Thursday, September 25, 2014

சென்று வா மகளே... சென்று வா.


18 ஆண்டு கால சரித்திரத்தின் இறுதிப்பக்கங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 27 செப்டம்பர் 2014 ஜெயலலிதா மற்றும் தமிழகத்தின் தலையெழுத்தி திருத்தி எழுதப்பட உள்ளது. 

பத்தி பத்தியாக எழுதப்பட வேண்டிய இந்த சரித்திரம், என்ன காரணத்தாலோ, ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய இந்த வரலாறு, பக்கம் பக்கமாக ஊடகங்கள் எழுத வேண்டும்.  ஆனால், கனத்த மவுனம் காக்கின்றன.



தலைமுறைகளைக் கடந்து நடக்கும் இவ்வழக்கின் விபரங்கள், இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கு தெரிந்திருக்காது.  அது இணையம் இல்லாத காலம்.  அதனால் அது குறித்த பல பதிவுகள் இல்லை.

ஜெயலலிதாவைப் போல ஒரு மோசமான ஆட்சியாளர் / அரசியல்வாதியை பார்க்கவே முடியாது.  கிட்டத்தட்ட ஹிட்லர் ஆட்சி போலத்தான் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நடத்தி வந்தார்.  

ராஜீவ் கொலைக்குப் பிறகு, தேர்தல் ஒரு மாத காலம் தள்ளி வைக்கப்பட்ட பிறகு, நடந்த தமிழக தேர்தலில், திமுக மீது ஏற்பட்ட கோபத்தின் காரணமாகவும், ராஜீவ் மரணத்தின் காரணமாக ஏற்பட்ட அனுதாப அலையின் காரணமாகவும், மிருக பலத்தோடு ஆட்சியைப் பிடித்தார் ஜெயலலிதா.   ஜெயலலிதா எப்படிப்பட்ட ஆணவம் மிகுந்தவர் என்பதை அப்போது தமிழ்நாடு கண்டது.  ஒரு ஆண்டு முடிவதற்குள்ளாகவே, ராஜீவ் அனுதாப அலையால் அதிமுக வெல்லவில்லை....  சொந்த பலத்தில்தான் வெற்றி பெற்றது என்று அறிவித்தார்.   தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் நடந்த கொள்ளைகளுக்கு காரணம் நரசிம்மராவ்தான்.  கைதானவர்கள் எல்லோரும் தெலுங்கு பேசுகிறார்கள், ஆகையால் அனைவரும் ஆந்திராவிலிருந்து வந்தவர்கள் என்று சட்டப்பேரவையிலேயே அறிவித்தார்.

அதன் பிறகு, நாள்தோறும் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம், உள்ளிருப்பு போராட்டம், கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் என்று பல்வேறு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் ஜெயலலிதா.

மற்றொரு புறம், ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்த மதுசூதனன், எஸ்.டிசோமசுந்தரம் ஆகியோர், ஜெயலலிதாவின் மனம் குளிர அத்தனை அடாவடிகளிலும் ஈடுபட்டனர்.  

ஜெயலலிதா ஆட்சியின் தொடக்கமே, ஜெயலலிதா ஆட்சியை விமர்சித்த தராசு இதழின் இரண்டு ஊழியர்களின் படுகொலையில்தான். காவேரி பிரச்சினை காரணமாக, காங்கிரஸ் அரசு கர்நாடக அரசுக்கு ஆதரவாக இருந்தது என்பதால், அதன் அமைச்சர் ப.சிதம்பரத்தின் வாகனத்தை அதிமுகவின் 400 ரவுடிகள் தாக்கினர்.  அண்ணா பல்கலைக்கழகத்தில் மண்டல் பரிந்துரை குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவேன் என்று அறிவித்தார் அதன் துணை வேந்தர் முனைவர் அனந்தகிருஷ்ணன்.  இரண்டு நாட்களில் மர்ம நபர்கள், அவர் வீட்டுக்குள் நுழைந்து அவரை தாக்க முனைந்தனர்.  அனந்த கிருஷ்ணன், வீட்டினுள் இருந்த அறைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டதால் தப்பித்தார்.  சமூக நீதி காத்த வீராங்கனையின் உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றினாராம்.  அதற்குத்தான் இந்த தாக்குதல்.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி 50 சதவிகித இட ஒதுக்கீட்டை மட்டுமே பின்பற்ற வேண்டும், மாறாக தமிழக அரசு 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பின்பற்றுகிறது என்று வழக்கு தொடுத்தார் வழக்கறிஞர் கே.எஸ்.விஜயன்.   இதையடுத்து, இவர் மீது நடந்த கொடூர தாக்குதலில், விஜயனுக்கு, கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மூன்று மாதங்கள் படுக்கையில் இருந்தார்.   இதே போலத்தான் மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரத்தின் மீதும் கொடூரத் தாக்குதல் நடைபெற்றது. 

தொண்ணூறுகளில் வழக்கறிஞர் விஜயன்.

இது போன்ற தாக்குதல் வழக்குகள் அனைத்திலும், போலி குற்றவாளிகளை ஆஜர் படுத்தி, வழக்கின் விசாரணையை திசை திருப்புவதில், காவல்துறை மிக மிக முனைப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

திருத்துரைப்பூண்டி இந்தியக் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ பழனிச்சாமி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுவதாக புகார் கூறினார். மறு நாள், அவர் வீட்டிலேயே, மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர், கள்ளச்சாராயத்தை தேடி சோதனை நடத்தினர்.   

சட்டப்பேரவையில், அப்போதைய பாமக எம்எல்ஏ பண்ருட்டி ராமச்சந்திரன், ஆளுனர் உரைக்கு எதிராக எழுந்து, பேச முயன்றபோது, அப்போது சுயேட்சை எம்எல்ஏவாக இருந்த தாமரைக்கனியால் தாக்கப்பட்டார்.  

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஏ.ஆர்.லட்சுமணன், நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார்.  இந்த வழக்கு ஜெயலலிதாவுக்கு எதிராக செல்லும் என்பதை உணர்ந்த ஜெயலலிதா, காவல்துறையை வைத்து, ஏ.ஆர்.லட்சுமணனின் மருமகன் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்தார். 

ஜெயலலிதாதான் இப்படி அராஜகவாதியாக நடந்து கொள்கிறார் என்றால், ஒட்டு மொத்த நிர்வாகமும் அவருக்கு துணை போனது.  காவல்துறை அதிகாரிகள், அம்மா கட்டி விட்டு வரச் சொன்னால் வெட்டி விட்டு வந்தார்கள்.

அரசியல் எதிரிகள், அப்போது இருந்த ஆள்தூக்கி தடா சட்டத்தின் கீழ் சகட்டு மேனிக்கு கைது செய்யப்பட்டார்கள்.   ஏராளமான திமுகவினர்   விடுதலைப் புலிகளோடு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.    

வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம் என்று அறிவித்த தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை ஏற்போர்ட்டில் இருந்து வெளியே வராமல் நான்கு மணி நேர வன்முறை.  சென்னை வந்து, தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்த சேஷனின் மீது மீண்டும் தாக்குதல்    என்று அநியாயங்களும், அக்கிரமங்களும், ஜெயலலிதா அரசின் அன்றாட வழக்கமாக இருந்தன. 

இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல நடந்த சம்பவம்தான் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலோகா மீதான ஆசிட் வீச்சு.

சதர்ன் பெட்ரோ கெமிக்கல் இன்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் - ஸ்பிக் என்ற நிறுவனத்தின் 26 சதவிகித பங்குகள், தமிழக அரசு நிறுவனமான, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் வசம் இருந்தது (டிட்கோ). ஸ்பிக் நிறுவனத்தின் நிறுவனர்களான, ஏ.சி முத்தையா செட்டியார் மற்றும் எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் ஆகியோர், அரசு வசம் இருந்த பங்குகளை வாங்க வேண்டும் என்று கடும் முயற்சிகள் எடுத்தனர். 

அரசும் பங்குகளை விற்பதென்று முடிவெடுத்தது. ஆனால், என்ன விலைக்கு விற்பனை செய்வத என்பதில் கடும் சிக்கல் நீடித்தது.  டிட்கோ நிறுவனத்தின் தலைவராக சந்திரலேகா ஐஏஎஸ் இருந்தார். அப்போது தொழில் துறை செயலராக பி.சி.சிரியாக் இருந்தார்.

விற்பனை நடந்த அன்று சந்தை விலைக்கு விற்றிருந்தால், அரசின் பங்குகளுக்கு 40 கோடி ரூபாய் கிடைத்திருக்கும்.  ஆனால், அந்த பங்குகளை விலை குறைத்து விற்பனை செய்ய வேண்டும் இரண்டு செட்டியார்களும் விரும்பினர்.  செட்டியார்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதை விட, ஜெயலலிதாவுக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும் ?

24 ஜனவரி 1992 அன்று பங்குகளை செட்டியார்களுக்கு விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்த அன்று, ஒரு பங்கின் விலை 80.  அரசு விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்ட நாள் 23 மார்ச் 1992.  மார்ச் 1992 வாக்கில் 80 ரூபாய்க்கு விற்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு ஸ்பிக் பங்கு, ரூபாய் 210 அளவுக்கு உயர்ந்தது. 

டிட்கோ தலைவரான சந்திரலேகா ஐஏஎஸ், 80 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறார்.  ஜெயலலிதா நேரடியாக சந்திரலேகாவை தொலைபேசியில் அழைத்துப் பேசுகிறார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் வளர்ந்து, அது மோசமான உரையாடலாக மாறி, யார் அழகு என்ற ரீதியில் வளர்ந்ததாகவும், உரையாடலின் இறுதியில், முதலமைச்சராவதற்கு, தோற்றம் அடிப்படை என்றால், நானும் முதல்வராகியிருப்பேன் என்று சந்திரலேகா கூறியதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையடுத்து, இந்த விபரத்தை ஜெயலலிதா அப்போது அமைச்சராக இருந்த மதுசூதனனிடம், சந்திரலேகாவுக்கு தக்க பாடம் புகட்ட சொல்லி, மதுசூதனன், இதை திண்டுக்கல் சீனிவாசனிடம் சொல்லி, சீனிவாசன், இந்த பொறுப்பை தற்போது நத்தம் விஸ்வநாதன் என்று அழைக்கப்படும் விஸ்வநாதனிடம் கூறியதாகவும், நத்தம் விஸ்வநாதன் ஏற்பாடு செய்தபடியே, சுடலை என்கிற சுர்லா சந்திரலேகா மீது ஆசிட் ஊற்றியதாகவும் கூறப்படுகிறது. சிபிஐ விசாரணையில் சுர்லா மதுசூதனனின் பெயரை கூறியதன் அடிப்படையில் மதுசூதனனை கைது கூட செய்தது சிபிஐ இணைப்பு தமிழகத்தில் ஆசிட் கலாச்சாரத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது அந்த சம்பவமே.

சுப்ரமணியன் சுவாமியோடு சந்திரலேகா

சாதாரணமாக நெருப்பு லேசாக நம் மீது பட்டாலே துடி துடித்து விடுகிறோம்.  ஒரு அழகான ஐஏஎஸ் அதிகாரியின் முகத்தில் ஆசிட் வீசினால், அவர் எப்படி வேதனைப் பட்டிருப்பார் என்பதை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.  

ஜெயலலிதாவை நேரடியாக தொடர்புப் படுத்த, நேரடியா எவ்வித சாட்சிகளும் இல்லையென்றாலும்,  சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு நடத்த யாருக்கும் காரணங்கள் இருக்க முடியாது.  அந்த வழக்கில் யார் பின்னணியில் இருந்தவர்கள் என்பது இறுதி வரை கண்டுபிடிக்கவே முடியவில்லை.     பண்டிட் சந்திரகாந்த் சொக்கா மோரே, அண்ணா துரை, சுனில் தாமோதர்     பாண்டவ் மற்றும் மஞ்சித் சிங் என்கிற பாலி ஆகியோர் குற்றவாளிகள் என்று பின்னாளில் விசாரணை நடத்திய சிபிஐ கண்டறிந்தது. 

ஆனால், ஜெயலலிதாவின் கீழ் செயல்பட்ட மாநில காவல்துறை, சுடலைமுத்து என்கிற சுர்லாதான் இதில் குற்றவாளி என்று அவனை கைது செய்து 5 ஆண்டுகள் பிணையில்லாமல் சிறையில் இருந்தான். பின்னாளில், சுர்லாவுக்கு இதில் தொடர்பில்லை என்றனர்.  ஆனால், சுர்லாவோ, சிறையை விட்டு வெளியேறி விடக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தான்.  வழக்கில் தொடர்பில்லை என்று சிபிஐ முடிவுக்கு வருவதற்கு முன்னதாகவே, அவன் வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணமூர்த்தியை நீதிமன்றத்துக்குள்ளாகவே தாக்க முயற்சி செய்தான். 

இந்த வழக்கில் இறுதி வரை யார் குற்றவாளி என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை என்பதுதான் வேதனையான உண்மை.  

காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து, எத்தனையோ போராட்டங்களை நடத்தினாலும், தனி நபராக இணைந்து, ஜெயலலிதா கண்ணில் விரலை விட்டு ஆட்டியது யாரென்றால் சுப்ரமணிய சுவாமிதான்.  திமுக பேரணிகள், பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினாலும், வழக்கு போட்டு, ஜெயலலிதாவை எரிச்சலின் உச்சத்துக்கே அழைத்துச் சென்றது சுப்ரமணிய சுவாமி மட்டுமே. 


30.05.1993 வரை, தமிழகத்தில் ஆளுனராக இருந்தவர், பீஷ்ம நாராயண் சிங். இவரை காங்கிரஸ் அரசாங்கம் நியமித்திருந்தாலும், இவரை வளைப்பது எப்படி என்ற கலையை கற்றிருந்தார் ஜெயலலிதா.   பீஷ்ம நாராயண் சிங்கின் "தேவைகளை" ஜெயலலிதாவின் தளபதிகள், கச்சிதமான நிறைவேற்றி வைத்தனர்.  அப்போது, வால்டர் தேவாரத்திடம் பணியாற்றிக் கொண்டிருந்த லாலி என்ற பெண் காவலர், பீஷ்ம நாராயண் சிங் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டார் என்பது, நீங்கள் புரிந்து கொள்ள ஏதுவாக கொடுக்கப்படும் க்ளு.

ஆளுனர் பீஷ்ம நாராயண் சிங்

காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுகவுக்கும் மோதல் முற்றுகிறது. ஜெயலலிதா காங்கிரஸ் கட்சியை வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.  ஒரு கட்டத்தில், சட்டப்பேரவையிலேயே, தமிழகத்தில் நடக்கும் நெடுஞ்சாலை கொள்ளைகளுக்குக் காரணம், மத்திய அரசுதான்.   தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, நரசிம்மராவ் இப்படி கொள்ளையர்களை அனுப்புகிறார்.  இதற்கு காரணம், பிடிபட்ட கொள்ளையர்கள் அனைவரும் தெலுங்கு பேசுகின்றனர் என்றார். 
இந்த விவகாரங்களையெல்லாம் அறிந்த நரசிம்மராவ், இனி பீஷ்ம நாராயண் சிங்கை தமிழகத்தில் வைத்திருந்தால், சுத்தப்படாது என்று முடிவு செய்து, பழுத்த அரசியல்வாதியான சென்னா ரெட்டியை மாநில ஆளுனராக 31 மே 1993ல் நியமிக்கிறார்.    பீஷ்ம நாராயண் சிங் இருந்தபோது, ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு தொடுக்க அனுமதி கேட்டு திமுக அளித்த விண்ணப்பத்தை நிராகரித்திருந்தார் பீஷ்ம நாராயண் சிங்.  
ஜெயலலிதாவுக்கு, சென்னா ரெட்டி எதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்பது நன்றாகவே தெரிந்திருந்தது.   சென்னா ரெட்டி வந்த நாள் முதலாகவே, தினந்தோறும் மோதல்தான். அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்களுக்காக அரசு அலுவலகத்தில் டைரி அச்சிடப்பட்டு வழங்கப்படும்.   அந்த டைரியின் முதல் பக்கத்தில் மாநில ஆளுனரின் படமும், இரண்டாவது பக்கத்தில், மாநில முதல்வரின் படமும் வைக்கப்படும்.  1994ம் ஆண்டு டைரியில் சென்னா ரெட்டியின் படத்தைப் பார்த்ததும் கோபப்பட்டு டைரியை விசிறியடித்தார் ஜெயலலிதா.   

அப்போதும் இருந்த ஜெயலலிதாவின் அடிமைகள், உடனடியாக அம்மாவின் மனம் கோபித்துக் கொண்டதே என்பதை உணர்ந்து உடனடியாக அத்தனை டைரிகளையும் அழித்தனர்.  ஜனவரி, மாதம் வழங்கப்பட்டிருக்க வேண்டிய டைரிகள், மே மாதம் வழங்கப்பட்டது வரலாறு. 

ஆளுனர் சென்னா ரெட்டி
அதன் பிறகு, சென்னா ரெட்டியை சந்தித்து, ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்க சுப்ரமணிய சுவாமி மனு அளித்தார். அந்த மனு மீது  ஆளுனர் சென்னா ரெட்டி, முட்டாள்கள் தினமான 1995ம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று, அனுமதி அளித்தார்.   அந்த அனுமதியை எதிர்த்து, 6 ஏப்ரல் 1995 அன்று, ஜெயலலிதா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். அவ்வழக்கு நீதிபதி சிவராஜ் பாட்டீல் முன்பு விசாரணைக்கு வருகிறது.. ஜெயலலிதாவுக்காக மூத்த வழக்கறிஞர் பராசரன் ஆஜரானார்.  சுப்ரமணிய சுவாமி தனக்காக தானே வாதாடுகிறார்.  வழக்கை விசாரித்த சிவராஜ் பாட்டீல், அரசியல் அமைப்புச் சட்ட விவாதங்கள் இதில் அடங்கியிருப்பதால், இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுகிறார். 

20 ஏப்ரல் 1995 அன்று இந்த வழக்கு நீதிபதி எம்.சீனிவாசன் மற்றும் எஸ்.எஸ்.சுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக விசாரணைக்கு வருகிறது.   ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் பராசரன் வாதிடுகிறார்.  சுப்ரமணிய சுவாமி, அவரே வாதிடுகிறார்.  தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகிறார். வழக்கின் விசாரணை காலை 10.30 முதல் மாலை 4.30 வரை தொடர்ந்து நடைபெறுகிறது.  வழக்கு விசாரணை முடிந்ததும் தீர்ப்பை ஒத்தி வைக்கிறார் நீதிபதி.   மாலை 4.30 மணிக்கு, அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் முத்துக்கிருஷ்ணன், சுப்ரமணியன் சுவாமியின் காதில் ஏதோ சொல்லுகிறார்.  உடனே எழுந்த சுவாமி, தன் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், போலீசார், வாயிலில் காத்திருப்பதாகவும், தனக்கு முன்ஜாமீன் வழங்கும்படியும் கேட்கிறார். நீதிபதி சீனிவாசன் அரசு வழக்கறிஞரைப் பார்த்து விபரத்தை கேட்டதும், அவர் தனக்கு இது குறித்து எதுவுமே தெரியாது என்கிறார். நீதிபதி, நாளை காலை 10.30 மணி வரை உங்களை கைது செய்ய தடை விதிக்கிறேன் என்கிறார்.

மதுரையில் நடந்த ஒரு கூட்டத்தில், சுப்ரமணிய சுவாமி, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், ஒரு Political Pariah என்று பேசியால், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இதையடுத்தே சுவாமியை கைது செய்ய, காவல்துறை நீதிமன்றம் வந்திருந்தது. 



Pariah என்ற ஆங்கிலச் சொல், தமிழில் உள்ள பறையர் என்ற சாதிப்பெயரில் இருந்தே தோன்றியது.  ஒதுக்கப்பட்டவர் என்ற பொருளில் இந்த சொல், ஆங்கில மொழியில் பதினெட்டாம் நூற்றாண்டு முதல் வழக்கத்தில் இருந்து வருகிறது.  தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக எத்தனையோ வன்கொடுமைகளை இழைக்கப்பட்டபோது வேடிக்கை பார்த்த ஜெயலலிதா, கொடியங்குளத்தில் தலித்துகளின் வீடுகளை காவல்துறையை விட்டு சூறையாடுவதை வேடிக்கை பார்த்த ஜெயலலிதா, சுப்ரமணியன் சுவாமி Political Pariah என்று சொன்னதற்காக, வழக்கு தொடுத்தார்.  அப்படியே சுப்ரமணியன் சுவாமி சாதி ரீதியாக அந்த வார்த்தையை பேசியிருந்தாலும் கூட, அதில் புகார் கொடுக்க வேண்டியது வேலுப்பிள்ளை பிரபாகரன்தானே தவிர, காவல்துறை அல்ல.  

நீதிமன்றத்தின் வெளியே சுவாமி வந்தபோது, அப்போது, மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த வால்டர் தேவாரம் மற்றும், மதுரை ஆணையர் ஆர்.என்.சவானி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கமாண்டோக்கள் சுவாமியை கைது செய்ய காத்திருந்தனர்.  சுவாமியோடு வந்த 30 கமாண்டோக்களும் இருந்தனர்.  ஒரு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

வால்டர் தேவாரம்

சுவாமி வந்ததும், தேவாரம் உங்களை கைது செய்கிறேன் என்றார். சுவாமி, எனக்கு உயர்நீதிமன்ற டிவிஷன் பென்ச், நாளை காலை 10.30 மணி வரை கைது செய்ய தடை விதித்திருக்கிறது என்றார்.  தேவாரம் உத்தரவின் நகலைக் கொடுங்கள் என்றார்.  சுவாமி இது வாய்மொழி உத்தரவு என்றார். நான் நம்ப மாட்டேன் உங்களை கைது செய்கிறேன் என்றார் தேவாரம்.   உடனே சுவாமி, நான் உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கிறது என்று சொல்கிறேன். நீங்கள் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கைது செய்வேன் என்கிறீர்கள்.   நெருப்போடு விளையாடுகிறீர்கள்.    இதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டும் என்கிறார்.

கொஞ்சம் தயங்கிய தேவாரம் மைக் மூலமாக, உயர்நீதிமன்றத்தினுள் இருந்த காவலரை அழைத்து, அரசு குற்றவியல் வழக்கறிஞரிடம் விபரம் கேட்டு சொல்லும்படி உத்தரவிட்டார்.  15 நிமிடங்கள் கழித்து, மைக்கில் அந்த காவலர், அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் பி.ஸ்ரீராமுலு, நீதிபதிகளின் தீர்ப்பை உறுதி செய்ததும், சுவாமியை செல்ல அனுமதித்தார். 

அங்கிருந்து நேராக தன் வீட்டுக்கு சென்ற சுவாமி, ஆளுனரை சந்திக்கப் போவதாக தெரிவித்தார்.  பத்திரிக்கையாளர்களும், அவர் பின்னாலேயே சென்றனர்.  ஆளுனர் மாளிகைக்கு சென்று, சென்னா ரெட்டியை சந்தித்த சுவாமி, மீண்டும் திரும்பி தன் வீட்டுக்கு வந்தார். சிறிது நேரம் கழித்து, முக்கிய டெவலப்மென்டுகள் இருப்பதாகவும், மீண்டும் ஆளுனரை சந்திக்கப் போவதாக அறிவித்து விட்டு கிளம்பினார். பத்திரிக்கையாளர்களும், அவர் பின்னாலேயே சென்றனர். ஹால்டா சந்திப்பு வந்ததும், சுவாமியின் கார், நிற்காமல் நேராக சென்றது. என்ன நடக்கிறது என்பதை உணரும் முன், சுவாமி, நேராக விமான நிலையம் சென்று, வாசலில் தயாராக போர்டிங் பாஸ் வைத்திருந்தவரிடம் அதை பெற்றுக் கொண்டு, எந்த லக்கேஜும் இல்லாமல், விமான நிலையத்தினுள் நுழைந்து, மும்பை செல்லும் விமான நிலையத்தில் ஏறினார்.

விமானம் கிளம்ப இன்னும் 30 நிமிடங்கள் இருந்தன.  செய்தியறிந்த ஜெயலலிதா ருத்ர தாண்டவம் ஆடினார். என்ன ஆனாலும் சரி. சுவாமியை விமானத்துக்குள் ஏறி கைது செய்யுங்கள் என்றார்.  அப்போது சென்னை மாநகர ஆணையர் ராஜகோபாலன்.  டிஜிபியாக ஸ்ரீபால் இருந்தார். இருவரும், விமான நிலைய வாயில் வரைதான் தமிழக காவல்துறையின் கட்டுப்பாடு.  விமான நிலையத்தின் உள்ளே மத்திய அரசின் கட்டுப்பாடு. விமான நிலையத்தில் ஏறுவதில்லை என்று முடிவெடுத்தனர். 

மறுநாள் காலை, புதிய டிஜிபி மற்றும் புதிய ஆணையர்.   ஆளுனரைப் பார்க்க சென்ற சுவாமி, ஆளுனர் மாளிகையில் இருந்து மத்திய உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சவாணை தொடர்பு கொண்டு, விபரத்தை சொல்லுகிறார்.   சவாண், உடனடியாக டெல்லி வருமாறும், டெல்லி விமானம் உடனடியாக இல்லாத காரணத்தால், மும்பை சென்று, அங்கிருந்து டெல்லி வருமாறும் கூறுகிறார்.   அதன்படி, மும்பை சென்ற சுவாமி, தமிழக காவல்துறையிடமிருந்து தப்பிக்க, நேராக பால் தாக்கரே இல்லத்தில் சென்று, தங்கி விட்டு, அங்கிருந்து டெல்லி சென்றார்.



டெல்லியில் 10.30 மணி முடிந்ததும் சுவாமியை கைது செய்யலாம் என்று தமிழக காவல்துறை காந்திருந்தது.  9 மணிக்கே உச்சநீதிமன்றத்தினுள் சென்ற சுவாமி தலைமை நீதிபதி அகமாதியை அவர் அறையில் சந்தித்து விபரங்களை தெரிவிக்கிறார்.   அகமாதி 10.30 மணிக்கு நீதிமன்றத்தினுள் வந்து கூறுமாறு கூறியதன் அடிப்படையில் அவ்வாறே செய்கிறார் சுவாமி. வழக்கின் விபரங்களை கேட்ட அகமாதி சிரித்து விட்டு, இந்தியாவில் எந்த மூலையில் அவர் கைது செய்யப்பட்டாலும், 100 ரூபாய்க்கான சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு, உத்தரவின் நகலையும் உடனே வழங்க உத்தரவிடுகிறார்.  வெற்றிக் களிப்போடு வெளியேறினார் சுவாமி.

இந்த வழக்கின் தீர்ப்பு 27 ஏப்ரல் அன்று வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்தன.  சென்னா ரெட்டி வழக்கு தொடுக்க கொடுக்க இருந்த அனுமதி சரி என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று அறிந்ததும் 26 அன்று சட்டசபையில் ஒரு அடிமையை விட்டு கேள்வி கேட்க வைத்தார் ஜெயலலிதா. அவரும் அப்படியே கேட்டார். உடனே ஜெயலலிதா, நான் ஆளுனரை சந்திப்பதை ஏன் தவிர்க்கிறேன் என்றால், கடந்த முறை ஆளுனரை சந்தித்தபோது, என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று கூசாமல் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.  இதுதான் ஜெயலலிதா.



தனக்கு எதிராக தீர்ப்பு வர இருக்கிறது என்று தெரிந்ததும் அதற்கு காரணமான சென்னா ரெட்டியை அவமானப்படுத்துகிறாராம்.   இந்த சம்பவத்தையும், தற்போது சொத்துக் குவிப்பு வழக்கின் புகார்தாரரான சுப்ரமணியன் சுவாமியின் மீது ஜெயலலிதா தொடர்ந்துள்ள 5 அவதூறு வழக்குகளையும் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.  தெளிவு பிறக்கும். 

நீதிபதி எம்.ஸ்ரீனிவாசன்
அதன் பின் நீதிபதி என்.சீனிவாசன் ஆளுனர் அளித்த அனுமதி செல்லும் என்று தீர்ப்பளித்ததும், உச்சநீதிமன்றம் சென்று தடை பெற்றார் ஜெயலலிதா.   அந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு, இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பது ஒரு சோகமான வரலாறு.

பதவியில் இருக்கும் ஒரு முதலமைச்சருக்கு எதிராக ஆளுனர் ஊழல் வழக்கு தொடுக்க அனுமதி கொடுத்த முதல் நபர் ஜெயலலிதா என்று வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் இடம் பிடித்தார் ஜெயலலிதா. இதற்கு முன், இதே போல மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் ஏ.ஆர்.அந்துலேவுக்கு எதிராக அம்மாநில ஆளுனர் அனுமதி அளிக்க இருந்தார்.  ஆனால் அனுமதி அளிப்பதற்கு முன்னதாகவே, பதவியை ராஜினாமா செய்தார் அந்துலே. ஊழல் பேர்வழியாக இருந்தாலும், அந்துலே பொதுமக்கள் கருத்துக்கு மரியாதை கொடுத்தார்.   

ஆனால் ஜெயலலிதா ? 

இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்பது தெரிந்தும், நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்து, அதற்காக ஒரு புதிய வழக்கை வாங்கிய அறிவாளிதான் ஜெயலலிதா.

இந்த வழக்கு குறித்து பேசிய ஒரு மூத்த பத்திரிக்கையாளர் கூறுகையில் "18 ஆண்டுகளாக இந்திய நீதித்துறையை ஜெயலலிதா கற்பழித்துள்ளார். இது போல ஒரு வழக்கை இந்தியாவில் எந்த அரசியல்வாதியும் இழுத்தடித்தது கிடையாது. வழக்கறிஞரின் மாமனாருக்கு உடல் நிலை சரியில்லை என்பதையெல்லாம் காரணம் காட்டி வாய்தா கேட்டனர். நீண்ட தாமதத்துக்குப் பிறகு, இவ்வழக்கின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பச்சாபுராவை கதற வைத்தனர்.  மனம் நொந்த அவர், கடந்த ஆறு மாதங்களாக இவ்வழக்கில் ஒரு முன்னேற்றமும் இல்லை. நான் இந்த நீதிமன்றத்தில் தனியாக எந்த வேலையும் இல்லாமல் அமர்ந்திருக்கிறேன். ஏறக்குறைய தனிமைச் சிறையில் இருப்பது போல உணர்கிறேன் என்று அவர் மனம் நொந்து புலம்பினார்.

அடுத்ததாக இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா மீது கர்நாடக லோக் ஆயுக்தாவில் பொய்யான ஒரு வழக்கை தாக்கல் செய்து, அவரை மனம் நோகச் செய்து, ராஜினாமா செய்ய வைத்தனர்.  60 ரூபாய் ஊதியம் பெற்ற ஒருவருக்கு 66 கோடி ரூபாய் எப்படி வந்தது என்ற மிக மிக எளிமையான வழக்கு இது. ஆனால், 18 வருடங்களாக இந்த வழக்கை இழுத்தடிக்க ஒரு அரசியல்வாதியால் முடிகிறது என்பது, இந்தியாவின் மிகப்பெரிய சாபக்கேடு." என்ற அவர் மேலும், "தனது நண்பர்கள் ஒவ்வொருவராக எதிரியாக்கியதன் மூலம், ஜெயலலிதா தன்னுடைய மரண வேட்கையை வெளிப்படுத்துகிறார்.  90 வயதிலும் கருணாநிதிக்கு இன்னும் மூன்று முறை முதல்வராக வேண்டும், கட்சியையும் தமிழகத்தையும் ஆள வேண்டும் என்ற வேட்கை உள்ளது.  ஆனால், ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா தன்னுடைய மரண வேட்கையைத்தான் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்" என்றார்.

அவர் கூறியது உண்மை என்று உணர்த்தும் வண்ணமே ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. ஜெயலலிதாவோடு, ஒட்டி உறவாட விரும்பும் பல்வேறு பார்ப்பனீய சக்திகள் பிஜேபி முழுக்க நிறைந்துள்ளன. ஆனால், எந்த விதமான அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்த இயலாத ஒரு மிக மிக சாதாரணமான உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஒரே கட்சியான பிஜேபியின் வேட்பாளர்களை கடத்துவது, கட்சி மாறச் செய்வது, வேட்பு மனுக்களை வாபஸ் பெறச் செய்வது என்ற தனது நடவடிக்கைகளின் மூலம், ஜெயலலிதா தனது மரண வேட்கையையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

எப்படியாவது ஜெயலலிதாவுக்கு உதவலாம் என்று நினைப்பவர்களைக் கூட, வம்பாக சண்டை இழுத்து எதிரியாக்குகிறார்.    

நாளை சிறை என்ற அச்சுறுத்தல் இருக்கையில் உலகில் எந்த அரசியல்வாதியாவது,  மின் கட்டணத்தை 20 சதவிகிதம் உயர்த்துவானா ? இது ஜெயலலிதாவின் மன நிலையையும், சாடிசத் தன்மையையுமே உணர்த்துகிறது.  இப்படிப்பட்ட ஒரு மன நிலை உடையவர் தொடர்ந்து தமிழகத்தை ஆட்சி செய்தால், அதனால், தமிழக மக்கள் அடைய உள்ள துன்பங்கள் ஒன்றிரண்டு அல்ல.

இந்த கட்டுரையும், இது போல பல்வேறு விபரங்களும், தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிக்கைகளிலும், தீர்ப்பு நாள் அறிவிக்கப்பட்டது முதல், வெளி வந்திருக்க வேண்டும்.  இன்றைய தலைமுறைக்கு இந்த விபரங்கள் சுத்தமாக தெரியாது.  ஆனால், ஜுனியர் விகடனைத் தவிர்த்து ஒரு ஊடகம் கூட இது குறித்து எழுதாமல் கள்ள மவுனம் சாதிக்கின்றன.  
அந்த பத்திரிக்கையாளர் இது குறித்து கூறுகையில், "இந்த வழக்கில் ஜெயலலிதா விடுதலையானால் கூட என்னால் சகித்துக் கொள்ள முடியும்.  அப்படி விடுதலை ஆனால் மைக்கேல் குன்ஹாவைக் கூட மன்னிப்பேன்.   ஆனால், இந்த சோரம் போன ஊடகங்களை ஒரு போதும் மன்னிக்க மாட்டேன். பக்கம் பக்கமாக எழுதப்பட வேண்டிய ஒரு விஷயத்தை இந்த ஊடகங்கள் திட்டமிட்டு மூடி மறைக்கின்றன.   

ஜெயலலிதாவின் வழக்கு குறித்து எழுதாவிட்டால் ஜெயலலிதா காப்பாற்றப்படுவார் என்பது போன்ற பொய்யான நம்பிக்கையின் அடிப்படையில் இந்த ஊடகங்கள் மவுனம் காக்கின்றன.  ஜெயலலிதாவின் 91 ஆட்சியிலும், 2001 ஆட்சியிலும், பல்வேறு ஊழல்கள் வெளி வந்ததற்கான ஒரே காரணம் ஊடகங்களின் அற்புதமான பணிதான்.   ஆனால், 2011 ஆட்சியில் ஊடகங்கள் மிக மிக மோசமான துரோகத்தை தமிழகத்துக்கு செய்து கொண்டிருக்கின்றன.  ஊடகங்களின் மவுனம், இந்த ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து"  என்றார்.

அரசியல்வாதிகளின் ஊழல்களை கூட மன்னித்து விடலாம். ஆனால் ஐஏஎஸ் அதிகாரியின் முகத்தில் ஆசிட்டை ஊற்றுவதும், மகாமகக் குளத்தில் தோழியோடு குளிப்பதற்காக, நெரிசலில் 50க்கும் மேற்பட்டடவர்களை நெரிசலில் சாக வைப்பதும் ஏற்றுக் கொள்ள முடியுமா ?  அந்த மகாமகக் குளத்தில் உங்கள் பெற்றோரும், என் பெற்றோரும் இறந்திருக்கக் கூடும்தானே..... ?   இதற்கெல்லாம் தண்டனை வேண்டாமா.... ?  அதுதான் சொத்துக் குவிப்பு வழக்கு.  

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.

Tuesday, September 16, 2014

சி.டி.செல்வம் என்ற மொள்ளமாறி - பாகம் இரண்டு.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நமது முன்னோர்கள், நீதிபதிகளின் மீது நடவடிக்கையே எடுக்க இயலாத அளவுக்கு, மிக மிக சிக்கலான ஒரு பாதுகாப்பை உருவாக்கி வைத்துள்ளார்கள்.   இது எதற்காக என்றால், நீதிபதிகள் தவறான குற்றச் சாட்டுகள் காரணமாக, தங்களின் பணியை நேர்மையாக செய்வதிலிருந்து விலகக் கூடாது. எவ்வித அச்சுறுத்தலும் இன்றி, அவ்ரகள் தங்கள் பணிகளை செவ்வனே செய்ய வேண்டும் என்பதற்காகவே அப்படிப்பட்ட பாதுகாப்பு.

இந்தியாவின் உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வருபவர்கள், கிருஷ்ணய்யர்களாகவும், எச்.ஆர்.கண்ணாக்களும், எம்.சீனிவாசன்களும், அகமாதிகளாகவும் இருப்பார்கள் என்று நம்பினார்கள். 

கர்ணன்களும், கே.ஜி.பாலகிருஷ்ணன்களும், பி.டி.தினகரன்களும், சதாசிவங்களும், சி.டி.செல்வங்களும், அருணா ஜெகதீசன்களும் பின்னாளில் இந்திய நீதித்துறைக்கு தீராத களங்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பதை, நமது முன்னோர்கள் சற்றும் உணரவில்லை. இந்த பாதுகாப்பின் காரணமாகவே, வைகுண்டராஜனிடம் பணம் வாங்கிக் கொண்டு கர்ணனால், அப்பட்டமாக 29 வழக்குகளில் ஒரே நாளில் தீர்ப்பு வழங்க முடிகிறது.   இதனால்தான், நீதிபதி சி.டி.செல்வத்தால், ஊழலை அம்பலப்படுத்த இணையதளம் நடத்தும் ஒருவனை, ஆறு மாதமாக தலைமறைவு வாழ்க்கை வாழ வைத்து, அவன் இணையதளத்தை முடக்க, வாரம் நான்கு உத்தரவுகளை பிறப்பிக்க முடிகிறது. அருணா ஜெகதீசனால், சிபிஐ விசாரணையிலிருந்து 4 மருத்துவக் கல்லூரிகளை காப்பாற்ற முடிகிறது.

நீதிபதி சி.டி.செல்வம் சவுக்கு தளத்தை தடை செய்ய முயற்சித்த காரணம், என்னவென்பது, முந்தைய கட்டுரையிலேயே விளக்கப்பட்டிருந்தது. இணைப்பு 

நீதிபதி ஆர்.கே.அகர்வால்
சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட ராகேஷ் குமார் அகர்வால், தனது பிரிவு உபச்சார விழாவில், மிகுந்த மனவேதனையோடு பேசினார்.  நீதிபதி அகர்வால்  "சென்னை உயர் நீதிமன்றத்தில், பணியில் இணைந்த போது, அனைவரும் திறந்த மனதோடு வரவேற்றீர்கள்; ஆதரவை தெரிவித்தீர்கள். இந்த நீதிமன்றத்தில், ஒரு அங்கம் என்ற நிலையில் பணியாற்றினேன். திடீரென ஒரு நாள், என்னை வேற்று நபராக, வழக்கறிஞர்களில் ஒரு பகுதியினர் கருதியதில், நான் மனதளவில் காயமடைந்தேன். என்னால் முடிந்ததை சிறப்பாகச் செய்தேன். சென்னை உயர் நீதிமன்றம், 150 ஆண்டு கால பாரம்பரியம் மிக்கது. அதன் பெருமையை குறைக்கும் வகையில், எதையும் செய்யக்கூடாது. நம் நடத்தையில், செயல்களில் கவனமுடன் இருக்க வேண்டும். ஆனால், ஆபத்து வெளியில் இல்லை; உள்ளுக்குள் தான் இருக்கிறது. சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள், உயர் நீதிமன்றத்தின் புகழில், வெகுவான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. 37 ஆண்டுகளாக, நீதித் துறையில் இருக்கும் என்னிடம், நீதிமன்ற நடவடிக்கையின் போது, யாரும் உரத்த குரலில் பேசியதில்லை. ஆனால், இங்கு, சக நீதிபதி ஒருவர், என் மீது வசைமாரி பொழிந்தார். என்னைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்கள் குறித்து, நான் கவலைப்பட்டதில்லை. ஆனால், உயர் நீதிமன்றம் குறித்த விமர்சனம், என்னை வருத்தப்படச் செய்தது.

சக நீதிபதிகள் பலரும், வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றலாகி செல்ல விரும்புவதாக, என்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்தனர். மற்ற உயர் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள், இந்த நீதிமன்றத்துக்கு வர, தயக்கம் காட்டுகின்றனர். உடன்படாத விஷயங்களை, உள்ளுக்குள் தீர்த்துக் கொள்ளலாம்; வெளியில் கொண்டு செல்வதன் மூலம், விமர்சனத்துக்கு ஆளாகும். "கிளையில் அமர்ந்து கொண்டு மரத்தை வெட்ட வேண்டாம்' என, எல்லாரையும் கேட்டுக் கொள்கிறேன். நாம் பணியாற்றும் இந்த பெரிய நிறுவனத்தால் தான் நமக்கு மரியாதை, புகழ் கிடைத்துள்ளது என்பதை, ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்" இணைப்பு.

இவருக்கு முன்பு தலைமை நீதிபதியாக இருந்த இக்பாலும், கர்ணன் மீது அறிக்கை அனுப்பினார்.  நீதிபதி அகர்வாலும் அனுப்பினார். ஆனால், எந்த அறிக்கையும் கர்ணன் மீது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.  மாறாக, நீதிபதி கர்ணன், இன்னும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆனந்தமாக அமர்ந்து, அட்டகாசமாக தனது வசூலை நடத்திக் கொண்டு வருகிறார்.   இதுதான் யதார்த்தம்.

savukku.net, savukku.in, newsavukku.com, newsavukku.org, ctselvam.com, ctselvam.org, newsavukku.in, savukku.blogspot.in, newsavukku.blogspot.in  இந்த தளங்கள், சி.டி.செல்வத்தின் உத்தரவால் தடை செய்யப்பட்டுள்ளவை.   ஒரு தளத்தை தடை செய்ய, கூகிளோ, அல்லது மற்ற நிறுவனங்களோ வைத்திருக்கும் அளவுகோள், ஒரே அளவுகோள்.   18 வயதுக்கு கீழானவர்களை வைத்து எடுக்கப்படும் நீலப்படங்கள், மற்றும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் விவகாரங்கள்.  இந்த இரண்டு காரணங்களுக்காக மட்டுமே ஒரு தளம் தடை செய்யப்படும். 

ஆனால் சவுக்கு, இந்த இரண்டு பிரிவுகளிலும் அடங்காது என்பது, அனைவருக்கும் தெரியும்.   அப்படியென்ன குற்றத்தை செய்து விட்டது சவுக்கு..... ?  இணைய முகவரிகளுக்கு தடை விதித்ததோடு அல்லாமல், முகநூலுக்கு தடை, ட்விட்டருக்கு தடை.  விக்கிபீடியா பக்கத்தைக் கூட விட்டு வைக்கவில்லை.  



நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல.   கோர்ட் நடத்துறியா... கோமாளித்தனம் பண்றியா ?

என்னய்யா தப்பு பண்ணான் என் கட்சிக்காரன் ?  என்ன பண்ணான் ? ஏதோ ஒரு வெப்சைட் நடத்துறான்.... அதுல ஊழலை பத்தி எழுதறான்.  எழுதுனா படிச்சிட்டு போக வேண்டியதுதானே ? அதானேயா உலக வழக்கம்.... ? அத விட்டுட்டு, தெனம் தெனம் ஆர்டர் போட்டு, கட்சிக் காரனை ஓட விட்ருக்கீங்க...

அட வெப்சைட்டை தடை பண்ணாலும் பரவாயில்லைய்யா.... போற வர்ற வக்கீலையெல்லாம் விட்டு, புகார் கொடுக்க வச்சிருக்கீங்க.... புது புது கேசா போட்றீங்க.   ஏதோ எனர்ஜி இருக்கறதுனால தப்பிச்சிருக்கான்யா...... ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிருந்தா இந்த வெப்சைட்டை யாரு காப்பாத்தறது....    ஊழலை எப்படி   ஒழிக்கறது ? 

இப்படி வடிவேலு ஸ்டைலில்தான் செல்வத்தைப் பார்த்துக் கேட்க வேண்டும்.   ஆனால், செல்வம் செய்த காரியம் இப்படி நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக் கூடியதல்ல.  அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்.

National Cyber Safety and Security Standards என்ற தனியார் அமைப்பை தேர்ந்தெடுத்து, அதன் தென் மண்டல தலைவரான காளிராஜ்  என்பவரின் பெயரை தனது தீர்ப்பில் குறிப்பிட்டு, அவரை சவுக்கு தளத்தை தடை செய்ய நியமிக்கிறார்.    ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, அரசு அதிகாரிகளை நியமிக்காமல், எப்படி ஒரு தனியார் அமைப்பை சேர்ந்தவரை ஒரு வழக்கை புலனாய்வு செய்ய நியமிக்கிறார் என்பது புரியாத புதிராக இருந்தது. 
காளிராஜ் பெயரைப்போட்டு, சி.டி.செல்வம் பிறப்பித்த உத்தரவு

இந்த உரையாடல்களைக் கேளுங்கள்.  எப்படி என்பது உங்களுக்கே விளங்கும்.


இந்த இரண்டு உரையாடல்களிலும், பேசுவது, காளிராஜ்.  சைபர் செக்யூரிட்டி அமைப்பின் தென் மண்டல இயக்குநராம்.  (எவன்டா குடுத்தது உங்களுக்கு இந்த டைட்டிலையெல்லாம்)

உரையாடலில் காளிராஜ் குறிப்பிடும் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி.  வலது ஓரத்தில் இருப்பவர்தான் காளிராஜ்.  அவருக்கு அருகே இருப்பதுதான் மூத்த புலனாய்வு அதிகாரி அமர் பிரசாத் ரெட்டி
இந்த National Cyber Safety and Security Standards இருப்பது பலருக்குத் தெரியாது.  இது ஒரு தனியார் அமைப்பு என்பதும் யாருக்கும் தெரியாது.  இந்த அமைப்பு நமது கவனத்துக்கு வந்ததே, சி.டி.செல்வம் இந்த அமைப்பை சவுக்கு தளத்தை தடை செய்ய தேர்வு செய்தபோதுதான். இந்த அமைப்பைப் பற்றி விசாரிக்க வேண்டிய தேவை வந்தது.  

விசாரித்தால் தோண்ட தோண்ட பூதங்கள் வருகின்றன. இந்த அமைப்பு முழுக்க முழுக்க ஒரு தனியார் அமைப்பு.  தங்களை ஒரு அரசு அமைப்பு போல தோற்றம் ஏற்படுத்திக் கொண்டு, பல்வேறு அரசு அதிகாரிகளை இவர்கள் ஏமாற்றி வருகின்றனர் என்ற விபரமே இப்போதுதான் தெரிய வருகிறது. 

சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் கூட, இந்த அமர் பிரசாத் ரெட்டியிடம் ஏமாந்துள்ளார் என்பது இப்போதுதான் தெரிய வருகிறது. சவுக்கு தளத்தை தடை செய்ய இந்த அமைப்பை தேர்ந்தெடுத்து, செல்வம் உத்தரவிட்டதும், இதன் அடிஷனல் டைரக்டர் ஜெனரல் (வௌக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சம் என்பது, இதற்கு முழுமையாக பொருந்தும்) அமர் பிரசாத் ரெட்டி, ஜார்ஜை சந்தித்து தனது விசிட்டிங் கார்டை அளித்திருக்கிறார்.   அதைப் பார்த்த ஜார்ஜ், இந்த நபர், உண்மையிலேயே மத்திய அரசின் அடிஷனல் டைரக்டர் ஜெனரல் என்று நினைத்து, சைபர் கிரைம் பிரிவினரை அழைத்து, இவருக்கு அனைத்து உதவிகளையும் செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார்.  இதையடுத்து, சைபர் கிரைம் அதிகாரிகள், கமிஷனரே சொல்லி விட்டார் நாம் என்ன செய்ய முடியும் என்று இந்த அமர் பிரசாத் ரெட்டி நினைத்ததையெல்லாம் செய்ய அனுமதித்திருக்கிறார்கள். 

போத்தி காளிமுத்து கைதான அன்று காலை 9 மணிக்கு சைபர் கிரைம் பிரிவுக்கு வந்த அமர் பிரசாத் ரெட்டி, போத்தியை விசாரிக்க தொடங்குகிறார்.  வந்ததும், போத்தியின் கைபேசியை கைப்பற்றுகிறார் அமர்.  அது வரை, காவல்துறை அதிகாரிகள் கூட, போத்தியின் தொலைபேசியை கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சங்கரை நேரில் பார்த்திருக்கிறாயா.... சங்கரோடு போனில் பேசியிருக்கிறாயா...  பேஸ்புக்கை தவிர்த்து, சங்கரை வேறு எப்படி தொடர்பு கொள்வாய்.  சங்கர் உனக்கு எவ்வளவு பணம் கொடுத்தார். நீயும் சங்கரும் சேர்ந்து, எத்தனை பேரை ப்ளாக் மெயில் செய்து, எவ்வளவு பணம் சம்பாதித்திருக்கிறீர்கள்.  சங்கரோடு உரையாடுகையில் ப்ரோ என்று சொல்லுகிறான்..... அவன் உனக்கு என்ன சகோதரனா ?  நீ என்ன அவனை சார் சார் என்று அழைக்கிறாய்... 

அவன் என்ன அவ்வளவு  பெரிய .................... ?  அவன் என்ன சொன்னாலும் செய்து விடுவாயா ?  நீ என்ன அவனுக்கு அடிமையா ? பல இடங்களில் உன்னுடைய உண்மையான முகவரியை அளிக்காமல் மறைத்திருக்கிறாய்.  (இணைய தளங்களில் பதிவு செய்கையில்) சட்டவிரோதமாக என்ன காரியத்தை செய்து வருகிறாய் நீ ? எதற்காக உன்னுடைய அடையாளத்தை மறைக்கிறாய். நீ கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால்தான் உன் அடையாளத்தை மறைக்கிறாய்.... சவுக்கு தளத்தின் பேக்அப் எங்கே உள்ளது...   உன்னிடம் இருக்கும் அத்தனை ஈமெயில்களின் பாஸ்வேர்டை கொடு.  பேஸ்புக் பாஸ்வேர்டை கொடு.    மொத்தம் எத்தனை பேக்கப் வைத்திருக்கிறாய்.   
பிறகு போத்தியின் போனை வாங்கி அதில் உள்ள எஸ்எம்எஸ்களை பார்த்து, எத்தனை பேங்கில் அக்கவுன்ட் வைத்திருக்கிறாய் என்று பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார்.    பேஸ்புக்கில் சங்கரோடு, சேட் செய்ய வைத்து, அணு சக்தி ரகசியங்கள் வேண்டுமா என்று கேள்.... ஜெயலலிதாவை திட்டி எழுதச் சொல்.  ஜெயலலிதா பேரில் இணைய தளம் தொடங்கலாமா என்று கேள் என்று போத்தியை கடுமையாக மிரட்டியுள்ளார்.  

காவல்துறை அதிகாரிகள் கேள்வி கேட்டால் நாம் பதில் சொல்லலாம். ஆனால், ஒரு பொறுக்கி, நீதிமன்ற உத்தரவை வைத்துக் கொண்டு, காவல்துறையினரின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு, ஒரு இந்தியக் குடிமகனை கைது செய்து விசாரிப்பது எப்படிப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல் தெரியுமா ?  அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை காப்பாற்றுவதே, நீதிமன்றங்களின் பணி.  அதற்காகத்தான் உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் இருக்கின்றன.   ஒவ்வொரு குடிமகளின் உரிமைகளை பாதுகாத்து, அவன் உரிமைகள் மீறப்படுகையில் அதற்கெதிரான உத்தரவுகளை பிறப்பித்து, அவன் உரிமைகளை காப்பாற்றுவது, ஒவ்வொரு உயர்நீதின்ற நீதிபதியின் கடமை. ஆனால், இப்படி செய்ய வேண்டிய சி.டி.செல்வம், ஒரு தனி நபர் மூலமாக, ஒரு இந்தியக் குடிமகனின் உரிமைகளை பறித்து, அவனை அநியாயமாக 45 நாட்கள் சிறையில் வைக்க உத்தரவிடுகிறார் என்றால் இதைப் பிறப்பித்த சி.டி.செல்வத்தை என்ன செய்யலாம் ?  

தன் சொந்த தம்பியோடு இருக்கும் சொத்துத் தகராறை நீதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தம்பி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து அவரை கைது செய்ய கைது வாரண்ட் பிறப்பித்ததை விட, கேடு கெட்ட செயல் இருக்கவே முடியாது.  ஆனால், இப்படிப்பட்ட கேடுகெட்ட செயலை செய்த சி.டி.செல்வத்தை, தலைமை நீதிபதியும், உச்சநீதிமன்றமும், இன்னமும் அனுமதித்துக் கொண்டு இருக்கிறது. சொந்த தம்பியுடனான சொத்துத் தகராறை தீர்த்துக் கொள்ள, நீதிமன்ற அதிகாரத்தை எப்படி சி.டி.செல்வம் பயன்படுத்துகிறாரோ, அதே வகையில்தான், சவுக்கு தளத்தை முடக்குவதற்கும், தனது அதிகாரத்தை பயன்படுத்துகிறார். 

இப்படிப்பட்ட நபரை மொள்ளமாறி என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது ?

Monday, September 15, 2014

சி.டி.செல்வம் என்ற மொள்ளமாறி.

சவுக்கு இணையதளம், தொடங்கிய நாள் முதலாகவே, அதிகார வர்க்கத்துக்கு, மிகப்பெரிய சவாலாகவே இருந்து வந்துள்ளது.   ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள், அமைச்சர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், என்று அதிகாரம் பொருந்திய எந்த அமைப்பையும் சவுக்கு விட்டு வைத்ததே கிடையாது. 



இப்படி கடுமையான விமர்சனங்களை செய்வதில், சவுக்குக்கு, சாதி பாகுபாடோ, மத பாகுபாடோ, கட்சி பாகுபாடோ, நிற பாகுபாடோ அறவே கிடையாது என்பது, 2009 முதல், சவுக்கு தளத்தை தொடர்ந்து பின்தொடர்ந்து வருபவர்களுக்கு நன்றாகவே தெரியும். இத்தளத்தை எப்படியாவது முடக்க வேண்டுமென்று, ஒட்டுமொத்த அதிகார வர்க்கமும் முயன்றாலும், முடக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது, நீதிபதி சி.டி.செல்வம் மட்டுமே.

சவுக்கு தளம் மற்றும், அதை நடத்துவதாக சந்தேகப்படும் நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது மகாலட்சுமி என்ற வழக்கறிஞரைப் பற்றி அவதூறான கட்டுரை எழுதியதற்காகவே.    அந்த கட்டுரை அவதூறான கட்டுரை என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.   பல்வேறு ஊழல்களை அம்பலப்படுத்திய சவுக்கு, ஒரு தனி நபர் விவகாரத்தில் நுழைந்து, ஒரு பெண்ணைப் பற்றி அவதூறாக எழுதியது, குற்றமா என்றால் குற்றமே.   

ஆனால், தன்னுடைய கள்ளக்காதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக, நீதிமன்ற ஆவணங்களை திருத்தி, ஒரு அப்பாவி பெண்ணின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அந்தப் பெண்ணை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தூண்டி, அவளை வாழ்வை விட்டே ஓட ஓட விரட்டினால், அது பற்றி தகவல் வருகையில், சவுக்கு தனி நபர் விவகாரங்களில் தலையிட்டே தீரும்.  இந்த நிலை, என் தங்கைக்கும், உங்கள் தங்கைக்கும் வரலாம்.  அப்படி ஒரு நிலை வந்தால், பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் நிலையில் இருந்துதான் சவுக்கு சிந்திக்கும்.   அப்படி சிந்தித்து உருவாகியதே இந்த கட்டுரை.


இந்தக் கட்டுரை எழுதியதற்காக, அவதூறு வழக்கு தொடரலாம்.   அந்த கட்டுரையை நீக்க சொல்லலாம்.    அல்லது, அந்தக் கட்டுரையை எழுதியவரை கைது செய்யலாம். 

ஆனால், நீதிபதி சி.டி.செல்வம், கட்டுரையை எழுதியவரை கைது செய்ய உத்தரவிட்டதோடு, அந்த இணைய தளத்தை வடிவமைத்தவரை கைது செய்ய உத்தரவிட்டார்.   சட்டவிரோதமான உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் காவல்துறைக்கு என்றுமே கிடையாது.  ஆனால், சேட்டன் ஜார்ஜ் குட்டி, குட்டிகளோடு நேரத்தை செலவிடுவதை விட்டு விட்டு, சவுக்கு தளத்தை தடை செய்ய முனைந்தார்.

சவுக்கு தளத்தை வடிவமைத்ததாக கருதப்படும், முருகைய்யன் என்பவர், கைது செய்யப்பட்டார்.  அந்தக் கைது மகாலட்சுமி என்ற பெண் வழக்கறிஞருக்காக அல்ல.  மாறாக, திமுகவை குழி தோண்டி புதைக்க வகை செய்யும் ஒரு அதிர வைக்கும் ஒலி நாடாவை வெளியிடக் கூடாது என்பதற்காகவே அந்தக் கைது இணைப்பு

சரி.  அந்த கட்டுரை நீக்கப்பட்டதல்லவா..... வழக்கு தொடர்ந்தவரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதல்லவா ?  அந்த வழக்கு அத்தோடு முடிக்கப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா ?  முடிக்கப்படவில்லை.  மாறாக, அந்தக் கட்டுரை நீக்கப்பட்ட பிறகும், வழக்கை ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து நடத்தினார் சி.டி.செல்வம்.  இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறார்.

நக்சலைட்டுகளுக்காகவும், தமிழ் தேசிய போராளிகளுக்காகவும் போராடுவதாக சொல்லிக் கொள்ளும், கடைந்தெடுத்த அயோக்கியனான சங்கரசுப்பு, ஒவ்வொரு வாய்தாவின் போதும், சவுக்கு தளம் எந்த புதிய முகவரியில் இயங்குகிறது என்பதை சி.டி.செல்வத்திடம் கூறுகிறார்.  உடனே வெகுண்டெழும் சி.டி.செல்வம், புதிய முகவரியை தடை செய்ய காவல்துறைக்கு உத்தரவிடுகிறார்.      

சவுக்கு தளம் குறித்தும், சவுக்கு தளத்தை நடத்துபவர் குறித்தும், நன்கு அறிந்த வழக்கறிஞர் பாண்டியன் புகழேந்தி, சங்கரசுப்பு போன்ற சோரம் போன நபரை ஆதரிக்கிறார்.  அவரது கட்சி நடத்தும் மாநாட்டுக்கு, சங்கரசுப்புவை சிறப்பு அழைப்பாளராக அழைக்கிறார். 


தமிழகத்தில், சென்னையில், ஒரு தலித் இளைஞனை பட்டப்பகலில் சுட்டுக் கொன்று விட்டு, இலங்கைக்கு தப்பியோடி, அங்கே அமைச்சராக இருக்கும் கொலைகாரன் டக்ளஸ் தேவானந்தாவை, கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வழக்கு தொடுத்தவர் வழக்கறிஞர் புகழேந்தி.  அந்த கொலைகாரன், இலங்கையில் இருந்தபடியே, வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம், வழக்கை எதிர் கொள்ளலாம் என்று அவனுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தவர் சி.டி.செல்வம்.    

சி.டி.செல்வம் இப்படிப்பட்ட தீயசக்தி என்பதற்காகவே சி.டி.செல்வம் மற்றும் கர்ணன்களை சவுக்கு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. ஆனால், இந்த தீயசக்தியை ஆதரிக்கும் சங்கரசுப்பு போன்ற அயோக்கியனை, சவுக்கு சந்தித்தலேயே மிக மிக நேர்மையான மனிதரான புகழேந்தி ஆதரிக்கிறார்.  நேர்மை என்பது, பணத்துக்கு ஆசைப்படாதது மட்டுமல்ல. தனிப்பட்ட முறையில் நேர்மையாக இருப்பது மட்டுமல்ல. இணைப்பு

ரிப்பனை வெட்டும் சங்கரசுப்பு
அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பதும், குரல் கொடுப்பவர்களை ஆதரிப்பதும் நேர்மையே.   அப்படி குரல் கொடுக்காமல் இருப்பதையும் மீறி, குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக செயல்படுவது, நேர்மையற்ற செயல் மட்டுமல்ல.  பச்சை அயோக்கியத்தனம்.

மன்மோகன் சிங்குக்கும், பாண்டியன் புகழேந்திக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

இணையமும், அரசு அலுவலகங்களும் எப்படி இயங்குகிறது என்பது குறித்து அடிப்படை அறிவு கூட இல்லாத, சி.டி.செல்வம், ஒவ்வொரு வாரமும், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து, (அவரது நீதிமன்ற ஆளுகையின் கீழ் வரவில்லையென்றாலும் கூட) புது புது உத்தரவுகளை பிறப்பிக்கிறார்.   சவுக்கு பெயரே இணையத்தில் இருக்கக் கூடாது என்கிறார்.    சவுக்கின் முகநூல் பக்கத்தை முடக்க உத்தரவிடுகிறார்.    

ட்விட்டர் கணக்கை முடக்க உத்தரவிடுகிறார்.  சவுக்கு நடத்துவதாக சந்தேகப்படும் நபரை ஏன் கைது செய்யவில்லை என்று, காவல்துறை அதிகாரிகளை, அனைவர் முன்னிலையிலும் கேவலமாக பேசுகிறார்.

இதையெல்லாம் இன்னும் உச்சநீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

சி.டி. செல்வம் செய்ததிலேயே உச்சபட்ச அயோக்கியத்தனம், ஒரு தனியார் அமைப்பை சவுக்கு முடக்க அதிகாரம் அளித்தது.   சி.டி.செல்வம், உத்தரவிட்டபோது, சவுக்கு உட்பட, அனைவரும் நினைத்தது, NATIONAL CYBER SAFETY STANDARDS AND SECURITY என்ற அமைப்பு, ஒரு அரசு அமைப்பு என்றே. 

ஆனால், இந்த அமைப்பை உருவாக்கிய, அமர் பிரசாத் ரெட்டி ஒரு அயோக்கியன் என்பது, ரொம்ப தாமதமாகத்தான் தெரிய வந்தது.    ஒரு அயோக்கியனுக்கு அரசு அதிகாரிகளின் அதிகாரத்தை வழங்கிய ஒரே குற்றத்துக்காகவே, சி.டி.செல்வம் சிறையில் தள்ளப்பட வேண்டும்.  ஆனால், நாம் என்ன செய்ய முடியும் புலம்புவதைத் தவிர (வாசகத்துக்கு நன்றி மூத்த பத்திரிக்கையாளர் டி.என்.கோபாலன்) 

கோபாலன் அய்யா...... சவுக்குக்கு புலம்பும் வழக்கம் கிடையாது.  புலம்ப வைக்கும் பழக்கம் மட்டுமே.  இப்போது அமர் பிரசாத் ரெட்டி எப்படி புலம்புகிறார் என்பதை பாருங்கள்.      ஏற்கனவே,  NATIONAL CYBER SAFETY STANDARDS AND SECURITY என்ற அமைப்பு மற்றும், அதன் உரிமையாளர் அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, மத்திய புலனாய்வுத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

அமர் பிரசாத் ரெட்டி மற்றும்,  NATIONAL CYBER SAFETY STANDARDS AND SECURITY எப்படிப்பட்ட மோசடியானவர்கள் என்பதற்கான ஒலிநாடா ஆதாரம் இதோ.  ஒலிநாடாவைப் பற்றி சவுக்கு எதுவும் சொல்ல விரும்பவில்லை.   நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.



Sunday, September 7, 2014

கதாநாயகர்கள்.


ஒரு இணையதளம்நடத்துவதும், அதற்காகபெரும் பிரச்சினைகளைசந்திப்பதும், வீட்டில்இருக்க முடியாமல்தலைமறைவு வாழ்க்கைவாழ்வதும், அதைநடத்துபவருக்கு இயல்பாகஇருக்கலாம். ஆனால், அவருக்கு உதவிசெய்ய ஒருசர்வரை நடத்துபவருக்கு இது இயல்புஅல்ல.    எவனோ ஒருவன், சமுதாயத்துக்காக ஏதோசெய்து கொண்டிருக்கிறான், அவனுக்கு நம்மால்ஆன உதவியைசெய்வோம் என்றுஒரு உதவியைசெய்கிறார்அந்த உதவிக்காககைது. 45 நாள்சிறைவாசம்இதை அவரால்எப்படி எதிர்கொள்ளமுடியும் ?

சாதாரண நடுத்தரகுடும்பம்மென்பொறியாளர் வேலைமனைவி, சகோதரர்கள், என்று நெருக்கமானகுடும்பம். இதுதான்அவரது இயல்பானவாழ்க்கை. திடீரென்றுஒரு நாள், சென்னைக்கு விசாரணைக்குவாருங்கள் என்றுஅழைத்து, அப்படியேகைது செய்து, அவரின் ஒரேதொழில் முதலீடானவிலை உயர்ந்தமேக் சிஸ்டத்தைபறிமுதல் செய்து, 45 நாட்கள் சிறையில்வைத்திருப்பது என்பதைஅவ்வளவு எளிதாகயாராலும் சகித்துக்கொள்ளவோ, ஜீரணித்துக்கொள்ளவோ முடியாதுஆனால், நண்பர்போத்தி காளிமுத்து, இன்முகத்தோடு அதைஏற்றுக் கொண்டுள்ளார்

முதல் முறைகைது  செய்தி கேள்விப்பட்டதும், அய்யோ, அவர்வீட்டுக்கு என்னபதில் சொல்லப்போகிறோம் என்ற பதை பதைப்பேஏற்பட்டதுஆனால், அவர்உறவினர்கள், இந்தசிரமத்தை இன்முகத்தோடுஏற்றுக் கொண்டு, 45 நாட்கள் தாமதத்தைபார்க்காமல், ஒத்துழைத்தனர்

45 நாட்களுக்கு முன்னால், இயல்பாக போத்திகாளிமுத்து விருதுநகர், ராஜபாளையத்தில் தன்வீட்டில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். காவல்துறை ஆய்வாளர்கள்வந்து அழைக்கின்றனர்சென்னை வரும்வரை, காளிமுத்துவுக்கு எதற்காகதன்னை அழைத்தவருகிறார்கள் என்பதேபுரியவில்லை.
 
சென்னை வந்ததும்ஒரு நபர்போத்தியோடு பேசுகிறார். நீதான் சவுக்குநடத்துகிறாயா என்றுபோத்தி அங்குசெல்வதற்கு முன்னதாகவே, போத்தி சவுக்குநடத்துவதாக சந்தேகப்படும் நபரோடு ஃபேஸ்புக் இன்பாக்ஸில்நடத்திய உரையாடல்களைஅச்சிட்டு வைத்துள்ளனர்

போத்தி காளிமுத்து

காலை முதல்இரவு வரைவிசாரணை தொடர்கிறதுஇந்த விசாரணையின்முடிவில், மாலையில், போத்தி சவுக்குநடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரோடு, முகநூலில்சேட் செய்யவைக்க பணிக்கப்படுகிறார்.

அந்த உரையாடலின்போது, போத்தி, தான் ராணுவமற்றும் அணுசக்தி ரகசியங்களைதிருடித் தருவதாகவும், சவுக்கு நடத்தும்நபருக்கு அதுவேண்டுமா என்றும்கேட்கிறார். பின்னர்ஜெயலலிதா டாட்காம் என்றுஇணையதளம் திறந்து, ஜெயலலிதா மீதுகடுமையான தாக்குதல்தொடுக்கலாம் என்கிறார்ஜெயலலிதாவின் ஊழல்களைஅம்பலப்படுத்துவதுதான் தாக்குதல், அவர் பெயரில்இணையதளம் திறப்பதுஅல்ல என்றதும், மீண்டும் நாம்கருணாநிதி டாட்காம் திறக்கலாம்என்கிறார் போத்தி.   போத்தியின் எதிர்புறம்உரையாடுபவருக்கு, போத்திஅந்த நேரத்தில்காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்பதுநன்றாகத் தெரியும்தெரிந்தே கவனமாகபதில் அளித்துக்கொண்டு இருக்கிறார்.   ஒரு கட்டத்தில்எதிர்புறம் உரையாடும்நபர், எரிச்சலாகி, சென்னை காவல்துறைஆணையர் அலுவலகத்தில்இருக்கும் ஒருமுக்கிய அதிகாரியைகெட்ட வார்த்தையில்திட்டுகிறார்.   

அப்போதும் போத்தியை டார்ச்சர் செய்துகொண்டிருந்தவர்  தொடர்ந்துபோத்தியை உரையாடவைக்கிறார்பிறகு, மீண்டும்மற்றொரு அதிகாரியைகெட்ட வார்த்தையில்திட்டிய பிறகுதான்அடங்கினார்கள்அதன் பிறகுதான்அவர்களுக்கு உறைத்திருக்கிறது தாங்கள் தவறான இடத்தில் தவறான வழிகளில் மோதுகிறோமென்று.

இதன் நடுவேவிசாரணயின்போது,  சவுக்கு தளம் நடத்துவதாகக் கூறி போத்தி நடத்தி வந்த சர்வர் தொழிலையும் முடக்குகின்றனர். சர்வரின் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அனைத்தும் முடக்கப்படுகின்றன.  இது போக, போத்தியின் நண்பரின் மின்னஞ்சல் பாஸ்வேர்டை வாங்கி, அதன் ரெக்கவரி பாஸ்வேர்ட், ரெக்கவரி ஈமெயில் உள்ளிட்டவையும் மாற்றப்படுகின்றன.

சரி இத்தனையயும் செய்வது யார் ?   அமர் பிரசாத் ரெட்டி.  ஆந்திராவில் பிறந்து, சந்திரபாபு நாயுடுவின் அடிமையாக வளர்ந்த நபர்தான் இவர்   சென்னை அருகே உள்ள ஆர்எம்கே தனசேகரன் பொறியியல் கல்லூரியில் பி.ஈ முடித்து விட்டு, National Cyber Safety and Security Standards எனும் நிறுவனத்தை உருவாக்குகிறார்.  இந்தப் பெயரைக் கேட்கும் அத்தனை பேரும் இது மத்திய அரசின் ஒரு துறை அல்லது, ஒரு அங்கம் என்றுதான் யோசிப்பீர்கள்.

அமர் பிரசாத் ரெட்டி
பல பேருக்கு உண்மைகள் தெரியாது.   மத்திய அரசு அல்லது, மாநில அரசின் இணைய தளங்கள் அத்தனையும் gov.in அல்லது nic.in என்று முடியும் வகையில் மட்டுமே அமைந்திருக்கும்.   இதை நீங்களோ, நானோ பதிவு செய்ய முடியாது.  அரசு அமைப்புக்கள் மற்றும் அரசு துறைகள் மட்டுமே இத்தகைய பெயருடைய இணைய தளங்களை பதிவு செய்ய முடியும்.  இவ்வாறு முடியும் இணைய தளங்களைத் தவிர்த்த அத்தனை தளங்களும், தனியார் இணைய தளங்களே.

ஆனால் National Cyber Safety and Standards முழுக்க முழுக்க தனியார் நடத்தும் அமைப்பு.  ஆனால், இது ஒரு அரசுத் துறை போல தோற்றம் அளிக்க, மிகவும் மெனக்கிடுகிறார் ரெட்டியார்.  இந்த அமைப்பின் இணைய தளத்தில் சென்று பார்த்தீர்களேயானால், NATIONAL CYBER என்ற வார்த்தை மட்டும், தலைப்பெழுத்தில் எழுதப்பட்டிருக்கும்.  சரி.  தேசிய அமைப்பின் தலைமை அலுவலகம் எங்கே இருக்க வேண்டும் ? டெல்லியிலா இல்லையா ?  ஆனால், இந்த அமைப்பின் அலுவலகம் எங்கே இருக்கிறது தெரியுமா ?

National Cyber Safety and Security Standards
(An autonomous body)
Cyber House – Southern Region,
No: 1, 1st Floor, 1st Avenue,
8th Cross Street, Indira Nagar Main Road,
Adyar, Chennai – 600 020.
Phone No: 044 – 2440 1766.
Email Id : support@nationalcybersafety.com


ஒரு தேசிய அமைப்பின் அலுவலகம் சென்னை அடையாறிலா செயல்படும் ?  மேலும்  அவர்களின் இணைய முகவரி.  www.nationalcybersafety.com என்ற இணையதள முகவரிக்கு சென்றீர்கள் என்றால், அது, மீண்டும் http://ncdrc.res.in/ என்ற முகவரிக்கே மீண்டும் ரீடைரெக்ட் செய்யப்பட்டுள்ளது.  இதெல்லாம் ஒரு ஜெகஜ்ஜால வித்தை நம்பகத்தன்மை ஏற்படுத்த.

மேலும், இந்த இணையதளத்துக்கு சென்று பார்த்தீர்கள் என்றால், முகப்பிலேயே, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி மற்றும் நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்திகள் வரும்.   நரேந்திர மோடி பிரதமரான ஒரு வாரத்துக்குள் இந்த வாழ்த்து செய்தி, இந்த இணையதளத்தில் வந்தது.   பிரதமரான ஒரே வாரத்தில் நரேந்திர மோடி எப்படி இந்த அமைப்புக்கு வாழ்த்து செய்தி வழங்குவார் என்பதுதான் யாருக்கும் புரியாத புதிர்.  

வழக்கமாக, பிரதமர், குடியரசுத் தலைவர் போன்ற பதவிகளில் உள்ளவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கினால், அவர்கள் அலுவலகங்கள் சம்பிரதாயமான வாழ்த்துச் செய்திகளை வழங்குவது வழக்கம்.  இது போன்ற சம்பிரதாயமான வாழ்த்துச் செய்திகளை வைத்துக் கொண்டு, இணைய தளத்தில் பிரசுரித்து, பீற்றிக்கொள்கிறார், தான் ஏதோ முக்கிய புள்ளி என்ற பிரமையினையும் ஏற்படுத்த முயல்கிறார் ரெட்டி.
ஆனால் http://www.ncdrc.res.in/ என்ற இணையதளம், அமர் பிரசாத் ரெட்டியின்  பெயரில், சைபர் ஹவுஸ், சதர்ன் ரீஜியன், 62/3, பாஞ்சாலி அம்மன் கோவில் தெரு, அரும்பாக்கம், சென்னை 106 என்ற முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஒரு தேசிய அமைப்பின் இணையதளம், எதற்காக அரும்பாக்கம் முகவரியில் பதிவு செய்யப்பட வேண்டும் ?


மேலும், இந்த அமைப்பின் முகவரியில் அட்டானமாஸ் பாடி, சுயாட்சி படைத்த அமைப்பு என்று போட்டுள்ளார்கள்.  அதாவது அரசு அமைப்பு ஆனாலும் சுதந்திரமாக செயல்படுகிறது என நம்பவைக்க இந்த பில்டப் எல்லாம்.

இதன் தலைவராக இருப்பவர், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.மோகன்.  நீதிபதியாக இருந்தபோதும் பின்னரும் அவரது செயல்பாடுகளெல்லாம் பல்வேறு வகையான கண்டனங்களுக்கும் ஏளனங்களுக்கும் உள்ளானவை.

நீதிபதி மோகன்

இந்த அமைப்பின் ஆலோசகராக இருக்கும் மற்றொரு முக்கிய புள்ளி, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி. இவர் இன்னுமொரு அற்புத மனிதர்.

நீதிபதி ஜோதி மணி
கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கை ஜோதிமணி விசாரித்தார்.  அந்த வழக்கில் ஒரு எதிர்மனுதாரர், மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம்.  அந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும்போதே, அந்த அமைச்சகத்திடம், தனக்கு பசுமைத் தீர்ப்பாய நீதிபதி பதவி வேண்டுமென்று விண்ணபித்தவர். பின்னர் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்துவிட்டு தீர்ப்பாய பதவியினையும் கூசாமல் ஏற்றுக்கொண்டவர்.  இவர்தான், ரெட்டியார் நடத்தும் National Cyber Safety and Security Standards அமைப்பின் ஆலோசகர். ஆக அமர்பிரசாத் ரெட்டி, மோகன் மற்றும் ஜோதிமணி கூட்டணியில் இயங்கும் அவ்வமைப்பிடம் இன்னொரு அதி யோக்கிய சிகாமணி, நம் நீதியரசர், பெருந்தகை சி.டி.செல்வம் சவுக்கு தளத்தை ஒடுக்கும் பணியினை ஒப்படைக்கிறார்.
சென்னை மாநகர காவல்துறையின், இணைய குற்றப் பிரிவிற்கு மீண்டும் மீண்டும் சவுக்கு தளத்தை முடக்குமாறு சி.டி.செல்வம் உத்தரவிட்டும், அவர்களால் அதை செயல்படுத்த முடியவில்லை.  முடியவில்லை என்றால், ஒரு இணைய தளத்தை முடக்க, இரண்டு காரணங்கள் மட்டுமே அடிப்படையாக இருக்க முடியும்.  தீவிரவாதச் செயலில் ஈடுபடும் இணையதளங்கள்.  குழந்தைகளை வைத்து ஆபாசப்படங்கள் வெளியிடும் இணையதளங்கள்.      இவற்றை மட்டுமே சட்டப்படி முடக்க முடியும்.  இந்த இணையதளங்களின் சர்வர்களுக்கு கோரிக்கை வைப்பதாக இருந்தாலும், இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.  

சி.டி.செல்வம்
மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், நீதியரசருக்கு சட்டத்தையும் யதார்த்தங்களையும் விளக்க இயலாமல் பரிதவிக்கிறது  இணையகுற்றப் பிரிவு, இந்நிலையிலேயே சி.டி.செல்வம், National Cyber Safety and Standards கதைக்குள் வருகிறது.

சாதாரண பொறியியல் பட்டதாரியான அமர் பிரசாத் ரெட்டி, தனக்குத்தானே கொடுத்துக் கொண்ட பதவியின் பெயர் என்ன தெரியுமா ?  ADDITIONAL DIRECTOR GENERAL.   

கணினிமேதை ரெட்டியாரின் இன்னொரு சிறப்புமிகு தோற்றம்
மின்னஞ்சலை ஹேக் செய்த குற்றத்துக்காக ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய புலனாய்வுத் துறைக்கு புகார் அனுப்பிய மறு தினம், யாரோ ஒருவர் அழைத்து, எங்க சார் உங்க கிட்ட பேசணும் என்று சொல்கிறார் என்றார் ஒருவர்.  யாருய்யா உங்க சார் என்றதும், ரெட்டிகாருவே  நான் அமர் பேசறேன்.  என்ன என்னைப் பத்தி பேஸ்புக்கில் எழுதியிருக்கீங்க.... என்றார்.   நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது தெரியும்.  சிபிஐயிடம் புகார் அளித்துள்ளேன்.  அவர்கள் விசாரிப்பார்கள் என்றதும், நான் எதுவுமே செய்யவில்லை என்றார்.   அதை சிபிஐ விசாரித்து சொல்லுவார்கள் என்றதும், எப்படி என்னுடைய புகைப்படங்களை என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினீர்கள் என்றார்.  இதற்கு சைபர் கிரைமில் புகார் அளித்து என் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என்றதும், இணைப்பை துண்டித்துவிட்டார். அவர் புகார் செய்தாரா, வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டதா, முதலில் இப்படி ஹாக் செய்யும் உரிமை அவருக்கிருக்கிறதா, எல்லாம் விரைவில் தெரியவரும்.


ஒரு தனியார் அமைப்பையும், அதை நடத்தும் ஒரு தனியார் நபரையும், ஒரு காவல்துறையின் புலனாய்வில் அமர வைத்து, கைது செய்யப்பட்டவரை விசாரிக்க அனுமதித்த, இணைய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஜார் ரோஸ் அவர்களுக்கும் இந்த நேரத்தில் எனது கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.  காவல்துறையின் பணி என்பது, Sovereign Function.  அதை அரசு அதிகாரிகள் மட்டுமே செய்ய முடியும்.  எருமைக் கிடா போன்ற ஒரு தனி நபரை, சைபர் கிரைம் அலுவலகத்துக்குள் நுழைய விட்டதே மிகப்பெரிய குற்றம்.   அதோடு நில்லாமல், இன்னொருவர் மின்னஞ்சலை சைபர் கிரைம் அலுவலகத்தில் வைத்தே திருட அனுமதித்ததும், ஒரு இணைய தளத்தின் சர்வரை திருட்டுத்தனமாக முடக்க அனுமதித்ததும் மன்னிக்க முடியாத குற்றங்கள். தண்டனைக்குரிய குற்றங்கள்.  இருப்பினும், போத்தி காளிமுத்துவை கண்ணியமாக நடத்திய ஒரே காரணத்துக்காக, சைபர் கிரைம் அதிகாரிகளின் இந்த தவறை, மன்னிக்கலாம். 

இன்று போத்தி காளிமுத்து சிறையிலிருந்து வெளியே வந்து விட்டார். போராட்டத்தோடு, கடினமான சிரமங்களுக்கு இடையே, இணைய தளத்தை நடத்துவன் கதாநாயகன் அல்ல.  அப்படி நடத்துபவனுக்கு உதவுவதற்காக, 15 நாட்கள் சிறை சென்ற தோழர் முருகைய்யனும், 45 நாட்கள் சிறை சென்ற போத்தி காளிமுத்துவுமே கதாநாயகர்கள்.   

அவர்களை கொண்டாடும் இந்த நேரத்தில், போத்தி காளிமுத்து சிறையிலிருந்து வெளி வர பெரும் உதவிகளை புரிந்த, வழக்கறிஞர்கள் மணிகண்டன் மற்றும் சண்முகம் ஆகியோருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.   போத்தி காளிமுத்துவை, கைது செய்யும்போது மட்டுமல்லாமல், பின்னர் காவல்துறை கட்டுப்பாட்டில் எடுக்கும்போதும், கண்ணியமாக நடத்திய காவல்துறை அதிகாரிகளுக்கு எனது அன்பார்ந்த நன்றிகள்.  
வழக்கறிஞர் மணிகண்டன்

வழக்கறிஞர் சண்முகம்
போத்தியின் கைதை ஒட்டி, முகநூலிலும், தொலைபேசியிலும், ஆதரவை நல்கிய, நண்பர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு எனது அன்பு நன்றிகள்.

போத்தி காளிமுத்துவை சிறையில் நன்றாக நடத்த உதவி புரிந்த அதிகாரிகள் தங்கள் பெயர்களை குறிப்பிட விரும்பமாட்டார்கள்.  இருப்பினும், அவர்களுக்கும் சவுக்கின் நன்றிகள்.
 
வழக்கறிஞர் இனியவன்
அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அந்த இஸ்லாமிய தோழர்கள், போத்திக்கு சிறையில் பெரும் உதவிகளை புரிந்துள்ளார்கள்.  அவர்களுக்கும் என் நன்றிகள்.   இந்த உதவிகளை போத்தி பெருவதற்கு, ஒரே காரணமாக இருந்த, வழக்கறிஞர் மற்றும் தோழர் இனியவன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

மீண்டும் மீண்டும் சொல்வது ஒன்றே ஒன்றுதான்.  சவுக்குக்கு ஒரு நாளும் மரணம் கிடையாது. ஆயிரம் செல்வங்கள் வரட்டும்.  சவுக்கு தொடர்ந்து இயங்கும்.