Sunday, August 3, 2014

நீதியின் மரணம்.


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக வழக்குகள் வருகையில், இந்த நீதிபதிகள் பொங்குவதை பார்த்திருக்கிறீர்களா ?  இப்படிப்பட்ட குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.  சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இழைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படாவிட்டால் நாட்டில் இது போன்ற குற்றங்கள் பெருகி விடும்.  இப்படி வளைத்து வளைத்து கருத்து சொல்லுவார்கள் நீதிபதிகள். 


ஆனால்.....  அவர்கள் ஜாதியைச் சேர்ந்த, அதாவது ஒரு நீதித்துறை நடுவர் இதே தவரை செய்தால், இந்த நீதிபதிகள் கையாளும் அளவுகோலே வேறு.  
உமா மகேஸ்வரி.   காவல்துறையில் சேர்ந்து சிறப்பாக பணியாற்றி திருமணம் செய்து, எல்லோரையும் போல வாழ வேண்டும் என்ற கனவோடு வாழ்வை தொடங்கிய பெண்.  

பயிற்சி எஸ்ஐ உமா மகேஸ்வரி
பயிற்சி காலத்திலேயே தங்கராஜ் என்ற வழக்கறிஞரோடு, பழக்கம் ஏற்படுகிறது.  பின்னாளில் அது காதலாக மாறுகிறது.   உமாவுக்கு கன்னியாக்குமரியில் பணி நியமனம் ஆகிறது.  தங்கராஜ், கன்னியாக்குமரிக்கே சென்று உமாவை பார்த்து வருவார்.  உமாவோ எப்படியும் தங்கராஜை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்.  ஆனால், தங்கராஜுக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை என்பதை உமா மிக தாமதமாகத்தான் உணர்கிறார்.

2012 ஜுன் 8ம் தேதி, "வா நாம் திருமணம் செய்து கொள்ளலாம்" என்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு உமாவை அழைத்துச் செல்கிறார். அங்கு சென்றதும், நான் மேஜிஸ்ட்ரேட் வேலைக்கு தேர்வாகி விடுவேன். அதற்கு பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி, உமாவின் மனதை மாற்றி அழைத்து சென்று விடுகிறார்.  

இதற்கிடையே உமா தன் பெற்றோரிடம் தங்கராஜோடு உள்ள காதலை தெரிவிக்கிறார்.  பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

உமா மகேஸ்வரி 24 மனை தெலுங்கு செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர். தங்கராஜோ அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர். எப்படி ஒப்புக் கொள்வார்கள் ?  பெற்றோரின் எதிர்ப்பை தங்கராஜிடம் தெரிவிக்கிறார் உமா.  சரி வா திருமணம் செய்து கொள்ளலாம் என்று 22 ஜுன் 2012 அன்று பழனி முருகன் கோவிலுக்கு அழைத்துச் செல்கிறார் தங்கராஜ். அங்கே சென்றதும், "நாம் ஏன் இப்படி அனாதையாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் ?  பெற்றோர் சம்மதத்துடனேயே திருமணம் செய்வோம்" என்று கூறி பஞ்சாமிர்தத்தை வாங்கி உமாவுக்கு கொடுத்து விட்டு பழனியிலிருந்தும் திரும்புகிறார்கள்.   எப்படியிருந்தாலும் நாம் திருமணம் செய்து கொள்ளத்தானே போகிறோம்.  இனி நாம் ஒன்றாகவே சேர்ந்து வாழ்வோம் என்று கூறி, அன்று முதல், உமா பணியாற்றும் கன்னியாக்குமரி இரணியல் காவல் குடியிருப்பில் இருவரும் ஒன்றாகவே வாழ்கிறார்கள்.

என்னால் அடிக்கடி ஈரோட்டிலிருந்து கன்னியாக்குமரி வர இயலாது. ஆகையால் நீ,  ஈரோடு மாவட்டத்துக்கு மாறுதல் வாங்கி வா என்று தங்கராஜ் கூறியதும், உமா முயற்சி செய்து திருப்பூர் மாவட்டத்துக்கு மாறுதல் வாங்கி வருகிறார். தங்கராஜின் பெற்றோர்களும் உமாவோடு நெருங்கிப் பழகுகின்றனர். 

11 அக்டோபர் 2012ல் மேஜிஸ்டிரேட்டாக தங்கராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதவியேற்கிறார்.  அதையொட்டி உமாவும், தங்கராஜின் பெற்றோரும் சென்னை செல்கின்றனர்.  பதவியேற்பு முடிந்ததும், எனக்கு குன்னூர் மேஜிஸ்ட்ரேட்டாக பணி நியமனம் கிடைத்துள்ளது.   சென்னையில் மூன்று மாதங்கள் பயிற்சி, பயிற்சி முடிந்து பதவியேற்றதும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறுகிறார்.

மேஜிஸ்ட்ரேட் ஆனதும் தங்கராஜின் நடவடிக்கைகளில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன.   இத்தனை நாள் காதல் கசிந்துருக பேசிக்கொண்டிருந்த தங்கராஜ், ஏப்ரல் 2013ல் தன் சுயரூபத்தை உமாவிடம் வெளிப்படுத்துகிறார். "என் தம்பியை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும்.   அதற்கு 20 லட்ச ரூபாய் செலவாகும்.  எங்கள் வீட்டில் பார்க்கும் பெண்ணை நான் திருமணம் செய்தால், 100 பவுன் நகையும், 50 லட்ச ரூபாய் வரதட்சிணையும் அளிப்பார்கள்.  ஆகையால் இதையெல்லாம் நீயும் தந்தால்தான் என் வீட்டில் திருமணத்துக்கு சம்மதிப்பார்கள் என்று கூறுகிறார்.

உமாவுக்கோ பெருத்த அதிர்ச்சி.  சரி. ஏதோ கோபத்தில் பேசுகிறார். பின்னர் பேசி சரி செய்து கொள்ளலாம் என்று விட்டு விடுகிறார்.  இந்த நிலையில், உமா பணிக்கு சென்றிருந்தபோது, 14 ஏப்ரல் 2013 அன்று வீட்டுக்கு சென்ற தங்கராஜ், உமா, தங்கராஜ் இருவரும் பரிமாறிக் கொண்ட பரிசுப் பொருட்கள், உமாவின் டைரி, இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் என்று உமாவும், தங்கராஜும் காதலித்ததற்கான அனைத்து ஆதாரங்களையும் ஓசையின்றி எடுத்துச் சென்று விடுகிறார்.

இதற்குப் பிறகு, உமாவின் தொலைபேசி அழைப்புகளை தங்கராஜ் எடுப்பதில்லை.   போதாத குறைக்கு, அவரது நண்பர் வழக்கறிஞர் பிரகாஷை விட்டு, உமாவை தொலைபேசியில் மிரட்டுகிறார். "என் நண்பனை விட்டு விடு.   தொல்லை கொடுத்தாயென்றால், உன்னை லாரி ஏற்றி கொன்று விட்டு ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தி விட்டு சென்று விடுவோம்" என்று மிரட்டுகிறார்.  ஆனால், எப்படியும் தங்கராஜ் தன்னை கை விட மாட்டார் என்ற நம்பிக்கையில் உமா தொடர்ந்து அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறார். 

இதற்கிடையே தங்கராஜின் பிறந்தநாளுக்காக, ஒரு புதிய மொபைல் போனை வாங்கி ஒரு பையனிடம் அளித்து, குன்னூரில் தங்கராஜிடம் கொடுத்து விடுமாறு அனுப்பி வைக்கிறார் உமா.  போனை கொடுக்கச் சென்ற அந்த பையன் திரும்பி வரவில்லை. தகவலும் இல்லை.  பயந்து போன உமா, உடனடியாக குன்னூர் கிளம்பிச் செல்கிறார்.   அங்கே சென்று தங்கராஜை சந்தித்ததும், உன்னை நான் தொடர்பு கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியும், ஏன் என்னை பின்தொடர்ந்து வந்து தொல்லை செய்கிறாய் என்று கூறி, உமாவை அடிக்கிறார்.    சிறிது நேரத்தில், தங்கராஜின் நண்பர் பிரகாஷ் என்ற வழக்கறிஞரும் வருகிறார். அவர் வந்ததும் மீண்டும் அடிக்கிறார் தங்கராஜ். 

இதற்குப் பிறகு, தங்கராஜ், உமாவின் உயரதிகாரியான டிஎஸ்பியிடம் புகார் அளிக்கிறார். உமா என்னை போனில் தொடர்ந்து தொல்லை தருகிறார்.  நான் மேஜிஸ்டிரேட்டாக இருக்கிறேன்.  என்னால் என் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை என்று புகார் அளிக்கிறார்.   அவர்கள் நடந்த விஷயத்தை விசாரித்த பிறகு, மூன்று மாதங்களுக்குள் தங்கராஜ் உமாவை திருமணம் செய்து கொள்வதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், தங்கராஜை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று உமாவுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைக்கின்றனர்.  

இந்த நிலையில் உமாவுக்கு குன்னூரிலிருந்து போன் வருகிறது. தங்கராஜுக்கு திருமணம் நடக்கப் போவதாக தகவல் வருகிறது. உடனடியாக ஊட்டிக்கு கிளம்பிச் சென்ற உமா, மாவட்ட நீதிபதியை சந்தித்து புகார் அளிக்கிறார்.  மாவட்ட நீதிபதி, தங்கராஜை நேரில் சென்று சந்திக்கச் சொல்கிறார்.   தங்கராஜ் உமா வந்திருப்பது அறிந்ததும், ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு போன் செய்து, ஒரு பெண் நீதிமன்றத்தில் வந்து கலாட்டா செய்வதாக கூறுகிறார்.    உடனடியாக காவல்துறையினர் அந்த இடத்துக்கு வந்து உமாவை விசாரிக்கிறார்கள். உமாவும் உதவி ஆய்வாளர் என்று அறிந்ததும் என்ன செய்வது என்று அவர்கள் யோசித்துக் கொண்டிருப்பதற்குள், தங்கராஜ் நீதிமன்றத்தை விட்டு தப்பிச் செல்கிறார்.

இனியும் தாமதித்தால் கதை நடக்காது என்பதை உணர்ந்த உமா, உடனடியாக ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தங்கராஜ் மீது ஒரு புகார் அளிக்கிறார்.  23 ஜுன் 2013 அன்று நடக்க இருக்கும் திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு புகார் அளிக்கிறார்.





எஸ்.பி, டிஐஜி மற்றும் ஐஜியிடமும் தங்கராஜ் மீது புகார் அளிக்கிறார். 
20 ஜுன் 2013 அன்றே தங்கராஜுக்கு திருமணம் நடந்து முடிந்து விட்ட விபரம் உமாவுக்கு தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைகிறார்.   தங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உயர்நீதிமன்றப் பதிவாளர், தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு புகார் அனுப்புகிறார்.  புகார் ஃபேக்ஸ் மற்றும் பதிவுத் தபாலில் அனுப்பப்படுகிறது.

24 ஜுன் அன்று சென்னை வந்த உமா, அப்போதைய தலைமை நீதிபதி அகர்வால், ஊட்டிக்கு பொறுப்பான நீதிபதி எலிப்பி தர்மாராவ் மற்றும் பதிவாளர் ஆகியோரை சந்தித்து நேரில் புகார் அளிக்கிறார்.  அவர்கள் மூவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில்தான், 29 ஜுன் 2013 அன்று உமாவின் புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல்துறையினர், தங்கராஜை கைது செய்தனர். 


மறுநாளே தங்கராஜ் ஜாமீனில் விடப்பட்டார்.  சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுத்தது.

Blatant misuse of powers and showing scant regard and disrespect to the guidelines issued by the Supreme Court, have compelled us to take a suo motu action for contempt by five police officers and three constables," the first bench comprising acting Chief Justice R K Agrawal and Justice M Sathyanarayanan said. 

"By this action, they (police) had lowered the authority of the court in the eye of the general public, which prima facie amounts to contempt of court,"

பொதுமக்களின் பார்வையில் நீதிமன்றத்தின் மாண்பு குறைந்து விட்டது என்று, தலைமை நீதிபதி அகர்வால் தலைமையிலான அமர்வு, மாவட்ட கண்காணிப்பாளர் பொன்னி, உடுமலைப்பேட்டை டிஎஸ்பி பிச்சை, பல்லடம் டிஎஸ்பி சுரேஷ்குமார், உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மற்றும் ஆய்வாளர் சாந்தமூர்த்தி ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றமும், மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தற்போது, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளன.

உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி திரும்பும் எஸ்.பி பொன்னி மற்றும் காவல்துறை அதிகாரிகள்

குற்றவாளியான தங்கராஜை, உயர்நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே உள்ள தீர்ப்புத் திரட்டு என்ற பிரிவில் நியமித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.  அவர் நிம்மதியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.  

உமா மகேஸ்வரியின் தந்தை, சாலையில் தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்று வாழ்வை நடத்துபவர்.   அவர் தாயார் வேலைக்கு செல்வதில்லை. இப்படியொரு வறுமையான சூழலில் படித்து, உதவி ஆய்வாளர் வேலையில் சேர்ந்துள்ளார் அவர்.   உமாவுக்கு நேர்ந்த இந்த அவலம், சமூகத்தில் எந்த பெண்ணுக்கு வேண்டுமானாலும் நேரலாம்.    இது போன்ற உமாக்களை ஏமாற்றும் கயவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் சட்டமும் நீதிமன்றங்களும் இருக்கின்றன.

ஆனால், சட்டப்படி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக, ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், இன்று நீதிமன்றத்துக்கு நடையாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.   இவர்கள் செய்த குற்றம், நீதிபதியை கைது செய்வதில் உச்சநீதிமன்றம் வகுத்துள்ள விதிகள் மீறப்பட்டுள்ளதாம்.  

எந்த ஒரு நபரையும் கைது செய்கையில் என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் டி.கே. பாசு என்ற வழக்கில் விரிவாக தீர்ப்பளித்துள்ளது. இந்தக் கட்டளைகள் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பலகையாக வைக்கப்பட வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு மீறப்பட்டால், உச்சநீதிமன்றம் வரவேண்டியதில்லை. அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களிலேயே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கலாம் என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

எந்த காவல் நிலையத்திலாவது இப்படியொரு பலகையை பார்த்திருக்கிறீர்களா ?  இந்த தீர்ப்பை இந்தியாவில் எந்த காவல்துறையும் பின்பற்றுவதில்லை.  தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு கைதுகளின்போதும், டி.கே பாசு வழக்கில் வழங்கப்பட்டுள்ள கட்டளைகள் மீறப்பட்டுக் கொண்டுதான் உள்ளன. 

இதற்கெல்லாம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுத்துள்ளனரா சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ?    நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்த இதே தலைமை நீதிபதி அகர்வாலை சந்தித்துத்தானே பாதிக்கப்பட்ட உமா மகேஸ்வரி புகார் அளித்தார் ?   
சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால்
உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டு, தங்கராஜை பணி இடைநீக்கம் செய்திருந்தால் காவல்துறை ஏன் வழக்கு பதிவு செய்திருக்கப் போகிறது ? நீதிபதிகள் என்றால் அவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாதா ?  

தங்கராஜ் போன்ற அயோக்கியன் இருக்க வேண்டிய இடம் சிறை அல்லவா ?  அந்த தங்கராஜை பாராட்டி, சீராட்டி, தங்கள் பாதுகாப்பிலேயே பணியாற்ற வைத்து விட்டு, நியாயமாக சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரிகளை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அலைக்கழிப்பதற்கு, இந்த நீதிபதிள் வெட்கப்பட வேண்டும். காவல்துறையின் நடவடிக்கையால், பொதுமக்கள் மத்தியில் நீதித்துறையின் மாண்பு குறையவில்லை.  ஒரு அயோக்கியனை காப்பாற்ற தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகளால்தான், நீதித்துறையின் மரியாதை, மாண்பு பொதுமக்களிடையே காற்றில் பறக்கிறது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்து வரும், நீதிபதிகள் பால் வசந்தகுமார் மற்றும் சத்யநாராயணா ஆகியோர் நல்ல நீதிபதிகள்.   அவர்கள் வீட்டில் உள்ள ஒரு பெண்ணை,  தங்கராஜ் போன்ற அயோக்கியன் ஒருவன் இப்படி ஏமாற்றியிருந்தால் அவர்கள் அந்த அயோக்கியனை சிறையில் அடைக்க சொல்வார்களா ?  அல்லது, வேலை கொடுத்து காப்பாற்றுவார்களா ? 

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கால் நடந்த மற்றொரு அநியாயம் என்ன தெரியுமா ?  தங்கராஜ் கைது நடந்து இரண்டு மாதங்களுக்குள், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட நீதிபதியாக இருந்தவர் நாகநாதன்.   இவரது வீட்டுக்கு பாதுகாப்புக்காக, ஆயுதப்படையை சேர்ந்த ஒரு பெண் காவலர் நியமிக்கப்பட்டிருந்தார்.  இரவு 10.30 மணிக்கு, நன்றாக குடித்து விட்டு, அந்த பெண் காவலரை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்க முயன்றிருக்கிறார் நாகநாதன்.   அந்த பெண் காவலரை நகத்தால் கீறி, பிராண்டி, அவர் உடலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.

தங்கராஜ் கைது சம்பவத்தால், அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.  மாறாக, நாகநாதன் பணி இடைநீக்கம் மட்டும் செய்யப்பட்டார்.    இணைப்பு  

தங்கராஜ் கைது தொடர்பாக நடந்து வரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கால், உமா மகேஸ்வரியின் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் புலன் விசாரணை, அப்படியே தேங்கி நிற்கிறது. 

தங்கள் துறையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அநீதிக்கே நியாயம் வழங்க முடியாத கையறு நிலையில் நிற்கிறது காவல்துறை. எழுத்துபூர்வமாக மன்னிப்பு எழுதிக் கொடுத்தால் வழக்கை முடிக்கிறோம் என்று மிரட்டுகின்றனர் நீதிபதிகள்.  


ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று நம்பவைத்து, இரண்டு வருடம் அவளோடு குடும்பம் நடத்தி, அவள் பெற்ற மாத ஊதியத்தையெல்லாம் வாங்கி செலவு செய்து, மேஜிஸ்ட்ரேட் ஆகி விட்ட ஆணவத்தில், அந்த அப்பாவிப் பெண்ணை தெருவில் விட்டு விட்டு, நீதித்துறை தரும் பாதுகாப்பில் திமிரோடு அலைகிறான் ஒருவன்.   அந்தப் பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டிய நீதிபதிகளோ, அந்தக் கயவனை காப்பாற்றுவதில் மும்முரமாக இருக்கிறார்கள்.   இதில், தங்கராஜ் தலித், அதனால் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று வேறு ஒரு குழு கிளம்பியிருக்கிறது.   தலித்  உயர்சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஏமாற்றினால், அது குற்றமாகாதா ?

இதுதான் நீதிபதிகள் நீதி பரிபாலனம் செய்யும் லட்சணம்.   பாரபட்சமான உங்கள் நீதி பரிபாலனத்தைப் பார்த்து ஊரே கை கொட்டி சிரிக்கிறது நீதிபதிகளே.  ஒரு அபலைப் பெண்ணுக்கு நியாயம் வழங்காமல், அவளை ஏமாற்றிய அயோக்கியனை பாதுகாக்கும் உங்கள் நீதித்துறையின் லட்சணம் கடும் கண்டனத்துக்கு உரியது.  

இனியாவது தாமதம் செய்யாமல், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் பால் வசந்தகுமார் மற்றும் சத்யநாராயணா ஆகியோர் உடனடியாக கை விடுவார்கள் என்று நம்புகிறோம்.

நாளை வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் இடம் பெறாதீர்கள் நீதிபதிகளே.....   இந்த அபலைப் பெண்ணுக்கு நீங்கள் வழங்கும் நீதி இதுதானா ? 

8 comments:

  1. அடுத்த பங்சாயாத்‌தா...இன்னும் மஹா வழக்கே முடியல...அதுக்குள்ளயேயா !!! ஆனாலும், உமது நேர்மைக்கு ஒரு அளவே இல்லை

    ReplyDelete
  2. boss, seriously the more i have been reading savukku i now feel Indian Judiciary is far more worse than our Political system (read Politicians)...

    ReplyDelete
  3. படித்த நீதிபதிகள் எப்படி சாதியை பிடித்துக் கொண்டார்கள் என்று புரியவில்லை. கவர்ச்சியை மட்டுமே தரும் பத்திரிக்கைகள் இது போன்ற குற்றங்களுக்கு முக்கியக் காரணம்.

    ReplyDelete
  4. வெ.ரங்கநாதன்..உடுமலைப்பேட்டை.August 4, 2014 at 4:14 AM

    சட்டம் தன் கடமையைச் செய்யும்? நீதிபதிகளுக்கு தனியான சட்டம் போலும் இந்திய தண்டனைச்சட்டத்திற்குள் வரமாட்டார்களோ?பெரிய இடத்து தப்பு பெருமாள் தப்போ? சாதியப்போர்வைக்குள் ஒளிந்து தப்ப முயல்வதை விட அவமானம் வேறெதுவும் இல்லை.

    ReplyDelete
  5. அண்ணா, பிளாக் டெம்ப்ளேட்டை மாற்றுங்க.. பதிவை வாசிக்க மிக சிரமமா இருக்கு.

    ReplyDelete
  6. peththavangala mathikkalainna ippadiththaan

    ReplyDelete
  7. who told her to love?? if she is not going respect her parents the world will not respect her.. but i'm not supporting that chakliyan. he must be punished .!!!

    ReplyDelete
  8. who told her to love? if she is not going to respect her parents then the world will not respect her.. but im not supporting that chakliyan he must be punished

    ReplyDelete