Monday, September 7, 2009

நீலாங்கரை இரட்டைக் கொலை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி !



சென்னையை அடுத்த பனையூரில், கடந்த 24.08.2009 அன்று இளங்கோவன் செட்டியார் மற்றும் அவரது மனைவி ரமணி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது மருமகள், காயமடைந்தார். இக்கொலை வழக்கில், ராஜன் எனும் சண்முகசுந்தரம் என்பவர், இக்கொலையை செய்ததாக சந்தேகிக்கப் பட்டு பொதுமக்களால் பிடிக்கப் பட்டு, காவல்துறை வசம் ஒப்படைக்கப் பட்டார்.

சம்பவம் நடந்த இடம், நீலாங்கரை காவல்துறை சரகத்துக்குள் வந்தாலும் ஏனோ ராஜன் அடையாறு காவல் நிலையத்துக்கு கூட்டிச் செல்லப்பட்டார். அடையாறு காவல்நிலையத்தில், ராஜன் இணை ஆணையர் வி.ஏ.ரவிக்குமார், துணை ஆணையர்கள் மவுரியா, சம்பத்குமார், திருஞானம் மற்றும், உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்களால் சராமரியாக தாக்கப் பட்டுள்ளார். இது போதாதென்று ராஜனின் மனைவி மற்றும் தம்பியை காவல்நிலையத்துக்கு வரவழைத்து, அவர்கள் முன்னிலையிலேயே ராஜன் கடுமையாக தாக்கப் பட்டுள்ளார். காவல்துறையின் கொடும் தாக்குதலில், ராஜன் அடையாறு காவல் நிலையத்திலேயே இறந்தார்.

ராஜன் இறந்தவுடன், செய்வதறியாது திகைத்த காவல்துறையினர், அவரை அடையாறு மலர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டார் என்று அறிவிக்கப் படுகிறார்.

இதற்குப் பிறகுதான் காவல்துறையினரின் “அந்தர் பல்டி“ ஆரம்பமாகிறது. ராஜன் மற்றும் நீலாங்கரை இரட்டைக் கொலை பற்றி காவல்துறை எடுத்து விட்ட புளுகுகளில் சில....

1) ராஜனை வளைத்துப் பிடித்த பொதுமக்கள் அவரை கடுமையாக தாக்கியதால் இறந்தார் (அப்போ போலீஸ் ஸ்டேஷனுக்கு டெட் பாடியவா தூக்கிட்டு போனீங்க...)

2) ராஜன் ஒரு பெரும் குற்றவாளி.
(அதுனால அடிச்சு கொல்வீங்களா ?)

3) இந்த விஷயத்தில், நில பேரங்கள் எதுவும் இல்லை. ராஜன் பணத்தையும் நகைகளையும் கொள்ளையடிக்கவே வந்தார் (அப்புறம் எதுக்கு கொள்ளையடிச்சு முடிச்சும் கூட, தப்பிச்சு போகாம அங்கேயே சுத்திக்கிட்டு இருந்தார்)

4) ராஜன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன (கேச நடத்தி தண்டனை வாங்க வேண்டியதானே ? எதுக்கு அடிச்சுக் கொன்னீங்க ?)

5) ராஜன் இதய நோயாளி (இது ராஜன் செத்தபுறம் தான் தெரிஞ்சுதா ?)

6) ராஜன் பொதுமக்களை நோக்கி சுட்டார், குண்டுகள் தீர்ந்ததால், பொதுமக்கள் அவரை வளைத்துப் பிடித்தனர் (கைல கத்தி இருந்தாலே நம்ப ஜனங்க கிட்ட போக மாட்டாங்க, துப்பாக்கி வைச்சு இருக்கற ஆளு கிட்ட போவாங்களா,,, ? என்னா பாசு ?)


7) ராஜனிடம் இருந்தது நாட்டுத் துப்பாக்கி (அப்போ வீட்ல இருந்து போலீஸ் எடுத்தது அயல்நாட்டுத் துப்பாக்கியா ?)


8) ராஜனிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன (மொத்தமா எத்தனை துப்பாக்கின்னு சொல்லிட்டீங்கன்னா எழுதி வைச்சுக்கிறோம்)

9) காவல்துறையினர் ராஜனை துன்புறுத்தவேயில்லை (அப்புறம் எப்படித்தாங்க அவர் இறந்தார்)

10) கைது செய்யப் படுகையில், ராஜன் உடல்நிலை சரியில்லை என்று தெரிவிக்கவில்லை (நீங்கதானே பொதுமக்கள் அவர அடிச்சாங்கன்னு சொல்றீங்க, அப்போ நீங்கதோனே அவர ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகனும்.)

11) பொதுமக்கள் தாக்கியதால் ராஜனுக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அவர் இறந்தார் (உள்காயம் இருக்கற ஆள, போலீஸ் அடிச்சா என்னங்க ஆகும் ?)

12) ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. (தமிழ்நாட்டுல என்னைக்குங்க ஆர்.டி.ஓ விசாரணை உண்மைய சொல்லிருக்கு ?)

13) இரண்டாவது முறை ராஜன் வீட்டில் சோதனை செய்தபோது பீகார் மற்றும் ஆந்திரா சென்று வந்ததற்கான ரயில் டிக்கட்டுகள் கிடைத்தன (அப்போ மொதல் முறை சோதனை செய்யும்போது ஒழுங்கா பண்ணலையா ?)

14) இரட்டைக் கொலை வழக்கில் ஒரே சாட்சியான மருமகள் வசந்தி, போலீசாரால் பாதுகாப்போடு பிரான்ஸ் அனுப்பி வைக்கப் பட்டார் (உண்மை எப்படியும் வெளியே வந்திடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கீங்க)

15) வசந்தி சிகிச்சைப் பெற்ற மலர் மருத்துவமனை 4வது தளத்தில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப் படவில்லை (யாராவது வசந்திக்கிட்ட பேசினா உண்மை வந்துடும்னு தானே யாரையும் விடலை.....)


இவ்வழக்கில், காவல்துறையினர், ராஜனை அடித்து கொன்று விட்டார்கள் என்பதுதான் உண்மை. இதை மறைக்க முன்னுக்குப் பின் முரணாக பல தகவல்களை அளித்து வருகின்றனர் காவல்துறையினர்.

சிறைபட்டோர் உரிமை மையத்தின் இயக்குநர் புகழேந்தி, ராஜனின் லாக்கப் மரணத்துக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப் படவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு, நீதிபதிகள் கோகலே மற்றும் ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அரசு தரப்பின் பதில் என்ன என்று கேட்டபோது, ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப் பட்டதாக தெரிவிக்கப் பட்டது. வழக்கு காவல்துறையினர் மீது பதிவு செய்யப்படவேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப் பட்டபோது இதை நாங்கள் எளிதான விஷயமாக பார்க்கவில்லை என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், பதிவு செய்யப் பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை மற்றும் விபரங்களை உடனடியாக வரும் செவ்வாயன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


ஒப்பாரி

3 comments:

  1. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

    இவண்
    உலவு.காம்

    ReplyDelete
  2. பாவம் தாங்கள் செய்யும் தவறுகளை யாரும் தட்டி கேட்க போவதில்லை என்ற ஒரு குருட்டு நம்பிக்கையில் இருக்கின்றனர் காவல்துறையினர்.அவர்களின் குருட்டு நம்பிக்கைக்கு அடி கொடுத்து நீதியை பெரும் முயற்சியில் களமிறங்கியுள்ள சவுக்கு தளத்திற்கும் வழக்குரைநர் புகழேந்திக்கும் வாழ்த்துக்கள்.

    -மாயாவி

    ReplyDelete
  3. ஒரூ அரசாங்கம் நினைத்தால் ஒரு என்ன வேண்டுமானலும் செய்ய இயலும். மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய ”ஓடாதே” நாவல் படித்துப்பாருங்கள்.

    இத்தெல்லாம் இவர்களுக்கு சர்வசாதாரணம்.

    ReplyDelete