Monday, August 11, 2014

வேட்டி கட்டிக்கொண்டு கொள்ளையடியுங்கள்

வேட்டி பிரச்சினை பூதாகாரமாக ஆக்கப்பட்டு இப்போது சட்டமும் வந்தாகிவிட்டது.  தமிழ் இந்து செய்தி இணைப்பு



இவ்வாறாக தமிழ் மரபுகளைக் காத்துவிட்ட புரட்சித் தாய் ஜெயலலிதாவிற்கு பல தரப்பினரும் வாழ்த்துப்பா பாடிய வண்ணமிருக்கின்றனர்.

உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் வேட்டி கட்சிச் சென்றதால், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில் எழுந்த சர்ச்சையை ஒட்டி, 61 பேர் இறந்த முகலிவாக்கம் சம்பவத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் வசதியாக புறந்தள்ளி விட்டு, வேட்டியின் புகழ் பாடி, ஒரு வாரத்துக்கு வேட்டி புராணம் பாடியவண்ணம் இருந்தன.  அந்த ஒரு வாரத்துக்கு சமூக வலைத்தளங்களிலும், தமிழக அரசியல் களங்களிலும், வேட்டியே பிரதான இடத்தைப் பிடித்தது.  

வேட்டி அணிந்த கனம் கோர்ட்டாரை மட்டுமா வெளியில் நிறுத்துகிறது? நீதியையும் கூட தங்களது கட்டிடத்திற்கு வெளியே நிறுத்திவிடும் வல்லமை அதற்குண்டு.

ரசிகர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் முடிவுகளை முன் கூட்டியே இப்படித் தான் இருக்கவேண்டும் என தீர்மானிப்பது, அந்த ஒரு ஆற்றலை வைத்துக்கொண்டு என்ன முடிவு, எத்தனை ரன், எப்போது விக்கெட் என்பதை ஒட்டி சூதாட்டம் இப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பெயர் உலகின் மூலை முடுக்கெங்கும் நாறிப்போனது.
வாரியத்தின் தலைவர் இண்டியா சிமெண்ட்சின் நிர்வாக இயக்குநர் என்.ஸ்ரீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனே சிக்கிக்கொண்டார். ஒரு கட்டத்தில், இந்திய உச்சநீதிமன்ற உத்திரவின்பேரில் ஸ்ரீனிவாசன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தே தற்காலிகமாக விலக நேர்ந்தது.

குருநாத் மெய்யப்பன் 

இப்போதோ அவர் அகில உலக கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவராகவே ஆகிவிட்டார், என்னய்யா சுப்ரீம் கோர்ட் ஜூஜூபி என்கிறார் அவர்.

அவரைப் பற்றிய சில செய்திக்குறிப்புக்கள்



எத்தனை ஊழல் புகார் வந்தாலும் அசராமல் உடும்புப் பிடியாய் பதவிகளைத் தக்கவைத்துக்கொள்வதில் ஸ்ரீனிவாசனுக்கு இணை ஸ்ரீனிவாசன்தான்.
டைம்ஸ் ஆஃப் இண்டியா ஆங்கில நாளேடு வளைத்து வளைத்து அவரைத் தாக்கி எழுதியது


ஆனால் இறுதியில் இவர்களே வாலைக் குழைத்துக்கொண்டு சென்று அவர் முன் மண்டியிட்டு  டைம்ஸ் நௌ


டைம்ஸ் ஆஃப் இண்டியா


என மானாவாரியாகப் பேட்டிகள்.

இப்படி உச்சநீதிமன்றம், பெரும் மீடியாக் குழுமங்களையே அசரவைக்கும் ஆற்றல் படைத்த ஸ்ரீனிவாசனுக்கு தமிழக அரசு எம்மாத்திரம்?



அவர் திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கம் என்பது மட்டுமே பலருக்குத் தெரியும். ஆனால் ஜெயலலிதா உட்பட அனைத்து அரசியல் புள்ளிகளும் அவரது கோட் பைக்குள் என்றால் மிகையாகாது.

வேட்டி பிரச்சினையில் இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் வண்ணம் முழங்கிய புரட்சித் தலைவி பல கோடிக்கணக்கான ரூபாய்களை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தாரை வார்த்திருக்கும் கதையைத் தான் நீங்கள் இப்போது படிக்கவிருக்கிறீர்கள்.

கட்டுமரம், ஜெஜெ என முதல்வர் மாறினாலும் கிரிக்கெட் முதலைகளின் ஆதிக்கம் தொடர்கிறது, இன்னமும் வலுப்பெறுகிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 1860ம் ஆண்டு, கூட்டுறவு பதிவுச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கம். 1 மே 1953 அன்று இச்சங்கம் பதிவு செய்யப்பட்டது. 



இச்சங்க பதிவு ஆவணங்களின்படி, இதன் நோக்கம், தமிழகத்தில் கிரிக்கெட்டை கட்டுப்படுத்துவது, கிரிக்கெட் தொடர்பான முடிவுகளை எடுப்பது, கிரிக்கெட் விளையாட்டை பரப்புவது, கிரிக்கெட் ஆட்டங்களை நடத்துவது, கிரிக்கெட் விளையாட்டின் நலனை உயர்த்துவது ஆகியன.   இந்த சங்கத்தின் பயன்கள், சாதி, இன, பாலின மற்றும் மொழி பாகுபாடு இன்றி அனைத்து பொதுமக்களுக்கும் பயன்படும்.

இந்த அடிப்படையில்தான் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை கிரிக்கெட் கிளப் ஆகிய இரண்டு அமைப்புக்களுக்கும் சேர்த்து 1965ம் ஆண்டு முதல், தற்போது உள்ள சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் குத்தகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.  இந்த இடத்தின் மொத்த அளவு 12 ஏக்கர் 23 கிரவுண்டுகள் மற்றும் 2053 சதுர அடி ஆகும்.



இது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் ஒருவர், "அறுபதுகளின் தொடக்கத்தில் முதலமைச்சராக இருந்த காமராஜருக்கு, மகளிருக்காகவே வெள்ளையர்களால் கட்டப்பட்ட கோஷா மருத்துவமனை என்ற கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கனவு இருந்தது.   பெருகிக் கொண்டு போகும் இந்த மக்கள் தொகைக்கு ஈடு செய்யும் வகையில், ஆசியாவிலேயே பெரிய மருத்துமனையாக கோஷா மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தார்.  கோஷா மருத்துவமனையின் பின்புறம் இருந்த 12 ஏக்கர் நிலத்திலும், மிகப்பெரிய மருத்துவமனை கட்ட வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது.

அவருக்கு பின் முதலமைச்சராக இருந்த பக்தவச்சலமும் காமராஜரின் திட்டத்தை நிறைவேற்ற முனைந்தார்.  அந்த நேரத்தில், கிரிக்கெட் விளையாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் முழுமையாக வைத்திருந்த பார்ப்பனர்கள், காமராஜரை அணுகி, வெள்ளைக்காரனின் விளையாட்டை நாம் விளையாடினால்தான் அவர்களுக்கு நிகராக நாம் வளர முடியும். அவ்வாறு அவர்களுக்கு நிகராக வளர, இந்த இடத்தை ஒதுக்கினால், உலகத்தரத்தில் ஒரு மைதானம் அமைத்து, கிரிக்கெட் பயிற்சி அளிக்கலாம் என்றனர்.

அவர்களை நம்பிய காமராஜரும், பக்தவச்சலத்திடம், இந்த நிலத்தை அவர்களுக்கு ஒதுக்கித் தரும்படி கூறியதன் அடிப்படையிலேயே அந்த இடம் ஒதுக்கப்பட்டது.  ஆனால், அப்படி விளையாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இன்று மது விடுதி நடத்தி, அரை குறை ஆடைகளில் மகளிரை ஆட விட்டு வேடிக்கை பார்க்கின்றனர்" என்று வேதனைப்பட்டார் 

அரசு நிலங்களை அரசு நிலங்களை வணிகமல்லாத நோக்கத்துக்கு வழங்க வேண்டுமென்றால் அந்த நிலத்தின் சந்தை மதிப்பில் ஏழு சதவிகிதத்தை ஆண்டொன்றுக்கு குத்தகைத்தொகையாக செலுத்த வேண்டும். 

1965ம் ஆண்டு முதல், குத்தகை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.  அந்த அடிப்படையில், சராசரியாக ஆண்டுக்கு ரூ 50 ஆயிரம் என்ற அளவில் 06.06.1995 நாளிட்ட அரசாணை எண் 512 மூலமாக, தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் மற்றும், சென்னை கிரிக்கெட் கிளப்புக்கு குத்தகை புதுப்பிக்கப்படுகிறது.   இந்த குத்தகையின் படி, 20.04.1995 முதல் 19.04.2015 வரை, 20 ஆண்டுகளுக்கு இந்த அரசு இடம் கிரிக்கெட்டுக்காக இரண்டு அமைப்புகளுக்கும் வழங்கப்படுகிறது. 



குத்தகைத் தொகை 20.04.1995 அன்று உள்ளபடி, ரூபாய் 50 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டு குத்தகை புதுப்பிக்கப்படுகிறது.   அந்த அரசாணை "இந்த குத்தகை தொகை முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நடப்பில் இருக்கும் என்றும், அதன் பின்னர் மறுபரிசீலனை செய்யப்படும் என்ற சிறப்பு நிபந்தனையின் கீழ் புதுப்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கிறது.   

அதன்படி குத்தகைத் தொகை எப்போது மறு பரிசீலனை செய்யப்பட்டிருக்க வேண்டும் ? 19.04.2000ல்.   குத்தகையை 20 ஆண்டுகளுக்கு  நீடித்தது ஜெயலலிதா.  குத்தகையைத் தொகையை 2000ம் ஆண்டில் மறுபரிசீலனை செய்திருக்க வேண்டியது கருணாநிதி. 

மீண்டும் 2005ம் ஆண்டில் குத்தகைத் தொகையை மறுபரிசீலனை செய்திருக்க வேண்டியது ஜெயலலிதா.    2010ல் மீண்டும் ஆட்சியில் இருந்தது கருணாநிதி. 
ஆனால், இன்று வரை, இந்த குத்தகைத் தொகை மறுபரிசீலனை செய்யப்படவேயில்லை.  1993ம் ஆண்டு முதல் 2014 வரை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் எவ்வளவு சம்பாதித்திருக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை.  

ஆனால், "நான் இருக்கும் வரை வேட்டி இருக்கும்"  என்று வீர முழக்கமிடும் ஜெயலலிதாவுக்கோ, "அய்யகோ... வேட்டிக்கு அவமானமா..... " என்று அரற்றும் கருணாநிதிக்கோ, அரசு நிலத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்களே... அதற்கான வாடகையையாவது குறைந்தபட்சம் மறுபரிசீலனை செய்து உயர்த்த வேண்டும் என்று துளியும் அக்கறை இல்லை.

சரி.   இப்படி மலிவான விலையில் அரசு நிலத்தை கையகப்படுத்தி வைத்திருக்கும் கிரிக்கெட் சங்கத்தினர், அரசுக்கு வருமான வரியாவது ஒழுங்காக செலுத்துகிறார்களா ? அதுவும் கிடையாது.  

2003ம் ஆண்டு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வருமான வரிச்சட்டம் 1961 பிரிவு 12AAன்படி, வருமான வரித்துறையில் பதிவு செய்து கொள்கிறது.  பரோபகார பணிகளில் (Charitable purposes) ஈடுபடும் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அளிக்கும் பிரிவு இது.   1984ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு சுற்றறிக்கையின்படி,

“ ‘charitable purpose’ includes relief of the poor, education, medical relief and the advancement of any other object of general public utility.”

பரோபகார பணிகள் என்றால், ஏழைகளுக்கு உதவுவது, கல்விக்கு உதவுவது, மருத்துவ உதவிகள் செய்வது மற்றும் பொது நன்மைக்கான விஷயங்களில் ஈடுபடுவது. 

இந்தப் பிரிவில் உள்ள "any other object of general public utility" என்பதற்கான புதிய விளக்கம் 01.04.2009ம் ஆண்டு ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம் கொண்டு வரப்படுகிறது. அந்த திருத்தத்தின்படி, வியாபாரம், வணிகம், தொழில் அல்லது இது தொடர்பான பணிகளில் ஈடுபடுவது, பொது நன்மைக்கான பணிகளில் அடங்காது என்று விளக்கம் அளிக்கப்படுகிறது.  

இந்த புதிய விளக்கத்தை அடுத்து, வருமான வரித்துறை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை வரி கட்டுமாறும், பரோபகார பணிகளில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஈடுபடுகிறதா என்று வருமானவரித் துறை விரிவான ஆய்வை மேற்கொள்கிறது.

ஆய்வின் இறுதியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பரோபகார பணிகள் எதையும் மேற்கொள்ளவில்லை, மாறாக வியாபாரத்தில் மட்டுமே ஈடுபடுகிறது என்று முடிவெடுத்து, பரோபகாரப் பணிகளின் கீழ் இருந்த விதிவிலக்கை என்ற பதிவை ரத்து செய்து உத்தரவிடுகிறது.  இதை எதிர்த்து வருமான வரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கிறது கிரிக்கெட் சங்கம்.

மேல் முறையீட்டின் போது, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு அளித்த 26 கோடி ரூபாயை வருமானமாக கருதக்கூடாது, மாறாக அது கிரிக்கெட் வளர்ச்சிக்காக அளிக்கப்பட்ட மான்யம் என்றும், வேறு பல காரணங்களையும் முன்வைக்கிறார்கள்.

வருமான வரித்துறையின் சார்பில், 'தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், போட்டிகள் நடக்கும் சமயங்களில் டிக்கெட் விற்பனை மூலமாக கணிசமான லாபத்தை சம்பாதிக்கிறது, ஐபிஎல் ஆட்டங்களிலும் ஏராளமான வருமானம் வருகிறது.  இது தவிரவும் விளம்பரங்களின் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது,’ என்று வாதிட்டனர். 



எந்தெந்த மாநிலங்களில் போட்டி நடைபெறுகிதோ, அந்தந்த  மாநிலங்களின் கிரிக்கெட் சங்கத்துக்கு, மத்திய கிரிக்கெட் வாரியம், பங்கு பிரித்துத் தருகிறது.
தவிரவும் பெரும்பாலான வருமானம், விளம்பரம் மூலமாகவும், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பதன் மூலமாகவும் வருகிறது.   

ஐபிஎல் என்ற விளையாட்டே முழுக்க முழுக்க வியாபாரம்.  அதில் விளையாடும் வீரர்கள் ஏலம் எடுக்கப்படுகிறார்கள்.  அந்த அணிகள் பல கோடிகள் கொடுத்து வீரர்களை வாங்குகின்றன.  மேலும் வருவாயை பெருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, விளையாட்டைத் தவிர்த்து மற்ற பல வேலைகளிலும் இச்சங்கம் ஈடுபடுகிறது, விளையாட்டை வளர்ப்பதற்காக என்று தொடங்கப்பட்ட இந்த சங்கம், அந்தப் பணிகளைத் தவிர மற்ற எல்லாப் பணிகளையும் செய்கிறது என்று இடித்துரைத்த வருமானவரித் துறை, ஐபிஎல் அழகிகள் ஆட்டத்தை எடுத்துக்காட்டாகவும் கூறுகிறது.  

2008-2009ம் ஆண்டில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மொத்த வருமானம் ரூ 34.25 கோடி.  இதில் ரூ 26.82 கோடி, இந்திய கிரிக்கெட் சங்கம் வழங்கியது.    இதில் ஐபிஎல் நடத்தியதற்காக வழங்கப்பட்ட ரூ 10 கோடியும் அடக்கம்.  ஐபிஎல் 1 நடத்தியதில் கிடைத்த லாபம் ரூ 2.90 கோடி.   அந்த ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வட்டியாக பெற்ற தொகை மட்டும் ரூ 3.47 கோடி.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த தீர்ப்பாயம் -

"ஐபிஎல் ஆட்டங்கள் வெறும் வணிகமே என்பதில் சந்தேகம் இல்லை.   ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் மிகப்பெரும் தொழில் அதிபர்களாகவும், சினிமா நட்சத்திரங்களாகவும் உள்ளனர். அவர்கள் ஏலத்தின் மூலம் வீரர்களை வாங்குகின்றனர். சிறந்த வீரருக்கு அதிகபட்ச விலை தரப்படுகிறது.  ஒவ்வொரு அணியும், சிறந்த வீரரை அதிக விலை கொடுத்து வாங்குகிறது.  இந்த அணிகளில் முதலீடு செய்யும், உரிமையாளர்கள், விளம்பரங்கள் மூலமாகவே தங்கள் மூலதனத்தை மீட்டு எடுக்கிறார்கள்.  ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறுவதே, முதலீட்டாளர்கள் லாபத்தை அறுவடை செய்வதற்காகத்தான்.  ஐபிஎல் விளையாட்டு, பொது நன்மைக்கான பரோபகாரம் என்பதை எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.  ஐபிஎல் விளையாட்டு, பெரும் பணம் புழங்கும் விளையாட்டு.  இன்னும் சொல்லப்போனால், திரைத்துறையைப் போல, அது ஒரு பொழுதுபோக்குத் தொழில். 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஐபிஎல் ஆட்டங்களைத் தவிரவும், நட்சத்திர கிரிக்கெட் நடத்துகிறது.   அதில் திரை நட்சத்திரங்கள் பங்கு பெறுகிறார்கள். இந்த நட்சத்திர கிரிக்கெட்டில் எந்த பொது நன்மையும் இல்லை.   இந்த நடவடிக்கைகள் எல்லாமே, புகழுக்காகவும் பணத்துக்காகவும் நடத்தப்படுவதே. 

வெளிப்படையாக சொன்னால், சிறு வட்டித் தொகை மற்றும் வாடகையை தவிர்த்தால் பெரும்பாலான வருமானம் விளம்பரம் மூலமாக மட்டுமே வருகிறது.    இந்த ஆட்டங்களுக்கான டிக்கெட் விலை மிக மிக அதிகம்.  சாதாரண குடிமகன் டிக்கெட் வாங்கி ஆட்டத்தை பார்ப்பதை நினைத்துப் பார்க்க முடியாத விலையில் விற்கப்படுகிறது.  பொது நன்மை என்பதை, ஏழை மக்களை ஒதுக்கி விட்டு பார்க்க முடியாது.  

பொது நன்மை என்று கூறுகிறீர்களே இந்த கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை சேரிகளில் வாழும் ஏழை மக்களுக்கு வழங்கினீர்களா என்று கேட்டதற்கு, அவர்களுக்கு வழங்குவதில்லை.  ஆனால், சமுதாயத்தின் மிக முக்கிய பிரமுகர்களுக்கு, உரிய வரியை செலுத்திய பிறகு இலவசமாக டிக்கெட் வழங்குகிறோம் என்று பதில் கூறினர். இந்த பதிலில் இருந்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயல்பாடு, பொது நன்மைக்கானது இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.


இன்னும் சொல்லப்போனால், அதிக லாபம் சம்பாதிக்க வேண்டுமென்பதற்காக, சியர் லீடர்கள் என்று கூறப்படும் பெண்களை ஆடவைத்து அதிக விளம்பரப்படுத்தி லாபம் சம்பாதிக்கிறது இச்சங்கம்." என்று கூறிய தீர்ப்பாயம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை வரி செலுத்துமாறும், எந்த சலுகையும் கிடையாது" என்றும் உத்தரவிடுகிறது.

இத்தீர்ப்பின் மூலம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்துக்காக செயல்படவில்லை என்பதும், இதன் செயல்பாடுகள் வணிக நோக்கத்திலேயே என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது. 

அதன்பிறகாவது தமிழக அரசு குத்தகையை மறுபரிசீலனை செய்து, வாடகையை உயர்த்த வேண்டுமா இல்லையா ?  இல்லையே. 2008-2009ம் ஆண்டில் வட்டியாக மட்டும் 2.90 கோடியை சம்பாதித்த ஒரு சங்கத்துக்கு, 12 ஏக்கர்களை வருடத்துக்கு 50 ஆயிரம் வாடகைக்கு வழங்கும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

அரசு நிலங்களை குத்தகைக்கு வழங்குவது குறித்த விதிகள், வருவாய் நிலை ஆணை 24A ல் கூறப்பட்டுள்ளது.  அதன்படி, வணிக நோக்கத்துக்காக இருந்தால் 14 சதவிகிதமும், வணிகமல்லாத நோக்கத்துக்கா இருந்தால் 7 சதவிகிதமும் குத்தகை தொகை வசூலிக்கப்பட வேண்டும் என்றும் அவ்விதி கூறுகிறது.   இந்த விதிகளெல்லாம் வருவாய்த் துறையில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரியாதா ?      அல்லது வருவாய் அமைச்சருக்கு   தெரியாதா  ?  அல்லது   ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும்தான்    தெரியாதா ?

வருவாய் நிலை ஆணை

அமெரிக்க துணைத் தூதரகத்தின் சார்பில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் சர்வதேச பள்ளி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.  இந்தப் பள்ளிக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியது.  இந்த நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட மொத்த பரப்பு  12.42 ஏக்கர்கள்.   முழுவதும் ஒரே இடத்தில் இல்லை.  சென்னை, மயிலாப்பூர், கொட்டிவாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் என வெவ்வேறு இடங்களில் உள்ளது.   அவ்வாறு பிரித்துப் பிரித்துக் கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஆண்டு குத்தகைத் தொகை எவ்வளவு தெரியுமா ?  ரூ 16.25 லட்சம்.  

2000ம் ஆண்டு ஒரு லட்சம் ரூபாயாகவிருந்த குத்தகைத் தொகை,  2005ம் ஆண்டு முதல் 1 லட்சத்து 25 லட்சமாக உயர்த்தப்பட்டது. 

அமெரிக்க நிறுவனத்துக்கு நிலம் வழங்கப்பட்ட அரசாணை

இந்த நிறுவனத்துக்கு இல்லாத சலுகை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எதற்காக ?   

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிககள் யார் தெரியுமா ?  தலைவர் என்.சீனிவாசன்.  துணைத்தலைவர்கள் கல்பாத்தி எஸ்.அகோரம், யு.பிரபாகர் ராவ், எஸ்.ராகவன், மற்றும் முன்னாள் அரசு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்.

இதில் யு.பிரபாகர் ராவ் மற்றும் எஸ்.ராகவன் ஆகியோர் யாரென்று தெரியாது. கல்பாத்தி எஸ்.அகோரம் திரைப்படத் தயாரிப்பாளர்.   பி.எஸ்.ராமன் வழக்கறிஞர்.  இவர்களுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன தொடர்பு ?



ஆனால், இப்படி ஒரு சங்கர மடம் போலத்தான் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தப்பட்டு வருகிறது என்பது முகத்தில் அறையும் உண்மை. 

உச்சநீதிமன்றமே, கிரிக்கெட் லாபியிடம் மண்டியிடும் அளவுக்கு கிரிக்கெட் மாஃபியா இன்று அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் இருந்துகொண்டு உள்ள ஒரு நபர், அந்த வாரியமே நடத்தும் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளும் ஒரு அணியின் உரிமையாளராக இருப்பது ஒரு மிகப்பெரிய மோசடி என்பது குழந்தைக்குக் கூட தெரியும். இதை எதிர்த்து ஏ.சி முத்தையா வழக்கு தொடர்ந்தார்.  அந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜேஎம்.பன்சால் மற்றும் கியான் சுதா மிஷ்ரா ஆகியோர் விசாரித்தனர்.    நீதிபதி பன்சால், சீனிவாசன் தலைவராக தொடர்வதில் தவறே இல்லை என்று தீர்ப்பு எழுதினார்.  க்யான் சுதா மிஷ்ரா, தவறு என்று எழுதினார்.  இதையடுத்து, இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. இது நடந்தது செப்டம்பர் 2011.   ஆனால், இன்று வரை அந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரிக்கவே தொடங்கவில்லை.



என்.சீனிவாசனின் மருமகன் ஐபிஎல் போட்டிகளில் பெட்டிங்கில் ஈடுபட்டு சிக்கியபோதே, தார்மீக அடிப்படையில் சீனிவாசன் பதவி விலகியிருக்க வேண்டும்.  ஆனால், சற்றும் கூச்ச நாச்சமில்லாமல், பதவியில் தொடர்கிறார் சீனிவாசன்.   அதன் பிறகும், அவர் தொடரக்கூடாது, அவர் உரிமை வகிக்கும் அணி மீது பெட்டிங் புகார்கள் இருக்கின்றன என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படுகிறது.  உச்சநீதிமன்றம், ஐபிஎல் போட்டிகளுக்கு மட்டும் வேறு தலைவர் என்று சுனில் கவாஸ்கரை தலைவராக நியமித்து ஒரு வினோதமான தீர்ப்பை வழங்குகிறது.

ஆனால், இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நபரான சீனிவாசன், சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவராகிறார்.  ராய்ட்டர்ஸ், பிபிசி போன்ற ஊடகங்களின் விளையாட்டு நிருபர்களிடம், என்னை பற்றி எழுதினால், இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்களை நீங்கள் பார்க்க அனுமதி மறுப்பேன் என்கிறார்.  அந்த அளவுக்கு அகங்காரத்தோடு நடந்து கொள்கிறார். இந்த மோசடியை உச்சநீதிமன்றமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்றால், கிரிக்கெட் எத்தகைய விஸ்வரூப வளர்ச்சி எடுத்து, அரசியல், அதிகாரம் மற்றும் நீதித்துறையையே ஆட்டி வைக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

என்.சீனிவாசனோடு, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை விவாதிக்கிறார். உயர்நீதிமன்ற நீதிபதிகளோ, சீனிவாசனை பகைத்துக் கொண்டால், கிரிக்கெட் போட்டிகளுக்கு இலவச பாஸ் கிடைக்காது என்பது போன்ற அற்ப காரணங்களுக்காக, சீனிவாசனை மயிலிறகால் வருடிக் கொடுக்கின்றனர். 

எனவேயே 500 ஆண்டுகளானாலும் சேப்பாக்கம் மைதான குத்தகைத் தொகை உயர்த்தப்படப்போவதில்லை, என்ன வருமானம், யார் அனுபவிக்கிறார்கள் என்ற கேள்விமுறையெல்லாம் கிடையாது. விஐபிகளுக்குத் தொடர்ந்து பாஸ் கிடைத்துக்கொண்டிருக்கும், மானாட மயிலாடவுக்கு ஒரு மாற்றாக சியர் லீடர்சை அனைவரும் கண்டு களிக்கலாம்.

இப்பிரச்சினை தொடர்பான ஆவணங்களனைத்தையும் அளித்தும், எந்த பத்திரிகையும் இச் செய்தியினை வெளியிட முன்வரவில்லை. இந்நிலையில் எங்களாலியன்றது தமிழ்கூறு நல்லுலகுக்கு.

என் ஸ்ரீனிவாசன் அவர்களே உங்களுக்குக் கோபம் வந்தால் அது நியாயமானதே. இந்திய கிரிக்கெட்டின் மாண்பினை உலகெங்கும் எடுத்துச் செல்கிறீர்கள் என்பதால் எங்களுக்கும் தமிழன் என்ற முறையில் பெருமைதானே, பாசம்தானே. கட்டுமர விசுவாசத்தில் ஓரளவாவது எங்களுக்கிருக்க வேண்டாமா?


எனவே அறச்சினத்தில் கட்டுரை எழுதிவிட்டோம். ஆனால் உங்களுக்கு உதவவேண்டுமெனவும் நினைக்கிறோம். நீங்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ளவேண்டிய நபர் மேதகு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம்.
எப்படியாவது சவுக்கை ஒழித்துவிடவேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார். இதுவரை அந்த உயரிய நோக்கம் நிறைவேறவில்லை. உங்களுக்குத் தான் எல்லா வழிகளும் தெரியுமே.

நீங்கள் இருவரும் இயற்கையான கூட்டாளிகள். எனவே ஒன்று சேர்ந்து, ஆலோசித்து சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்யுங்கள்.

கட்டுரையையும், இந்தத் தளத்தையும் தடை செய்ய நீங்கள் அணுக வேண்டிய முகவரி.  சவுக்கு தொடர்பான அனைத்து கட்டப்பஞ்சாயத்துகளையும் கவனிப்பவர் இவர் ஒருவரே. 

சிரில் தாமரைச் செல்வம்
சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை 600 104

பின்னால் உள்ள படத்தில், Law என்ற வார்தை தவறுதலாக வந்துள்ளது.

6 comments:

  1. Last sentence is "Super". Edit the "Law" using photo editor.

    Kaali.Krishna

    ReplyDelete
  2. papan oru anti social element they should be removed from the universe

    ReplyDelete
  3. விடிய விடிய கண் விழித்து இதை தட்டச்சி கொடுத்திருக்கிறீகள் போல் தெரிகிறது. (Posted by சவுக்கு at 1:02 AM இதை வைத்துதான் சொல்கிறேன்) ஆனால் நீங்கள் இங்கு சொல்லும் பிரச்சினைகளுக்குதான் விடிவே வர மாட்டென் என்கிறது.

    ReplyDelete
  4. //பின்னால் உள்ள படத்தில், Law என்ற வார்தை தவறுதலாக வந்துள்ளது// - EXCELLENT

    ReplyDelete
  5. பாத்தா பெரிய மனுஷன்கள் மாதிரி இருக்கிறாங்க நடத்தை எல்லாம் மிருகத்தனமா இருக்கே.

    ReplyDelete
  6. Yov Savukku...Last point is really nachunnu irukku...:P

    ReplyDelete