4 அல்லது 5 லட்ச ரூபாய் லாபம் பார்ப்பதுதான் இந்த இதழுக்கு வழக்கம்.

“பள்ளி மாணவிகளிடம் உலவும் செக்ஸ் வீடியோ“, “டேட்டிங் செய்யும் இளசுகள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்“, “பெருகி வரும் கள்ள உறவுகள்“ “செக்ஸ் வீடியோவில் மாட்டிய எம்.எல்.ஏ“ செக்ஸ் படம் காட்டும் இணையத் தளங்கள்“ “மீண்டும் சரோஜாதேவி கதைகள் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்” என்ற ரீதியில் தான் இந்த இதழின் தலைப்புச் செய்திகள் இருக்கும்.

ஒரு வாரத்துக்கு செக்ஸ் செய்தி கிடைக்க வில்லை என்றால் “நான் ஸ்டாலினுக்கு போட்டியா ? அழகிரி அதிர்ச்சிப் பேட்டி“ அல்லது “நான் யாருக்கும் இளைத்தவன் இல்லை – விஜயகாந்த் உற்சாகப் பேட்டி“ என்று இதழை ஓட்டி விடுவார்கள்.

இது தவிர, இந்நிறுவனத்தின் முதலாளியின் 1500 ஏக்கர் நிலம் சென்னையை அடுத்து இருப்பதாகவும், இந்நிலத்தை, காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் மேற்பார்வை செய்து பிரச்சினைகள் ஏதும் வராமல் பார்த்துக் கொள்வதாகவும், இதனால், அந்த அதிகாரி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் குறித்த செய்திகள் எதுவும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.


இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வரும் வார இதழ் “தமிழன் எக்ஸ்பிரஸ்“. இந்த இதழை டீக்கடையில் போண்டா மடிப்பதற்குக் கூட பயன் படுத்துவதில்லை என்று கூறப் படுகிறது.




வருமான வரியில் நஷ்டம் காட்டுவதற்காகத்தான் இந்த இதழை எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


எஞ்சியுள்ளது, வெளிவந்து ஒரு வருடம் ஆன “தமிழக அரசியல்“ வார இதழ். அரசுக்கு எதிரான செய்திகள் ஓரளவுக்கு வந்தாலும் விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு இந்த இதழ் செயல்படுகிறதா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.



இந்த இதழில் வெளிவரும் செய்திகள் அரசின் மீது விமரிசனம் செய்யும் தொனியில் இருந்தாலும் துணை முதல்வருக்கு, ஏறக்குறைய சாமரம் வீசும் வகையில் தான் இருக்கிறது. சமீபத்தில் ஸ்டாலின் பற்றி வெளிவந்த ஒரு கட்டுரையில், ஸ்டாலினுக்கு பக்குவம் போதாது என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

எதற்காக என்றால், ஒரு அதிகாரி ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் ஊழல் இருந்தது என்று குறிப்பிட்டாராம். உடனடியாக ஸ்டாலின் விசாரணைக்கு உத்தரவிட்டாராம். உடனடியாக இன்னொரு அதிகாரி பதறிப்போய், இந்த விஷயத்துக்கு ஒப்புதல் கொடுத்தது முதல்வர் கருணாநிதிதான், விசாரணை நடந்தால் அது அரசின் மீதே திரும்பும் என்பதால் விசாரணை வேண்டாம் என்று கூறினாராம்.

இது போல, ஒரு ஊழல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டதால் ஸ்டாலினுக்கு பக்குவம் இல்லை என்று குறிப்பிடப் பட்டிருந்தது. ஊழல்களை மூடி மறைக்க ஸ்டாலின் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை என்றுதானே பொருள் ? ஒரு வேளை எப்படியும் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான்.

இப்போதே ஸ்டாலினுக்கு ஜால்ரா போட ஆரம்பித்து நாளை ஸ்டாலின் முதல்வரானால், நாங்கள்தான் உங்களை முதல்வர் ஆக்க உத்தரவிட்டோம், அதனால் வாரம் 20 பக்கத்துக்கு அரசு விளம்பரம் தாருங்கள் என்று கேட்கலாமென, தமிழக அரசியல் நிர்வாகம் திட்டமிட்டுருக்கிறதோ என்ற சந்தேகம் இருக்கிறது.

இது போகவும், தமிழக அரசியல் நிர்வாகமும், தமிழக அரசியல் தவிர, திரிசக்தி என்ற ஆன்மீக பத்திரிக்கை, திரைப்படத் தயாரிப்பு என்று பல தொழில்கள் செய்து வருவதால் தமிழக அரசியல் பத்திரிக்கையை சீரியசாக நடத்துவது போலத் தெரியவில்லை.


முக்கிய அரசியல் பத்திரிக்கைகள் அனைத்தையும் பார்த்தாயிற்று. மற்ற வார, மாத இதழ்களுக்கு, அரசியல் ஒரு சிறு பகுதிதான் என்பதால், கருணாநிதி இவைகளை கண்டு கொள்வதில்லை.


தொலைக்காட்சி ஊடகங்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை விளக்கத் தேவையில்லை. தொலைக்காட்சியில் வரும் செய்திகளையும் மக்கள் அப்படியே உண்மை என்று நம்பும் காலம் மலையேறி விட்டது. பின்னே, விஜயின் வேட்டைக்காரன் படத்துக்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்று சன் நியூஸில் அரை மணிக்கொரு முறை சொன்னால், மக்கள் சிரிக்க மாட்டார்கள் ?


பெரும்பாலான தொலைக்காட்சிகள் அரசியல் கட்சிகளின் பின்னணியில் இயங்குவதால், அவற்றில் உண்மை செய்திகளை காண்பது கடினமாக இருக்கிறது.


இந்நிலையில், ஒரு ஜனநாயகத்துக்கு, சுதந்திரமான பத்திரிக்கைகள் எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிவோம். சுதந்திரமான பத்திரிக்கைகள் இல்லையென்றால், ஹிட்லரின் தளபதி, கோயபல்ஸ் பத்து முறை ஒரு பொய்யைச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்று கூறியது, இப்பொழுது இருக்கும் பத்திரிக்கைளால் நடைமுறைக்கு வந்து விடும்.




சரி. ஆட்சி சிறப்பாக நடக்கிறது. விமர்சனங்களே அவசியம் இல்லை என்றால் அதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

சிறப்பாக நடக்கும் ஆட்சி கூட, தவறுகள் இழைக்கக் கூடும். அந்தத் தவறுகளை சுட்டிக் காட்டி, அந்த ஆட்சியை மேலும் சிறப்பாக நடத்த பத்திரிக்கைகள் அவசியம்.

அப்படிப்பட்ட சுதந்திரமான பத்திரிக்கைகள் இல்லாது போனால் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலை உருவாகும். ஜனநாயகம் என்பது, தானாக வாடி, வதங்கி, உதிர்ந்து விடும்.


தமிழ்நாட்டில், பத்திரிக்கைகள் ஏற்படுத்தியுள்ள இந்த வெற்றிடத்தை இட்டு நிரப்பும் திறன், பதிவர்களுக்கு மட்டுமே உள்ளது. இந்த பதிவுலகம் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. இங்கே எழுத்துச் சுதந்திரம் உண்டு.

நியாயமாக எழுதினால், நம்மை வேலையை விட்டு அனுப்பி விடும் முதலாளியும் இல்லை, அரசுக்கு எதிராக எழுதினால், விளம்பரம் வராதே என்று கவலைப்படும் வியாபார நெருக்கடியும் இல்லை.

நமது பதிவுலகத்தில் பெரும்பாலான பதிவுகள் செய்தித் தாள்களில் வருபவற்றை மறு பதிவு செய்பவையாகவும், சினிமா செய்திகளை பெரிது படுத்துவதாகவும் உள்ளன.

இப்பதிவுலகத்தை, இந்த அரசில் ஏற்பட்டு வரும் ஊழல்களை வெளிக் கொணர சுதந்திரமான ஒரு தளமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


அரசு இயந்திரத்தின் முக்கிய பகுதியாக இருக்கும் அரசு ஊழியர்களே !. அரசுத் துறைகளில் நடக்கும் ஊழலில், புறங்கையை நக்காமல், ஊழலை எதிர்க்க திராணியும் இல்லாமல் வெளியே சொல்ல இயலாமல் புழுங்கிக் கொண்டிருக்கும் போராளிகளே.

உங்களுக்குத் தெரிந்த ஊழல்களை, இந்த பதிவுலகத்தில் வெளியிடுங்கள்.
முக்கிய செய்திகளை ஆசிரியருக்கு அனுப்பி, அது பிரசுரமாகாததால் மனம் புழுங்கும் பத்திரிக்கையாளர்களே. பதிவுலகிற்கு வாருங்கள்.

பதிவர்களே சீரியசான பதிவுகளை எழுதுங்கள். மக்கள் பிரச்சினைகளை எழுதுங்கள். இந்தப் பத்திரிக்கைகள் செய்யத் தவறுவதை நாம் செய்வோம்.

இது அற்புதமான உலகம். நமது ஜனநாயகத்தை, நமது குழந்தைகளுக்கு பத்திரமாக விட்டுச் செல்லும் பொறுப்பு நமக்கு உண்டு. அந்தப் பொறுப்பை தவற விட்டால், நம் கண் முன்னே, இந்த ஜனநாயகம் செத்து மடிவதை காணும் கொடுமைக்கு ஆளாவோம்.

ஜனநாயகத்தை பதிவுலகத்தால் மட்டுமே காப்பாற்ற இயலும். வாருங்கள் தோழர்களே!




சவுக்கு


வாக்களியுங்கள் நண்பர்களே

Friday, December 25, 2009

தென்னையப் பெத்தா இளநீரு.. பிள்ளையப் பெத்தா கண்ணீரு…




இந்தப் பாடலை கருணாநிதி பாடி வருவதாகவும், யாரிடம் புலம்புவது என்று கூட தெரியாமல் தனக்குத் தானே புலம்பும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருணாநிதிக்கு மிக நெருக்கமாக அறியப்படும், பத்திரிக்கையாளர் “நக்கீரன் காமராஜிடம்“ கருணாநிதி தனக்கு குடும்பத்தினரால் ஏற்பட்டு வரும் நெருக்கடிகளை பற்றி அங்கலாய்ப்பதாகவும் அறியப் படுகிறது.


தனது மகள் செல்வி வீட்டில் ஒரு வாரம் ஓய்வு எடுப்பதற்காக பெங்களூருக்கு நேற்று இரவு கருணாநிதி புறப்பட்டுச் சென்றுள்ளார். கருணாநிதியுடன், அவரது இரண்டாவது மனைவி தயாளு அம்மாள், அவரின் நிழல் சண்முகநாதன், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வெகு சிலர் மட்டும் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருணாநிதியின் பெங்களூர் பயணம் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பணிகளை பெங்களூரில் இருந்தபடியே மேற்பார்வை இடுவதற்கும், தனது அடுத்த இரண்டு திரைப்படங்கள் “பொன்னர் சங்கர்“ மற்றும் “பெண் சிங்கம்“ ஆகிய படங்களுக்கான திரைக்கதையையும் வசனங்களையும் எழுதி முடிக்கத் தான் இந்த ஒரு வார ஓய்வு என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ஒரு பொறுப்பு வாய்ந்த முதலமைச்சர் அலுவலகப் பணிகளையும், மக்கள் பணியையும் பார்க்காமல், இப்படி பெங்களூர் சென்று அமர்ந்து கொண்டு, திரைக்கதை வசனம் எழுதுவது சரியா ? என்ற கேள்விகளை நீங்கள் எழுப்பினால், உங்களை பதர்கள், புல்லுருவிகள், என்று வசைபாடுவார் கருணாநிதி. ஆகையால், இந்தக் கேள்விகளை மனதுக்குள்ளேயே புதைத்துக் கொள்ளுங்கள்.


அப்படி திரைக்கதை வசனம் எழுதி இந்தப் படங்கள் என்ன வசூலை வாரிக்குவிக்க போகின்றதா, இல்லை இந்தியாவுக்கு ஆஸ்கார் விருதை பெற்றுத் தரப்போகிறதா என்பது போன்ற அதிகப்பிரசங்கித் தனமான கேள்விகள் தடை செய்யப் பட்டுள்ளதால், இது போன்ற கேள்விகளை கேட்காதீர்கள்.


கருணாநிதி பெங்களூர் செல்வதற்கு சொல்லப் படும் காரணங்களில் உண்மை இல்லை என்றும், பின்னணியில் பல விஷயங்கள் உள்ளன என்றும் சவுக்குக்கு தகவல்கள் வந்துள்ளன.


அரசியலை விட்டும், பதவியை விட்டும் ஓய்வு பெற்று மக்களோடு மக்களாக இணையப் போகிறேன் என்று திடீர் அறிவிப்பு வெளியிட்டாலும் கருணாநிதிக்கு, பதவி ஆசையும், அதிகார போதையும், சற்றும் தணியவில்லை என்பதை தொடர்ந்து கருணாநிதிக்கு எடுக்கப் பட்டு வரும் பாராட்டு விழாக்களும், அதில் கருணாநிதியின் பேச்சும் உணர்த்தும்.


திடீர் ஓய்வு அறிவிப்பு வெளியிட்ட பிறகு நடந்த ஒரு விழாவில் பேசிய கருணாநிதி “சில பேர் ஓய்வு பற்றி வெளியிட்ட அறிவிப்பு என்ன ஆனது என்று கேட்கக் கூடும், அந்த அறிவிப்பு அப்படியேதான் இருக்கிறது“ என்று பேசியுள்ளார். புதிய தலைமைச் செயலக கட்டிடம் திறந்த பிறகும், அண்ணா நினைவு நூலகக் கட்டிடம் திறந்த பிறகும் செம்மொழி மாநாடு முடிந்த பிறகும் அரசியலை விட்டு ஓய்வு, என்று அறிவித்துள்ளார் கருணாநிதி.

அரசியலை விட்டு ஓய்வு பெற்ற பின், தலைமைச் செயலக திறப்பு விழாவுக்கோ, செம்மொழி மாநாட்டுக்கோ கருணாநிதியை அழைக்க மாட்டார்களா என்ன ? கண்டிப்பாக அழைப்பார்கள். பிறகு ஏன் 6 மாதம் கழித்து ஓய்வு, ஒரு வருடம் கழித்து ஓய்வு என்று "அல்வா" கொடுத்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி ?


ஆனால், கருணாநிதி வரலாறு படித்தவர். வரலாற்றுப் புதினங்களை எழுதியவர். மொகலாய வரலாறு அறியாதவரா என்ன ?


ஜனவரி 9 1628ல் ஜகாங்கீரின் மறைவுக்குப் பிறகு மொகாலாய சாம்ராஜ்யத்தின் மன்னராக ஷாஜஹான் பதவியேற்றார் ஷாஜஹான்.


மன்னர் ஷாஜஹான்


1658ல் ஷாஜஹான் நோய்வாய்ப் பட்டபின் அவரின் நான்கு மகன்களான தாரா ஷிகோ, மூரத், அவுரங்கசீப் மற்றும் ஷுஜா ஆகியோருக்கிடையே கடும் பதவிப் போட்டி தொடங்கியது. நான்கு மகன்களில் மிதவாதியாகிய தாரா ஷிகோ பதவிக்கு வர வேண்டும் என்று ஷாஜஹான் விரும்பினார்.



மன்னர் அவுரங்கசீப்


இதை அறிந்த அவுரங்கசீப், தனது மூன்று சகோதரர்களையும், நயவஞ்சகமாக கொன்றார். 1658 ஜுன் 8ல் அவுரங்கசீப் தனது தந்தை ஷாஜஹானை கைது செய்து, சிறையிலடைத்தார்.

ஷாஜஹான் கட்டிய தாஜ்மகாலை ஜன்னல் வழியே பார்க்கும் வசதியோடு ஒரு சிறையைக் கட்டி, அதில் ஷாஜஹானை சிறை வைத்த அவுரங்கசீப், மன்னராக பதவியேற்றுக் கொண்டார்.

ஷாஜஹான் சிறையிலேயே நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார்.


இந்த வரலாறு அறிந்த கருணாநிதி, மன்னர் ஷாஜஹானுக்கு ஏற்பட்ட அதே நிலை தனக்கும் ஏற்படும் என்பதை அறிந்துள்ளார். அதனால்தான், இன்னும் பதவியை விடாமல் உடும்புப் பிடி பிடித்துள்ளார் கருணாநிதி.


கருணாநிதி பதவியை விட்டுத் தரமாட்டார் என்பதை அவரது மகன்கள் ஸ்டாலினும் அழகிரியும் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர். அதனால்தான் ஸ்டாலின் உடனடியாக முதலமைச்சர் பதவி வேண்டும் என்று கருணாநிதிக்கு கடும் நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே போல், இடைத் தேர்தல்களில் திமுகவுக்கு பெரும் வெற்றியை ஈட்டித் தந்த அழகிரி கட்சித் தலைமைப் பதவியை கைப்பற்ற கருணாநிதிக்கு நெருக்கடி தந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் நடந்த திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி இடைத்தேர்தல்களில் கூட, முந்தைய தேர்தல்களில் காட்டிய உற்சாகத்தை காட்டாமல் ஆரம்பத்தில் சுணக்கம் காட்டியதாகவும், பிறகு, இத்தேர்தல்களில் பெரும் வெற்றியை ஈட்டி இதன் மூலம் கட்சித் தலைமைப் பதவியை கைப்பற்ற கருணாநிதிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டதாகவும் அத்திட்டத்தின் படியே திருச்செந்தூர் மற்றும் பெரும் வெற்றியை பெற்றுக் காட்டியுள்ளார் அழகிரி.


இடைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சிக்குள் அழகிரியின் செல்வாக்கு பெரும் அளவில் வளர்ந்திருப்பதாகவும், கட்சியில் மூத்த தலைவர்களே அரண்டு போயுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும், கட்சியில் மூத்த தலைவர்களின் செல்வாக்கு ஏறக்குறைய அற்றுப் போய்விட்ட நிலையில், குடும்பத்தினரின் செல்வாக்கால் அதிகாரப் போட்டி உச்ச நிலையை அடைந்து விட்டதாகவும் இதை சமாளிக்க முடியாமல் கருணாநிதி திணறுவதாகவும் சொல்லப் படுகிறது.


இந்த நிலையில் தான் கருணாநிதி, குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு தீர்வு காணவே பெங்களூர் புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும், அங்கே தனது மகள் செல்வி வீட்டில் அழகிரி, ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை சமாதானப் படுத்த முயற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, எகிப்து நாட்டில் இன்பச் சுற்றுலா சென்றுள்ள, இந்தியாவின் “பரம ஏழைகளான“ மாறன் குடும்பத்தினரையும், உடனடியாக பெங்களூர் வரச் சொல்லி கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப் படுகிறது.


கருணாநிதி எதிர்ப்பார்ப்பது போல, பெங்களூரில் சமாதானம் ஏற்படுமா, சக்கரவர்த்தியின் தீர்ப்பை இளவரசர்களும், இளவரசிகளும் ஏற்றுக் கொள்வார்களா, “திருக்குவளை சாம்ராஜ்யம்“ ஆக உருவெடுத்துள்ள தமிழ்நாட்டை அனைவருக்கும் திருப்தி ஏற்படும் வகையில் பங்கீடு செய்யப் படுமா என்று ஆண்டவனுக்குத்தான் தெரியும் என்று கூறலாம் என்றால், மஞ்சல் துண்டு மடாதிபதிக்கு ஆள்வதற்குத் தான் பிடிக்கும், ஆண்டவனை பிடிக்காது என்பதால், காலம் பதில் சொல்லும் என்று முடிக்கப் படுகிறது.


அது வரை கருணாநிதி தினம் பாட வேண்டிய பாடல்

“தென்னையப் பெத்தா இளநீரு….
பிள்ளையப் பெத்தா கண்ணீரு….




சவுக்கு


தயவு செய்து வாக்களியுங்கள் நண்பர்களே

Tuesday, December 22, 2009

தமிழின் தறுதலை மகன்




கருணாநிதிக்கு விருதுகளும், புகழ்ச்சிகளும், எப்படி சலிக்கவில்லையோ, அதே போல, கருணாநிதியை வாய் நிறைய திட்டுவதற்கும், சபிப்பதற்கும், “சவுக்குக்கும்” சலிப்பதேயில்லை.

கடைசியாய் நடந்த பாராட்டு விழா, கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் 2009 டிசம்பர் 21ல் நடைபெற்றது. அவ்விழாவில் கருணாநிதிக்கு “தமிழ்த் தலைமகன்” விருது வழங்கப் பட்டது. பாராட்டை ஏற்றுக் கொண்டு பேசிய கருணாநிதி,

“கடந்த 3 மாதங்களில் வள்ளுவர் கோட்டத்தில் 4வது முறையாக பாராட்டு விழா. இன உணர்வை, தமிழ் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் பெருமக்களின் ஆர்வம் மடை உடைத்து செல்லும் அளவுக்கு இவ்விழா நடந்து கொண்டிருக்கிறது.


முத்துவேலர், அஞ்சுக தாய்க்கு நான் 3வது மகனாக பிறந்தேன். ஆனால் இன்று என்னை தலைமகன் ஆக்கியிருக்கிறீர்கள். அதற்கு எனது தலை தாழ்ந்த வணக்கம். “ என்று கூறினார்.

ஊரில் இருக்கும், தமிழ்ச் சங்கங்கள், அருந்ததியர் சங்கம், தேவர் சங்கம், வன்னியர் சங்கம், முதலியார் சங்கம், நாயுடு சங்கம், கவுண்டர் சங்கம், தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினர் நலவாழ்வுச் சங்கம், சத்துணவு ஊழியர் சங்கம், அரசு ஊழியர் சங்கம், துப்புறவு தொழிலாளர் சங்கம், பனை மரம் ஏறுவோர் சங்கம், பீடித் தொழிலாளர் சங்கம், திரைப்பட தொழிலாளர் சங்கம் என்று தமிழ்நாட்டில் சங்கம் என்று வைத்திருப்பவர்கள் ஒருவர் விடாமல் அழைத்து, பாராட்டு விழா நடத்தச் சொல்லி தமிழ்நாட்டில் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தாத சங்கங்களே இருக்கக் கூடாது என்னும் அளவுக்கு, ஒவ்வொரு சங்கமாக




அழைத்து பாராட்டு விழா நடத்த உத்தரவிட்டு, அந்த பாராட்டு விழாவில் புகழ்ச்சி மழையில் நனைந்து, உச்சி குளிர, திகட்டத் திகட்ட அனைவரும் பாராட்டி, அதற்குப் பிறகு ஏற்புரை நடத்தி, அந்த பாராட்டு விழாவே தனக்கு விருப்பமில்லாமல் நடப்பது போலவும், வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்வது போலவும், கருணாநிதி நடிப்பது என்பது, பார்த்துப் பார்த்து புளித்துப் போகும் அளவுக்கு நடந்தேறி விட்டது.

இப்படி அனைவரையும் கட்டாயம் பாராட்டு விழா நடத்தியே ஆக வேண்டும் என்று கருணாநிதி தனது அமைச்சரவை சகாக்கள் மூலமாகவும், வைரமுத்து மூலமாகவும், இந்தியா முழுவதும், உள்ள தமிழர்களையும், வேறு மொழி பேசுபவர்களையும் வற்புறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலியல் தொழில் செய்வோர், கருணாநிதிக்கு பாராட்டு விழா எடுத்தாலும், அந்த விழாவில் கருணாநிதி கலந்து கொண்டு இப்படி உரையாற்றுவார்.

“உலகத்தின் மிகப் புராதானமான தொழில் இந்தப் பாலியல் தொழில்தான். தமிழ் கூறும் நல்லுலகு, உலக நாகரீகத்தின் வளர்ச்சிக் கேற்ப, தனக்கு ஏற்ற வகையில் பாலியல் தொழிலைச் செய்து வந்ததற்கு, தமிழ் இலக்கியங்களே சான்று. சிலப்பதிகாரத்திலே, மாதவியை விடவா பாலியல் தொழில் செய்பவரை பற்றி புகழ்ந்துரைக்க வேண்டும்? கற்புக்கரசியாம், என்னால், கடற்கரையிலே சிலையெடுக்கப் பட்டதால் புகழ் பெற்ற கண்ணகியிடம் இருந்து கோவலனை தட்டிப் பறித்ததில் இருந்தே, மாதவியின் “திறமை“ புரியவில்லையா ?

நான் ஆரம்ப காலத்திலே கழகப் பேச்சாளராக இருக்கும் முன், திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதிக் கொண்டிருந்த காலத்திலேயே பாலியல் தொழிலாளிகளுக்கு நானும், மறைந்த எனது ஆருயிர் நண்பர், கண்ணதாசனும் ஆதரவு அளித்துள்ளோம். இந்த விபரங்களை நண்பர் கண்ணதாசன் விபரமாக “வனவாசம்“ நூலில் எழுதியுள்ளதை தாங்கள் அறிவீர்கள்.


சிலப்பதிகார நாயகி, மாதவியின் பெயரால், சென்னைக்கு அருகில், “பாலியல் தொழிலாளிகள் பூங்கா“ ஒன்றை அமைக்க கழக அரசு 50 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது என்பதை இந்த நேரத்திலே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். புதிதாக கட்டப் பட்டு வரும், தலைமைச் செயலக கட்டிடத்தில், பாலியல் தொழிலாளிகளுக்கு சிறப்புத் துறை ஒன்றை அமைக்க இடம் ஒதுக்கப் பட்டுள்ளது என்பதையும் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், புதிதாக கட்டப் பட்டு வரும், அண்ணா நினைவு நூலகத்தில், பாலியல் தொழில் தொடர்பான புத்தகங்களை வைக்க, தனியே இரண்டு அலமாரிகளை ஒதுக்கச் சொல்லி கழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பதை தாங்கள் அறிவீர்களா ?



தமிழ்நாட்டிலே சில பேர், பாலியல் தொழிலாளிகள் கூட, இந்தக் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்துகிறார்களே, என்று குமையக் கூடும். குமுறக் கூடும். கூடி அழக் கூடும். குற்றம் சொல்லக் கூடும். கூக்குரலிடக் கூடும், கொடுஞ்சொற்களை வீசக் கூடும். ஆனால், அதற்காகவெல்லாம் பயந்து, அஞ்சி, அவமானப்பட்டு, ஆவேசப் பட்டு, பாராட்டு விழா வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு எனக்கு சுயமரியாதையும் இல்லை, அறிஞர் அண்ணா என்னை அப்படி வளர்ககவும் இல்லை, திராவிட இயக்கம் எனக்கு அதை கற்றுத் தரவும் இல்லை. “

என்று உரையாற்றுவார் கருணாநிதி.


கருணாநிதியை தற்போது பீடித்திருப்பது NPD என்று அழைக்கப் படும், நார்சிஸ்டிக் பெர்சனாலிட்டி டிஸ்ஸார்டர். இது நகைச்சுவைக்காக சொல்லப் படுகிறது என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். உலக சுகாதார நிறுவனம் “சர்வதேச நோய் மற்றும் நல்வாழ்வு பிரச்சினைகளுக்கான புள்ளிவிபர வகைப்படுத்தல்“ International Statistical Classification of Diseases and Health Related Problems என்ற பட்டியலில் இந்நோய் வகைப் படுத்தப் பட்டுள்ளது. இந்நோய்க்கான அறிகுறிகள்.





1) தன்னைப் பற்றிய அதிமுக்கியத்துவம். (சாதனைகள், திறமைகளைப் பற்றி மிகைப் படுத்தி நினைத்தல், யதார்த்தத்துக்கு புறம்பாக, தன்னைப் பற்றிய மிகை நினைப்பு)

2) வெற்றி, புகழ், அதிகாரம், அழகு பற்றிய மிதமிஞ்சிய கற்பனை

3) தான் மிக மிக முக்கியமான நபர் என்றும், தன்னைப் பற்றி, மிகுந்த அறிவாளிகள்தான் புரிந்து கொள்ள முடியும் என்றும் ஏற்படும் எண்ணம்

4) தனக்கு எப்போதும் முக்கியத்துவமும், சிறப்பு கவனமும் வழங்கப் படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு

5) அடுத்தவரின் சாதனைகளையும், வெற்றிகளையும் தனதாக கருதுதல்

6) அடுத்தவரின் எண்ணங்களையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ள மறுத்தல்.

7) எப்பொழுதும் அடுத்தவரைப் பார்த்து பொறாமை பட்டு விட்டு, தன் மீது அடுத்தவருக்கு பொறாமை என்று கூறுதல்.

8) அகம்பாவமாய், எவரையும் மதிக்காமல் நடத்தல்

என்ற அறிகுறிகள் இந்நோய் பீடித்தவருக்கு ஏற்படும் என்று, இந்நோய் குறித்த ஆய்வுகள் கூறுகின்றன. இந்த அறிகுறிகள் கருணாநிதிக்கு இருக்கிறதா இல்லையா என்பதை வாசகர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.


இந்நோய்க்கு இந்தப் பெயர் வந்த காரணம் மிக சுவையானது. கிரேக்க புராணத்தில், அந்நோட்டைச் சேர்ந்த ஒரு நார்சிசஸ் என்ற அழகான இளைஞன் குளத்து நீரில், தனது பிம்பத்தைப் பார்த்து அப்பிம்பத்தை காதலிக்கத் தொடங்கினான் என்ற கதை உண்டு.



1911ல் ஓட்டோ ராங்க் என்ற ஆஸ்திரிய நாட்டு மனவியல் ஆராய்ச்சியாளர் முதன் முதலாக நார்சிசம் ஒரு வியாதி என்று கண்டறிந்து சொன்னார்.

அதன் பிறகு இந்த வியாதி பற்றி பல ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

86 வயது ஆகும் கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள இந்த வியாதிக்கு, இந்த வயதில் சிகிச்சை உண்டா இல்லையா என்று உலகில் உள்ள மனவியலாளர்கள் அனைவரையும் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு சவுக்கு கேட்டுக் கொள்கிறது.




இப்படிப்பட்ட வியாதியால் பீடிக்கப் பட்டிருக்கும், கருணாநிதிக்கு வழங்க வேண்டிய பட்டம், தமிழின் தலை மகன் அல்லவே.

தமிழின் தறுதலை மகன் அன்றோ ?





சவுக்கு


தயவு செய்து வாக்களியுங்கள் நண்பர்களே

Friday, December 18, 2009

லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி மீது லஞ்சப் புகார்



லட்சுமி, காவல் கண்காணிப்பாளர்




லட்சுமி.. … மங்களகரமான பெயர். பிறக்க ஒரு ஊர். காவல்துறையில் இருப்பதனால் பிழைக்க பல ஊர்.


சட்டம் படித்து பெரிய வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற ஆசையில், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்தார் லட்சுமி.


அதற்குப் பிறகு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வின் மூலம் நேரடி டிஎஸ்பியாக தேர்ச்சி பெற்று, திருவண்ணாமாலையில் நெடுங்காலம் டிஎஸ்பியாக பணியாற்றினார்.


இவரது கணவர் குமரன் தற்போது திருவண்ணாமலையில் வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார்.
தற்போது, லட்சுமி தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்புத் துறையில் மத்திய சரக காவல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இதற்கு முன், தியாகராய நகர், திருவெல்லிக்கேணி போன்ற இடங்களில் துணை ஆணையராகவும் பணியாற்றி உள்ளார்.


லஞ்ச ஒழிப்புத் துறையில் தற்போது பணியாற்றி வரும் லட்சுமி மீதுதான் திடுக்கிடும் ஊழல் புகார் எழுந்துள்ளது.


“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே” என்ற பாடல் வரி போல, பணியில் சேர்ந்த பிறகு நன்றாகத்தான் இருந்தார் லட்சுமி.
மற்ற காவல்துறை அதிகாரிகள் போலவே, சென்னை மாநகரில் பணியாற்றியவுடன், காவல்துறை அதிகாரிகளுக்கு வரும் அதிகார போதை லட்சுமியையும் பிடித்துக் கொண்டது.


தி.நகர் மற்றும் திருவெல்லிக்கேணியில் பணியாற்றியவுடன், லட்சுமியின் நடவடிக்கையில் பல மாற்றங்கள் வரத் தொடங்கின.


திருவண்ணாமலை மாவட்டத்தில் லட்சுமி, டிஎஸ்பியாக பணியாற்றி வந்த போது, அவரிடம் ஒரு புகார் வந்தது. சுகுமார் ஜெயசிங் என்பவர், வீடு கட்டித் தருகிறேன் என்று உத்தரவாதம் அளித்து, பொது மக்களிடம் பல கோடி ரூபாய்களை சுருட்டியதாக புகார் வந்தது.


வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டிய லட்சுமி திருவண்ணாமலையில் வழக்கறிஞராக உள்ள தன் கணவர் குமரன் தூண்டுதலின் பேரில் “கட்டப் பஞ்சாயத்து“ செய்து, புகாரை பதிவு செய்யாமல் பொது மக்களுக்கு பணத்தை திருப்பி தருகிறேன் என்று குற்றவாளி சுகுமார் ஜெயசிங்கிடம் இருந்து 11.10.2000 அன்று ஒரு கடிதத்தை பெற்றுக் கொண்டு விட்டு விட்டார்.
ஆனால் குற்றவாளி ஜெயசிங் எழுதிக் கொடுத்த படி பொது மக்களுக்கு பணத்தை திருப்பித் தரவில்லை.


மனுதாரர் ராஜ்மோகன் சந்திரா மேலதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் மனுக்களை அனுப்பியதன் பேரில், திருவண்ணாமலை டவுன் காவல் நிலையத்தில் குற்ற எண் 438/2002 என்ற வழக்கு பதிவு செய்யப் பட்டது. ஆனால், வழக்கு வதிவு செய்யப் பட்டும் கூட குற்றவாளி கைது செய்யப் படவில்லை.

வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.
புகார்தாரர், வழக்கு பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆன பின்னும் கூட எவ்வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி வழக்கை விரைவாக முடிக்க ஆணை வேண்டினார். உயர்நீதிமன்றம் 27.09.2007 அன்று 6 மாதங்களுக்குள் இவ்வழக்கின் புலன் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.


ஆனால், லட்சுமியின் தலையீட்டினால், உயர்நீதிமன்ற ஆணை கூட காற்றில் பறக்க விடப் பட்டதாக மனுதாரர் தெரிவிக்கிறார்.


மேலும் மனுதாரர் அளித்த புகாரின் பேரில், லட்சுமி மீது கூட்டுச் சதி, அரசு ஊழியர் லஞ்சம் பெறுவது, அரசு ஊழியர் சட்டத்தை மீறுவது, குற்றவாளிக்கு அடைக்கலம் தருவது, குற்றவாளியை காப்பாற்றுவதற்காக அன்பளிப்பு பெறுவது, குற்றவாளியின் சொத்தை பாதுகாப்பதற்காக சட்டத்தை மீறுவது, வேண்டுமென்றே குற்றவாளியை காப்பாற்றுவதற்காக சட்டத்தை மீறுவது, என்ற இந்தியச் தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் குற்ற எண் 651 மற்றும் 655 ஆகிய இரு வழக்குகள், திருவண்ணாமலை டவுன் காவல்நிலையத்தில் பதிவு செய்யப் பட்டன.


லட்சுமியின் கணவர் குமரன் மீது திருவண்ணாமாலை தாலுகா காவல் நிலையத்தில் நில அபகரிப்பு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.


மனுதாரர் லட்சுமி மீது 10.07.2008, 10.09.2008, 20.08.2009 மற்றும் 31.07.2009 ஆகிய நாட்களில் மேலதிகாரிக்கு அனுப்பிய புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்று தெரிவிக்கிறார்.


இதனால், லட்சுமி மீதான புகார்களுக்கு வழக்கு பதிவு செய்து, துறை நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கேட்டு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.


தற்போது பணியாற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சுப் பணியாளர்களை ஏக வசனத்தில் ஏசுவது, அகங்காரத்தோடு நடந்து கொள்வது, நீண்ட காலம் பணியாற்றியவர்களை மரியாதை குறைவாக நடத்துவது என்று லஞ்ச ஒழிப்புத் துறை பணியாளர்கள் லட்சுமி மீது படிக்கும் புகார் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.


குறிப்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றும், அனுபவம் வாய்ந்த டிஎஸ்பிக்களையும், இன்ஸ்பெக்டர்களையும் மரியாதைக் குறைவாக பேசுவதாக, பலர் தெரிவிக்கின்றனர்.
இப்படி லஞ்சப் புகாருக்கு ஆளான ஒரு அதிகாரி, லஞ்ச ஒழிப்புத் துறையில் உயர் அதிகாரியாக இருப்பது அத்துறையின் நேர்மையையே சந்தேகிக்க வைக்கிறது.


இது மட்டுமன்று. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், துஷ்பிரயோகம் செய்யப் பட்டு வரும் இரண்டு வாகனங்களைப் பற்றிய விபரங்களை கேட்டு ஒருவர் மனு செய்திருந்தார். அந்த மனுவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது என்று பதில் அளித்தார் லட்சுமி.


லஞ்ச ஒழிப்புத் துறை விலக்கு அளிக்கப் பட்டுள்ளதாக அரசு ஆணை வெளியிடப் பட்ட பின்னர், வி.வி.சோமசுந்தரம் என்பவருக்கு பதில் வழங்கப் பட்டது. இந்த விபரத்தை சுட்டிக் காட்டி, தகவல் ஆணையத்தில் வழக்காடப் பட்டது.

மனுதாரர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், ஒருவருக்கு தகவல் வழங்கியும், ஒருவருக்கு வழங்காமலும் பாரபட்சமாக, பொதுத் தகவல் அலுவலர் செயல்படுவதால் அவருக்கு அதிகபட்ச அபராதமாக ரூ.25,000/- அபராதம் விதிக்க வேண்டுமென வாதிட்டார்.


இரு தரப்பு வாதங்களையும் கேட்ட ஆணையம், வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
இது போல, பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் லட்சுமி, இன்னும், லஞ்ச ஒழிப்புத் துறையில் தொடர்ந்து வருகிறார்.


ஊழல் புகாருக்கு ஆளாகியுள்ள காவல் கண்காணிப்பாளர் லட்சுமியை, உடனடியாக வேறு துறைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, உள் துறை செயலாளருக்கும், காவல்துறை தலைமை இயக்குநருக்கும், தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் புகார் மனு அளிக்கப் பட்டுள்ளது.


நடவடிக்கை எடுப்பாரா உள் துறைச் செயலாளர் ?



சவுக்கு